உருவ வழிபாடு தோன்றுவதற்கு முன்பே திருவிளக்கு வழிபாடு பழங்காலத்தில் பிரதானமாக இருந்துள்ளது. நெருப்பினையே கடவுளாக ஏற்று இன்றளவும் அரணிக்கட்டைகளை உரசி உண்டாக்கிடும் நெருப்பினைக் கொண்டே வேள்விகள் செய்வதை இன்றியமையாத சாஸ்திரமாகப் பின்பற்றுகிறார்கள்.

பிற்காலத்தில் திருமகளுக்கு உரிய 'பிரமிட்' போன்ற வடிவில் விளக்கு மாடங்களை முக்கோணமாக வடிவமைத்தனர். இன்றும் பூஜை நிலைகளை 'சாமி மாடம்' என்ற வார்த்தையாலேயே குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது
சுமங்கலிப் பெண்களும், கன்னியரும் நல்வாழ்விற்காகவும், குடும்ப நன்மைக்காகவும் தீபவழிபாட்டினைச் செய்கின்றனர். அஷ்ட மங்கலப் பொருள்களில் தீபமே முதன்மையானது. மங்கல விசேஷங்களில் பெண்கள் தீபத்தட்டுகளை ஏந்துவது தொன்மையான சம்பிரதாயம்.
கைகளில் விளக்கினை ஏந்தியபடி நிற்கும் பெண் உரு விக்கிரகங்களைக் கோயில்களில் காண்கிறோம்.
ஒளியைத் தரவல்ல சூரிய சந்திரர்கள் சிவபெருமானின் இருகண்கள். அக்னி நெற்றிக்கண். இப்படி அக்னி தத்துவமாக விளங்கிடும் பெருமானிலிருந்து உருவாகிய தீப்பொறிகளின் ஒருங்கிணைந்த தத்துவமே முருகப் பெருமான்.
இதனால்தான் பிற்காலத்தில் அக்னி வழிபாட்டின் ஓர் அங்கமாக விளங்கிடும் தீபவழிபாடு சிவபெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும் உரியதாயிற்று.
விளக்கு திருமகளின் வடிவம். இதனைத் தரையில் நேரடியாக வைக்கக்கூடாது. மனைப்பலகையில்தான் வைக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.
தற்காலத்திலும் கிராமங்களில் பூவரசு இலை மீது வைத்த பசுஞ்சாண உருண்டையில் விளக்கினை வைத்து வழிபடுதலைக் காணலாம். பசுஞ்சாணம் திருமகளின் உறைவிடம்.
தீபங்களை உயர்ந்த இடத்தில் வைப்பது நமது மரபு. சுற்றிலும் வெளிச்சம் தருவதற்காகவே வீடுகளில் 'தீபக் கட்டைகள்' எனும் உயர்ந்த செதுக்கிய வேலைப்பாடுகளுடன் கூடிய மர ஸ்தம்பங்களை வைத்திருப்பர். இதுவே காலப்போக்கில் 'குத்து விளக்காக' பரிணமித்தது.

இவ்விளக்கின் உச்சி ஓம்கார வடிவம். இது கணபதியைக் குறிக்கிறது. நெய்யை விடும் அகல் பாகம் சிவபெருமானையும், தண்டுப்பாகம் மகா விஷ்ணுவையும், அடிப்பாகமான பீடம் பிரம்மாவினையும் குறிக்கிறது.
திரி மூக்குகள் ஐந்தும் ஈசானம், தத்புருஷம்,அகோரம், வாமதேவம்,சத்யோஜாதம் ஆகிய பெருமானின் ஐந்து முகங்களைச் சுட்டுகின்றன. திருவிளக்கின் அம்சங்களான அகல்,நெய்,சுடர்,திரி ஆகிய நான்கும் அறம்,பொருள்,இன்பம்,வீடு ஆகிய நால்வகை புருஷார்த்தங்களைக் குறிக்கின்றன. முழுத் தீபமும் பராசக்தியின் வடிவம்.
அக்னியால் போற்றப்பெறுகின்ற, அன்னையை அவள் உறைகின்ற தீபங்களை ஒளிர வைத்து வழிபடும் கொண்டாட்டம்தான் இந்த கார்த்திகை தீபம். அதனால்தான் சம்பிரதாய முறைப்படி தீபங்களை ஒளிர்வித்து கார்த்திகையைப் போற்றி வழிபடுகிறார்கள்