
ஆதிசங்கரர் கதை
ஜகத்குரு ஆதிசங்கரர் சர்வக்ஞ பீடத்தை நிறுவிய காலம். பலருடன் வாதம் செய்து வென்று, பீடம் ஏறப் போகிறார் ஜகத்குரு. அப்போது...
“எல்லாக் கலையும் உங்களுக்குத் தெரியுங்களா. நான் செய்யும் தொழிலும் உங்களுக்குத் தெரியும் என்றால்தான் நீங்க பீடம் ஏறுவதற்கு ஒப்புக் கொள்வேன்...” என்றார் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர்.

அடக்கமே உருவமான ஆதிசங்கரர், “சரி... என்னால் முடிகிறதா என்று பார்க்கிறேன். தோலும், ஊசி-நூலும் கொடு” என்றார்.
தொழிலாளி கொடுத்ததை வாங்கிக் கொண்டு, ஊசியைத் தன் மூக்கின் இருபக்கமும் தடவிக் கொண்டார். தொழிலாளி அப்படியே சங்கரரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தார்.
“நீங்க இதுக்குமேலே எதுவும் செய்ய வேண்டாம். நீங்க எல்லாம் தெரிஞ்சவங்க தான் சாமி... என்னை மன்னிச்சுடுங்க...” என்றார்.
செருப்பு தைக்கத் தொடங்குவதற்குமுன், செய்யவேண்டிய நுட்பமான ஒரு செயல், ஊசியை மூக்கில் தேய்ப்பது. மூக்கின் மேல் வரக்கூடிய எண்ணெய்ப் பசை அதற்குத் தேவை, அந்த வழுவழுப்பால் தோலுக்குள் ஊசி எளிதாக நுழைந்துவிடும்.
இப்படி ஜகத்குருவால் உருவான சர்வக்ஞ பீடத்தில் அலசப்படாத செய்திகளோ, தெளிவு ஏற்படாத விஷயங்களோ கிடையாது என்பது சத்தியம்.
-சி.சுந்தர், மேலூர்