ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த ஆன்மிகத் தகவல்கள் மற்றும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு வாசகர்களே தகவல் பகிரும் பகுதி இது. ஆன்மிகம் தொடர்பான உங்களின் சந்தேகங்கள், தேவைப்படும் தகவல்களை நீங்கள் கேள்வியாகக் கேட்கலாம். அத்துடன் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, துல்லிய விவரங்களை - பதில்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றையும் பகிரலாம்.

திருமந்திரம் பாடல்கள் மற்றும் விளக்கவுரை களுடன் கூடிய முழுமையான தொகுப்பு எங்கு கிடைக்கும்? முகவரி விவரம் அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன். அதேபோல், யோகா செய்முறை விளக்கங்கள், யோகச் சூத்திரம் சார்ந்த நூல்களையும் பரிந்துரைத்தால், பயனுள்ளதாக இருக்கும்.
- கே.ராமசாமி, விழுப்புரம்
பழநி முருகப்பெருமான் போன்று நவபாஷாண மூர்த்தங்கள், நம் தமிழகத்தில் வேறு எதேனும் திருத் தலங்களில் உண்டா? உண்டு எனில் அதுகுறித்த விவரம் பகிருங்களேன்.
- வி.கார்த்தியாயினி, பாளையங்கோட்டை
எங்கள் பாட்டி மயிலார் நோன்பு என்றொரு விரதம் இருப்பார். பொங்கலையொட்டி இந்த விரத வழிபாடு செய்ததாக ஞாபகம். முருகனைக் குறித்த விரதம் என்று கருதுகிறேன். இந்த வழிபாட்டின் நியதிகள் மற்றும் தாத்பர்யங்களை விளக்கும் புத்தகம் ஏதேனும் கிடைக்குமா? எவரிடமேனும் இருந்தால் நகல் எடுத்து அனுப்புங்களேன்.
- பி.மனோகரி, திருச்சி-4
நான் பாலாம்பிகையை உபாசித்து வழிபட விரும்புகிறேன். இந்த அம்பாளை `வாலை’ என்றும் குறிப்பிடுவார்கள். ஆகமநூல்கள் விவரிக்கும் வகையிலான பாலாம்பிகையின் திருவுருவப் படம் எனக்குத் தேவைப்படுகிறது. நெமிலி திருத்தலம் போன்று பாலாம்பிகை குடியிருக்கும் திருக்கோயில்கள் வேறு ஏதேனும் உண்டா?
- சரவணக்குமரன், தூத்துக்குடி
வீரபத்திரர் எங்கள் குலதெய்வம். சிவ அம்சமான வீரபத்ரசாமி சுயம்புமூர்த்தியாக அருளும் கோயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளதாக அறிகிறேன். அந்தக் கோயில் எது, செங்கல்பட்டு மாவட்டத்தில் எங்கு உள்ளது என்ற விவரங்களை அறிந்த அன்பர்கள் வழிகாட்டுங்களேன்.
- எம்.மகேஷ் சங்கரன், சென்னை-44
மதுரை மீனாட்சி அன்னையின் பக்தை நான். எனக்கு இந்த அம்பிகையைப் போற்றித் துதிக்கும் ச்யாமளா அஷ்டோத்ர சத நாமாவளி துதிகள் வேண்டும். இந்தத் துதிப்பாடல் எந்த நூலில் உள்ளது. பொருள் விளக்கத்துடன் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எவரிடமேனும் இந்தத் துதிப்பாடல் இருப்பின் நகல் எடுத்து அனுப்புங்களேன்.
- சி.கல்யாணி, சென்னை-45
தீர்க்காயுள் அருளும் சிவ கவச ஸ்தோத்திரம்!
சக்தி விகடன் கடந்த இதழில் (25.1.22 தேதியிட்டது) `தீர்க்காயுளை அளிக்கும் வல்லமை கொண்டது சிவகவச ஸ்தோத்திரம். ஸ்காந்த புராணத்தில் உள்ளது என்பர். அற்புதமான இந்தக் கவசம் எவரிட மேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்’ என்று திருநெல்வேலி வாசகர் கே.சிவகுருநாதன் கேட்டிருந்தார்.
அவர் பொருட்டு சென்னை வாசகர் வி.பரமேஸ்வரன் நகல் எடுத்து அனுப்பியுள்ள சிவகவச ஸ்தோத்திரம் வாசகர் சிவகுரு நாதனுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த ஸ்தோத்திரத்தின் மகிமை குறித்து பரமேஸ்வரன் தந்திருக்கும் விளக்கம் இங்கே:
`இது ஸ்காந்த புராணத்தில் ப்ரம்மோத்திர கண்டத்தில் உள்ளது. சிவகவச ஸ்தோத்திரத்தைப் படிப்பதால் பூத, பிரேத, பிசாச முதலானவற்றா ஏற்படும் பாதிப்புகளும் பிணிகளும் நீங்கும். ஜாதக ரீதியாய் மரணத்தைச் சந்திக்கும் தசை நேர்ந்தால், அந்த தோஷத்தைக் களைந்து தீர்க்காயுளைப் பெற்றுத் தரும். பெண்கள் படித்தால் அவர்களுக்கு சர்வ மங்கலங்களையும் பெற்றுத் தரும். மாங்கல்ய பலம் கூடும். சத்ரு பயம், விஷ உபாதைகள் போன்றவை நீங்கி வீட்டில் சகல சுபிட்சங்களும் உண்டாகும்.
தமிழில் துதித்து வழிபட வசதியாக சிவகவச ஸ்தோத்திரப் பாடல் ஒன்றின் கருத்து விளக்கம் உங்களுக்காக....
இதயமாகிய தாமரையின் நடுவில் இருப்பவரும்
தன் ஒளியினால் ஆகாயம் முழுவதும் பரவியிருப்பவரும்
இந்திரியங்களுக்கு எட்டாதவரும் சூட்சுமமானவரும்
முடிவற்றவரும் முதன்மையானவரும்
பரமானந்த சொரூபமானவருமான
சிவபெருமானை வணங்குகிறேன்.
தினமும் காலை - மாலை இருவேளையும் இந்தத் துதியைப் படித்து, வில்வத்தால் அர்ச்சித்து சிவபெருமானை வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.