"நாம் சிறு சிறு உதவிகளை செய்வதும் ஆறுதலாக மற்றவரிடம் பேசுவது கூட நற்செயல்தான். தினமும் ஏதாவது ஒரு உதவியை செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்" என்று பேசினார் எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன்.
மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகாபெரியவரின் ஆராதனை நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனியிலுள்ள திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது.
இதில் கலந்துகொண்ட எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன், 'பெரியவரும் பெருமாளும்' என்ற தலைப்பில் பேசும்போது, "ஸ்ரீ மகா பெரியவர் விபூதியை அணிந்துகொண்டு அத்வைதியாக வாழ்ந்தவர்.

எந்த நிலையிலும் இறைவனின் பாதம் பற்றினால் நமக்கு எல்லாம் கிடைக்கும். நான் யார் என்று சிந்தித்தவர் பகவான் ரமணர். உலகில் நாம் யார் என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
ஸ்ரீ மகா பெரியவர் அத்வைதியாக இருந்தாலும் அவர் விசிஷ்டா துவைதியாகவும் வாழ்ந்தவர். 100 வருடம் பூரணமாக வாழ்ந்தவர். அவரது சொல்லும் செயலும் ஒன்றாக இருந்தன.
புராணங்களில் தேவர்கள் அசுரர்கள் என்று இருந்தது போல மனிதர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள். 13 வயதில் சன்னியாசம் ஏற்று 88 வருடங்களுக்கு மேல் மக்களை சந்தித்து அரணை மறவேன், திருமாலை வணங்கு என்று சொன்னவர் ஸ்ரீ மகா பெரியவர்.
சிவனும் விஷ்ணுவும் ஒன்று என்று சொன்னவர். இதைத்தான் 'ஹரியும் சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு' என்பார்கள். பெரியவர் தன் உபன்யாசத்தில் அதிகம் சிந்தித்தது முருகனையும் பிள்ளையாரையும்.
கும்பாபிஷேகத்தின்போது தெளிக்கிற நீர் 12 வருடம் நாம் செய்த கொலை பாதங்களை தீர்க்கிறது. ஸ்ரீ மகா பெரியவருக்கு உடல் நலம் இல்லாதபோது அதைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்ந்தவர். தர்மத்தோடு வாழ்ந்தால் நாம் வெற்றி கொள்ள முடியும்.

குரு பக்தியும் நாம ஜெபமும் செய்தால் அது நம்மை வாழவைக்கும் என்கிறார் மகா பெரியவர்.
நாம் சிறு சிறு உதவிகளை செய்வதும் ஆறுதலாக மற்றவரிடம் பேசுவது கூட நற்செயல்தான். தினமும் ஏதாவது ஒரு உதவியைச் செய்வதற்கு முயல வேண்டும். தெரிந்து ஒரு கெட்டது செய்தால் ஒன்றுக்கு இரண்டாக நல்லது செய்து விடவேண்டும். மடம் அருள் நிறைந்ததாக இருக்க வேண்டுமே ஒழிய பொருள் நிறைந்ததாக இருக்கக் கூடாது என்று சொன்னவர் மகா பெரியவர்" என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். ஏராளமான மக்கள் பார்வையாளர்களாக வந்திருந்தனர்.