##~## |
அன்றாட வாழ்வில், அலுப்பும் சலிப்பும் அதிகரித்துவிட்டன. தவிப்பும் எதிர்பார்ப்புகளும் பெருகிவிட்டன. எந்தவொரு விஷயத்தையும் அலுப்புடனும், 'அடச்சே...’ எனும் சலிப்புடனும்தான் செயல்களில் ஈடுபடுகிறோம்.
அலுப்பில் இருந்து கொஞ்சம் விலகிவிட்டால், அயர்ச்சி நம்மிடம் நெருங்கவே நெருங்காது. சலித்துக்கொண்டே செய்கிற வேலையில் முழு கவனமும் செலுத்த முடியாத நிலை ஏற்படும். செயலில் கவனம் சிதறுகிறபோது, அந்தக் காரியத்தில் நேர்த்தியும் இருக்காது. நமக்கு வெற்றியும் கிடைக்காது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''அதற்காகத்தான் இன்றைக்கு பன்னாட்டு நிறுவனங்களில், மனவளக்கலைப் பயிற்சியைக் கற்றுத் தரச்சொல்லி, விரும்பி அழைக்கின்றனர். காலையில் இருந்து மாலை வரை வேலை பார்க்கிற இடத்தில், ஒரு அரைமணி நேரம் மதியவேளையில், மனவளக் கலைப் பயிற்சியை எடுத்துக் கொண்டால், பிறகு செய்கிற வேலையில் அயர்ச்சியோ தளர்ச்சியோ இருக்காது என்பதை அவர்கள் இப்போது உணர்ந்து பூரித்துப் போகிறார்கள்.'' என்கிறார் பேராசிரியர் சுந்தரம்.
அந்தத் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிற பலரும் இதனை உற்சாகத்துடன் ஆமோதிக்கின்றனர்.

''முன்பெல்லாம், மதிய உணவுக்குப் பிறகு மூன்று மணி நெருங்கும்போது ஒரு அயர்ச்சி வரத்தான் செய்யும். காலையில் இருந்த பரபரப்பு குறைந்து, அப்படியே நேர்மாறாக சோம்பலாக இருக்கும். ஆனா, கடந்த ரெண்டு வருஷமா, மதியம் 12 மணிக்கு மனவளக்கலை யோகா பயிற்சியைச் செஞ்சுகிட்டு வர்றதால, உடம்புலயும் சரி, மனசுலயும் சரி, கொஞ்சம் கூட அயர்ச்சியே இருக்கறது இல்லை. சொல்லப்போனா, ஒரு புத்துணர்ச்சியோடயே அந்த நாள் முழுவதும் இருக்கறதை நல்லாவே உணரமுடியுது'' என்கிறார்கள்.
''மனவளக்கலைப் பயிற்சின்னா, தியானம் பண்ணணுமே... அதெல்லாம் நமக்கு வராதேன்னு நினைச்சுப் பயந்துட்டிருந்தேன். ஆனா அந்தப் பயிற்சியை அலுவலக நண்பர்கள் எல்லாரும் ஒண்ணாச் சேர்ந்து கத்துக்கும்போது, ஒவ்வொருத்தரோட குணத்துலயும் நல்ல நல்ல மாற்றங்களை நல்லாவே உணர முடிஞ்சது'' என்கிறார் பத்மஸ்ரீ.

மனவளக்கலையில் உள்ள ஒவ்வொரு பயிற்சியும் மிக உன்னதமானது. கைகளுக்கும், கால்களுக்கும், கண்களுக்கும், முதுகுப் பகுதிக்குமான ஒவ்வொரு பயிற்சியையும் செய்யச் செய்ய உடலுக்கும் மனத்துக்குமான நிறைவும் பலமும் அதன் மூலம் கிடைத்துவிடுகிறது. பிறகு, தினமும் காலை அல்லது மாலை அல்லது இரண்டு வேளையும் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வர... எப்போதும் இளமையாகவும், எல்லாத் தருணங்களிலும் உற்சாகமாகவும், எல்லாரிடமும் மிகுந்த வாஞ்சையுடனும் இருப்பார்கள்.
வேதாத்திரி மகரிஷி அருளிய, மனவளக் கலைப் பயிற்சியின் உன்னதத்தைத் தெரிந்தவர்களும் அறிந்து உணர்ந்தவர்களும் இப்படிச் சிலாகித்துச் சொல்வதைப் பரவலாகக் கேட்க முடிகிறது.
''ஆரம்பத்தில், அலுவலகத்தில் மட்டுமே இந்தப் பயிற்சியைச் செய்து வந்தேன். பிறகு போகப் போக, வீட்டிலும் செய்யத் துவங்கினேன். வீட்டில் இருந்து கிளம்பும்போது ஏற்படுகிற அலுப்பும் சலிப்பும் இப்போது இல்லவே இல்லை. அதேபோல், அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது இருக்கிற அயர்ச்சியும் தளர்ச்சியும் அறவே கிடையாது, எனக்கு! ஒவ்வொருவரும் மனவளக் கலைப் பயிற்சியைச் செய்தால், நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழலாம்!'' என்கிறார் கிருஷ்ணன்.
- அடுத்த இதழில் நிறைவுறும்