கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது அய்யர்மலை. இங்கு புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1,017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவத்தளத்தில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஏற்கெனவே மூன்று சோமாவார விழா வெகுவிமர்சையாக நடந்து முடிந்துள்ளது. அப்போது, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், இந்த 4வது சோமவார விழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு பக்தர்கள், குடிப்பாட்டுக்காரர்கள், குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள் என்று பலவகையான பக்தர்கள் தேங்காய் உடைத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டுவருகின்றனர்.

அந்த வகையில், இந்த நான்காவது சோமவார விழாவில் குளித்தலை அருகே நங்கவரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்ற இளைஞர் 1,017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். இவரின் தாத்தா நாகராஜன் என்பவர் கடந்த 27 ஆண்டுகளாக உலக அமைதிக்காகவும், மக்கள் பசி பட்டினியின்றி நல்வாழ்வு வாழ்ந்திடவும், 1,017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு வந்தார். அவரது மறைவிற்குப் பின், தன் தாத்தாவின் வேண்டுதலைத் தொடர்ந்து, 13வது முறையாக அய்யர்மலை 1,017 படிக்கட்டுகளில் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.