
காஞ்சி வரதருக்கான திருமஞ்சனம், உற்ஸவம் ஆகியவை செவிலிமேடு தலத்திலேயே நடைபெற்றதாம்.
வரதரை பூஜிக்கும் பிரம்மன்!

காஞ்சி ஸ்ரீவரதராஜர் கோயிலில், சித்ரா பௌர்ணமி அன்று நள்ளிரவில் பிரம்மன் வந்து வழிபடுவதாக ஐதிகம். அன்றைய தினம் இரவு பூஜையின்போது, பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் பட்டாச்சார்யர்கள் அதன்பின் கருவறையை விட்டு உடனடியாக வெளியேறி விடுவார்களாம். ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு கருவறைக்குள் சென்றால், பிரசாதத்தில் நறுமணம் கமழுமாம். வரதர் குறித்து மற்றுமொரு தகவல் உண்டு. அந்நிய படையெடுப்பின்போது பாதுகாப்புக் கருதி, காஞ்சி ஸ்ரீவரதராஜரின் உற்ஸவர் விக்கிரகம், காஞ்சி - வந்தவாசி சாலையில், பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாம். சுமார் ஒரு வருட காலம்... காஞ்சி வரதருக்கான திருமஞ்சனம், உற்ஸவம் ஆகியவை செவிலிமேடு தலத்திலேயே நடைபெற்றதாம். இதை நினைவுகூரும் விதம்... சித்ரா பௌர்ணமி விழாவின்போது பாலாற்றில் இறங்கும் வரதர், திரும்பும் வழியில் செவிலிமேடு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்துக்கும் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவாராம்.
- ஆர். ராஜலட்சுமி, திருச்சி-1
தந்தைக்கே தண்டனை!
கிரேக்கத் தத்துவ ஞானியான டயோஜனஸ், ஒரு வீதியின் வழியே நடந்து கொண்டிருந்தார். வழியில், சிறுவன் ஒருவனை பலரும் சேர்ந்து அடித்துக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களை விலக்கிவிட்டவர், சிறுவனை அடிப்பதற்கான காரணத்தைக் கேட்டார். அவர்கள், “கேட்கச் சகிக்காத வார்த்தைகளால்... அசிங்கமாக பேசியதால் இவனை அடிக்கிறோம்!’’ என்றனர்.

உடனே, “அதற்காக இந்தச் சிறுவனை அடிக்காதீர்கள். இவனின் தந்தை யார் என்பதை அறிந்து அவரைப் பிடித்து அடியுங்கள். மகனுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தராத தந்தையே தண்டனைக்குரியவர்’’ என்றார் டயோஜனஸ்!
- அரூர் மு. மதிவாணன்