திருவண்ணாமலை மாவட்டம் செ.ஆண்டாப்பட்டு கிராமத்தின் நிலத்தில் உள்ள பாறையில் பாண்டியர் காலக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு 13-ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும் இது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நிலம் தானம் செய்ததைப் பற்றியது என்றும் அறியவந்தது.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தண்டராம்பட்டு ஸ்ரீதர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர், திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி கிராமம் அருகே உள்ள செ.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உயரமான பாறையில் சுமார் 10 அடி நீளத்தில் கல்வெட்டு இருப்பது அறிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இக்கல்வெட்டு எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு 13-ம் நூற்றாண்டில் ஸ்ரீவல்லப பாண்டியன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும், இது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நில தானம் பற்றியது என்றும் அறியவந்தது.
இக்கல்வெட்டைப் படித்தளித்த கல்வெட்டியல் அறிஞர் சு.இராஜகோபால் அவர்கள், "திரிபுவனச் சக்கரவர்த்திகள் கோமாற பன்மரான ஸ்ரீவல்லப பாண்டியனின் ஆட்சிக்காலத்தில், தென்பெண்ணையாற்றின் தென்கரையிலுள்ள மெய்குன்ற நாடு மற்றும் நரிப்பள்ளி நாடு பகுதிகளில் உள்ள திருவண்ணாமலை உடைய நாயனார்க்கு, அதாவது அண்ணாமலையாருக்கு ஏற்கெனவே பழந்தேவ தானமாக வழங்கப்பட்ட ஆண்டார்பட்டு நிலம், நெடுநாள்களாக புலையர்கள் வழியில் உள்ள நிலத்தை, கோயில் பணியாளரான கண்ணாரமுதப் பெருமாளான திருச்சிற்றம்பல நம்பி பொன் மல்லப்பனுக்கு, பெருமாளும் மல்லப்பதென்னாயக்கரும் மற்றும் கோயில் தானத்தாரும், அனைத்து வரிகளும் உட்பட காணியாக நிலம் கொடுத்ததைப் பற்றிய செய்தி வெட்டப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கல்வெட்டில் தற்போது ஆண்டாப்பட்டு என்று வழங்கப்படும் ஊரின் பெயர் ஆண்டார்பட்டு என்று அறியப்படுகிறது. இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்ட பாறையின் வலப்புறம் சூரியன் மற்றும் சந்திரன், இதனுடன் திருவண்ணாமலை மலையைக்குறிக்கும் முக்கோணக் குறியீடு ஆகியவையும் வெட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற மலையைக் குறிக்கும் முக்கோணக் குறியீடு கொண்ட கல்வெட்டுகள் திருவண்ணாமலையைச் சுற்றி சுமார் 60-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் காணக் கிடைக்கின்றன. இதன் மூலம் அண்ணாமலையார் கோயிலின் வழிபாட்டிற்கும் வளர்ச்சிக்கும் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து நிலத்தின் மூலம் தானம் கிடைத்துள்ளது என்பது அறியப்படுகிறது.