
ஜோதிர்லிங்க தரிசனம்
நாசிக், பாரத தேசத்தின் புண்ணியத் தலங்களில் ஒன்று. இதன் அருகிலேயே சுமார் 28 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திரியம்பகேஸ்வரர் திருக்கோயில். பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் இதுவும் ஒன்று.

திரியம்பகேஸ்வரர் ஆலயத்தின் கருவறை மிகவும் விசேஷமானது. இங்கே மூன்று சிறிய லிங்கங்கள் ஒரே ஆவுடையாரில் எழுந்தருளியிருக்கின்றன. அதிலிருந்து எப்போதும் நீர் சுரந்துகொண்டேயிருக்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. இந்த மூன்று லிங்கங்களும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளைக் குறிக்கின்றன என்கிறார்கள் பக்தர்கள்.

பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை இங்கே கும்பமேளா கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி திரியம்பகேஸ்வரரை வழிபடுவார்கள்.
இந்தத் தலத்தில் கங்கையே கோதாவரியாகப் பாய்வதாகச் சிலாகித்துச் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள். ஆண்டுதோறும் மக மாதம் தசமி திதியன்று நிலாவில் தேவர்கள் தோன்றி கோதாவரியை வாழ்த்து வார்கள் என்பது ஐதிகம். எனவே அதனை இத்தலத்தில் பெரிய விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
வனவாசம் வந்தபோது, தசரதர் காலமான செய்தி அறிந்து ராமர் அவருக்கு சிராத்தம் செய்த தலமும் இதுவே என்கிறார்கள். எனவே, இங்கு முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய பித்ருக் கடன்களைச் செய்தால், அவர்கள் நற்பலன் பெற்று சுவர்க்க லோகம் அடை வார்கள் என்பது நம்பிக்கை.

மராட்டிய மன்னர் சிவாஜியின் காலத் தில் இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. ஆலயத்துக்கென தங்க வெள்ளி ஆபரணங் களை வாரி வழங்கினார் சத்ரபதி சிவாஜி என்கிறார்கள்.
இங்கு தினசரி, லிங்கத் திருமேனிக்கு `ஒருமுக' வெள்ளிக் கவசம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள். திங்கள்கிழமை மட்டும் தங்க முலாம் பூசப்பட்ட `ஐந்துமுக' கவசம் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
இங்கு அருளும் அம்பிகைக்கு அருள்மிகு ஜடேசுவரி என்பது திருநாமம்.

இங்கு குசாவர்த்த தீர்த்தம், கங்காத் துவாரம், கோடி தீர்த்தம், பல்வ தீர்த்தம், நீலகங்கா தீர்த்தம், கோதாவரி, ராமகுண்டம், லட்சுமண குண்டம், கெளதம குண்டம், வாணாசி தீர்த்தம், மணிகர்ணிகத் தீர்த்தம், கஞ்சன் தீர்த்தம் என்னும் 12 புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் நீராடினால் சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை.
கௌதம ரிஷி தன் மனைவி அகல்யா வுடன் இங்குள்ள பிரம்ம மலையில்தான் வாழ்ந்து வந்தார். அவரது தவவலிமையால் பிரம்மகிரி மலைப்பகுதி செழிப்பானதாக அமைந்தது. ஆனால் மற்ற பகுதிகள் வறட்சி யில் இருந்தன.
இதனால் அப்பகுதி முனிவர்கள் கௌதமர் மீது பொறாமைப்பட்டு மாயப் பசுவை ஒன்றை உருவாக்கி அனுப்பி வைத்தனர். அந்தப் பசு கௌதம முனிவரின் ஆசிரமத் தோட்டத்தில் மேயுமாறு செய்தனர். அந்நியப் பசு ஒன்று தன் தோட்டம் மேய்வதைக் கண்ட கௌதம முனிவர் அதை தர்ப்பைப் புல்லால் விரட்டினார்.

ஆனால் அந்தப் மாயப்பசுவோ ஏதோ தடி கொண்டு அடித்துவிட்டதைப் போலத் துடித்து இறந்ததுபோல் நடித்தது. இதனால் கௌதம முனிவர் மனம் வருந்தினார். மற்ற முனிவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பசுவைக் கொன்றதாக கௌதம முனிவர் மேல் குற்றம் சாட்டினர். பசுவைக்கொன்ற தோஷம் நீங்க பிரம்மகிரி மலையை 108 முறை சுற்றி வரவேண்டும் எனவும், 108 லிங்கங்கள் வைத்துப் பூசை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.
இதை ஏற்ற கௌதம முனிவர், தான் வாழும் குகையில் 108 சிவலிங்கங்களை மணலில் உருவாக்கி வழிபட்டார். முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் காட்சி கொடுத்து அருள் செய்தார்.
கௌதம ரிஷி, பசுவைக் கொன்ற தோஷம் நீங்கத் தன் ஆசிரமத்தில் கங்கைநதி பாய வகை செய்யுமாறு சிவபெருமானை வேண்டிக்கொண்டார். சிவபெருமானும் அதற்கு இணங்கி கங்கையை அவர் ஆசிரமத்தில் பாய அனுமதித்தார். மேலும் கௌதமருக்கு எந்தப் பாவமும் இல்லை என்பதையும் விளக்கினார். ஆனாலும் உலக நன்மையை முன்னிட்டு இங்கு பாயும் கங்கை கோதாவரி என்னும் பெயரில் பாய்ந்து வளம் செய்யும் என்று அருள்பாலித்தார்.
திரியம்பகேஸ்வரர் கோயிலைச் சுற்றி பிரம்மகிரி, நிலகிரி, கலகிரி என மூன்று மலைகள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் பிரம்மகிரி மலையில் 700 படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் அங்கே கௌதம முனிவர் தவம் செய்த குகையையும் அவர் வழிபட்ட 108 லிங்கங்களையும் தரிசிக்கலாம். இந்த மலைப் பாதையில் நடக்கும் போது நம் உடலைத் தழுவும் குளிர்காற்று புத்துணர்ச்சியைத் தரும்.
திரியம்பகேஸ்வர் வரும் பக்தர்கள் ஆஞ்சநேயர் பிறந்த இடம் என்று கருதப்படும் ஆஞ்சனேரி மலையையும் தரிசிக்க முடியும். இதன் அருகிலேயே மிகவும் பழைமையான குசேஸ்வர் கோயில் இருக்கிறது.
எப்படிச் செல்வது?! தமிழ்நாட்டில் இருந்து ரயில் மூலம் வருபவர்கள், `கல்யாண்' ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நாசிக் செல்லலாம். புனேயில் இருந்தும் பேருந்துகள் நாசிக் செல்கின்றன. நாசிக் ரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி திரியம்ப கேஸ்வருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தங்கி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, இங்கு குறைந்த வாடகையில் விடுதி அறைகள் கிடைக்கின்றன.