
ஒரு நூற்றாண்டுக்கு முன்னர்வரை இங்கிலாந்து, ஃபிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த மேலை நாடுகளில்கூட தேர்தல் நடைமுறை வேறாக இருந்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான பாகுபாடு.
`செல்வந்தர்கள், அரசு அதிகாரிகள், சொத்து வைத்திருப் பவர்கள் வாக்களிக்கலாம்; ஏழை எளியவர்கள், அடிமைகள், பெண்களா..? மூச்! வாக்குச்சாவடி பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியாது’... அப்போது`பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும்’ என்று குரல் கொடுத்தார், எம்மெலின் பேன்க்ரஸ்ட் (Emmeline Pankhurst).
இங்கிலாந்து, மான்செஸ்டரி லிருக்கும் மோஸ் சைடு (Moss Side) என்ற சிறு நகரத்தில் 1858-ம் ஆண்டு பிறந்தவர் எம்மெலின். அப்பா வணிகர். பரம்பரை பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குடும்பம். அதனால் இயல்பாகவே எம்மெலினுக்கும் அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. கணவர் ரிச்சர்டு பேன்க்ரஸ்ட் வழக்கறிஞர். அப்போது இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. அரசிடம், `உள்ளூர் தேர்தல்களில் வாக்களிக்க, திருமணமான பெண்களை மட்டுமாவது அனுமதியுங்கள்’ என்று போராட்டம் நடத்தினார் எம்மெலின். அதற்காகவே `வுமன்’ஸ் ஃப்ரான்ச்சிஸ் லீக்’ என்ற அமைப்பையும் தோற்றுவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1898. சுவிட்சர்லாந்திலிருந்த தோழியின் வீட்டுக்குப் போயிருந்தார் எம்மெலின். கணவரிட மிருந்து ஒரு தந்தி. `ரொம்ப உடம்பு சரியில்லை. கிளம்பி வாயேன்...’ அவர் இங்கிலாந்துக்குத் திரும்பி வருவதற்கு முன்பாகவே ரிச்சர்டு இறந்துபோயிருந்தார். கணவர் இறப்புக்குப் பின்னர் எம்மெலினின் போராட்டம் தீவிரமடைந்தது. `பெண்களுக்கான சமூக மற்றும் அரசியல் கூட்டமைப்பு’ (WSPU) என்ற அமைப்பை

உருவாக்கினார். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர் தலைமையில் திரண்ட கூட்டத்தைப் பார்த்து பிரிட்டிஷ் அரசு மிரண்டுபோனது. போராட்டத்தில் பெண்கள் உயிர்விட்ட சம்பவங்களும் நடந்தன. ஆனாலும் அரசு இறங்கிவரவில்லை.
நூற்றுக்கணக்கான முறை சிறையில் தள்ளப்பட்டார் எம்மெலின். உள்ளே, அரசுக்கு எதிராக இன்னொரு போராட்டம் நடத்தினார்... உண்ணாவிரதம். எங்கே இந்தப் பெண்களெல்லாம் சிறையிலேயே இறந்துபோய்விடுவார்களோ என்று பயந்துபோன அரசு, புதிதாக ஒரு சட்டம் (Cat and Mouse Act) கொண்டு வந்தது. அதன்படி உண்ணாவிரதமிருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்கள் வீட்டுக்குப் போய் சாப்பிட்டு, கொஞ்சம் தெம்பானவுடன் திரும்பக் கைது செய்யப்பட்டார்கள்.
1914. முதல் உலகப்போர் தொடங்கியதும், போராட்டம் வேறு வழியில்லாமல் முடிவுக்கு வந்தது. போர் முடிந்ததும் 1918-ம் ஆண்டு `30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வாக்களிக்கலாம்’ என பிரிட்டிஷ் அரசு இறங்கிவந்தது. ஆனாலும், `அனைத்து பெண்களுக்கும் வாக்குரிமை’ என்பதே எம்மெலினின் குறிக்கோளாக இருந்தது. 1928-ம் ஆண்டு அவர் மறைந்து போனார். அவர் இறந்த சில மாதங்களிலேயே `21 வயது நிரம்பிய அனைத்துப் பெண்களும் வாக்களிக்கலாம்’ என்று சட்டம் கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசு. இந்த வெற்றிக்கு முழுக் காரணம் எம்மெலின். ஒரு போராட்டத்தின்போது இப்படிச் சொன்னார்... ``நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம்... சட்டத்தை உடைப்பவர்கள் என்கிற முறையிலல்ல; எங்கள் முயற்சியால் புதிய சட்டத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில்.’ அது நடந்துவிட்டது.
ஒரு துளி சிந்தனை
`துணிவு என்பது தசைகளைப் போன்றது; பயன்படுத்துவதன் மூலமாகத்தான் அவற்றை வலுப்படுத்த முடியும்.’
- அமெரிக்க நடிகை ரூத் கார்டன்