உடலுக்கு... மனசுக்கு.. யோகா... ஆஹா!

யோகா |
|

யோகா...
ஆஹா! |

‘யோ கா என்றால், யோகம்; ஒழுக்கம்’ என்று பொருள் சொல்லலாம்! நம் மனத்தைக் கட்டுப்படுத்தி, நம்முள்ளே இருக்கிற இறைத் தன்மையை அறிய உதவும் ஓர் அற்புதமான பயிற்சிதான் யோகா. உலகளவில்- கிட்டத்தட்ட எல்லா வெளிநாடுகளிலுமே யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்போது செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெர்மனியில் எட்டுப் பேரில் ஒருவர் யோகா பயிற்சி செய்பவராக இருக்கிறார். நார்வே, ஸ்வீடன் உட்பட இன்னும் பல நாடுகளில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் உடற்பயிற்சிக் கூடங்களிலும் யோகாவைப் பற்றி விரிவான விளக்கங்கள் சொல்லி, அதற்கான செயல்முறைப் பயிற்சியையும் அங்கேயே கொடுக்கிறார்கள். உலகம் முழுக்க இந்த யோகக் கலை பற்றிப் பரபரப் பாகப் பேசப்படுவதும், செயல்படுவதுமாக இருந்தாலும் இந்தக் கலையின் ஆணிவேர் நமது பாரத தேசம்தான் என்பது பெருமைப்படப்பட வேண்டிய ஒன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அவதரித்த நம் பாரத நாட்டின் ரிஷிகள் மற்றும் முனிவர்களது தவத்தினால் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்தான் இந்த யோகக் கலை. மனிதனுடைய ஆளுமையில் உள்ள பல்வேறு பரிமாணங்களான உடல், பிராண சக்தி, மனம், புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்துச் செயல்பட வைத்து ஆரோக்கியம், நிம்மதி, ஆனந்தம் ஆகியவற்றைக் கொடுப்பதே யோகத்தின் நோக்கம் ஆகும். |

மூச்சுப் பயிற்சி என்பது இந்தக் கலையில் மிக முக்கியமான விஷயம். மூச்சுப் பயிற்சிகள் சீராகச் சீராக, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே சீரடையும். தொடர்ச்சியான யோகப் பயிற்சியினால், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் பலப்படும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், மனம் ஆரோக்கியமாக இருக்கும். மனம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நமது செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும். மனம், உடல் இரண்டையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க யோகா சிறந்த விஷயம். ‘இந்தக் கலை ஒரு பிரிவினர், ஒரு மதத்தினர் மட்டும் செய்யக் கூடியதோ?’ என்றொரு சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது. இது தவறு! இந்தப் பிரபஞ்சத்தில், உலகத்தில் மதங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே யோகக் கலை தோன்றி உள்ளது. எனவே, இது மதத்தைக் கடந்து அத்தனை மனிதர்களுக்கும் ஆரோக்கியத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் விஷயம். அத்தனை பேருக்கும் உரிமை உள்ள விஷயமும்கூட. இப்படிப்பட்ட பழைய பொக்கிஷத்தை, உருமாறாமல் நேர்த்தியாகப் பல தலைமுறைகளைத் தாண்டியும் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கும் நம் முன்னோர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்தக் கலை நம்மிடம் வந்து சேர்வதற்கு மிக முக்கியமானவர், ஸ்ரீராமரின் குருவான வசிஷ்ட மகரிஷி. அடுத்து, பதஞ்சலி முனிவர். பல ஏடுகளில் சிதறிக் கிடந்த யோக தத்துவங்களை ஒன்று திரட்டி, ‘யோக சூத்திரம்’ என்ற நூலை அருளியவர் பதஞ்சலி முனிவர். பக்தி யோகம், ராஜ யோகம், ஞான யோகம், கர்ம யோகம் என்று நான்கு விதமான மார்க்கங்களை விளக்கும் விதமாக பகவத் கீதையை அருளியவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இவர்களைத் தவிர ‘திருமந்திரம்’ அருளிய திருமூலர், சமீப காலத்தில் யோகத்தை உலக நாடுகளிடையே மிக பிரபலமாக்கிய சுவாமி விவேகானந்தர், மகான் அரவிந்தர் ஆகியோரும் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். ‘ஸ்திர-சுக ஆசனா’ என்பது ஆசனம் செய்வதற்கு உண்டான ஒரு வரைமுறை. ஸ்திரம் என்றால் Steady . சுகம் என்றால் comfortable . அதாவது, யோகப் பயிற்சி என்பது உடம்பும் மனமும் வலுப்படுவதற்காகச் செய்யக் கூடிய ஒரு பயிற்சி என்பதால், உடலை வருத்தி அதாவது ஒரு ஆசனம் செய்யும்போது உடம்பு வலிக்கக் கஷ்டப்பட்டு செய்தல் கூடவே கூடாது. ஆசனம் செய்யும்போது, உடல் முழுக்க ஏற்படும் சுகமான வலியை நீங்கள் ரசித்துச் செய்யும்படியானதாகவே இருக்க வேண்டும்.
|

கூடவே, ஒவ்வோர் ஆசனத்தின்போதும் குறிப்பிடப்படும் மூச்சுப் பயிற்சியையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தொடர்ச்சியாக யோகா செய்து வந்தால்... முகத்தில் புதுப் பொலிவும், உங்களுடைய செயல்திறன் இரண்டு மடங்கு ஆவதையும், ஒரு செயலைச் செய்யும்போது மனம் ஒரு நிலைப்பாட்டில் இருப்பதையும் நீங்களே உணர முடியும். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் சில எளிய ஆசனப் பிராணாயாம முறைகளை இனி வரும் இதழ்களில் பார்ப்போம். இது ஒரு சிம்பிள் கைடுதான். ஒரு குருவின் உதவியோடு யோகாவைப் பயிற்சி செய்வதுதான் எப்போதுமே நல்லது.
|