ரமணாசிரமத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. ஒருநாள் உணவுக்குப் பிறகு பக்தர்கள் சிலருடன் ரமண மகரிஷி அமர்ந்திருந்தார். வழக்கத்தைவிட தாமதமாக இரவு உணவை உண்டதால் எல்லோரும் களைப்புடன் இருந்தனர். அப்போது அவர்களுடன் இருந்த சோமசுந்தர சுவாமி என்பவர், தன் வயிற்றைத் தடவியபடி பாடல் ஒன்றைப் பாடினார்.

‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இரு நாளைக்கு ஏலென்றால் ஏலாய்
ஒரு நாளும் என்னோ அறியாய்
இடும்பை கூர் என் வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது’’
ஒருமுறை ஒளவையார் வயிற்றை நோக்கிப் பாடுவது போன்று இயற்றிய பாடல் இது.
‘வயிறே! ஒரு நாள் உணவை உண்ணா மல் இரு என்றால் நீ கேட்பதில்லை. அல்லது இரண்டு நாளைக்குச் சேர்த்துச் சாப்பிடு என்றாலும் அவ்வாறு செய்வதில்லை. நீ மிகவும் துன்பம் தருகிறாய். உன்னோடு வாழ்வது என்பது அரிது’ என்பதே இதன் கருத்து.
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமணர், வயிறு மனிதனை நோக்கிப் பாடுவது போல, அதே பாடலை மாற்றிப் பாடினார்.
‘ஒரு நாழிகை வயிறு எற்கு ஓய்வு ஈயாய் நாளும்
ஒரு நாழிகை உண்பது ஓயாய் ஒரு நாளும் என்னோ அறியாய்
இடும்பை கூர் என் உயிரே உன்னோடு வாழ்தல் அரிது’
இந்தப் பாடலின் பொருள் இதுதான்...
‘ஓ, உயிருக்கு உறைவிடமான மனிதனே! வயிறாகிய எனக்கு நீ ஒரு நாழிகை கூட ஓய்வு அளிப்பதில்லை. ஒரு நாழிகைகூட நீ சாப்பிடு வதை நிறுத்துவதில்லை. என் துன்பம் உனக்குப் புரிவதில்லை. எனக்குத் தொல்லை தரும் என்னுயிரே! உன்னோடு வாழ்தல் அரிது.’ இதுபற்றி கூறும்போது `விளையாட்டுக்காக எழுதிப் பாடினேன்’ என்றாராம் மகரிஷி. ரமணரது இந்த பாடல், வயிற்றை நோக்கிப் பாடிய ஒளவையாருக்கு, வயிறே பதில் சொல்வது போல் அல்லவா தெரிகிறது!