திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27 -ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது.
இதையடுத்து ஜனவரி 27 -ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணி வரை கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும், கும்பாபிஷேகத்தை காண மலைக்கோயிலுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் காலை 4 மணி முதல் 7.15 மணிக்குள் மலைக் கோயிலுக்குச் சென்றுவிட வேண்டும்.

ரோப் கார் மற்றும் வின்ச் ஆகியவற்றில் 2 ஆயிரம் பக்தர்கள் யானை வழிப்பாதை வழியாக 4 ஆயிரம் பக்தர்கள் என மொத்தம் 6 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். இதில் கும்பாபிஷேகத்தைக் காண விரும்பும் பக்தர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.
கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி ஜனவரி 23 -ம் தேதி முதல் மலை அடிவாரம் குடமுழுக்கு மண்டபத்தில் அன்னதானத் திட்டம் நடைபெறும். மேலும் நவபாஷாண சிலைக்கு மருந்து சாத்தும் நிகழ்வு ஜனவரி 23 -ம் தேதி நடைபெறவுள்ளதை அடுத்து அன்று முதல் 27 -ம் தேதி கும்பாபிஷேகம் நிறைவு அடையும்வரை மூலவர் தரிசனம் கிடையாது. அன்று முதல் ஆவாஹனம் செய்யப்பட்டு யாகசாலையில் எழுந்தருளியிருக்கும் சுவாமியை மட்டுமே பக்த்ரகள் தரிசனம் செய்ய முடியும்.
மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மலை அடிவாரப் பகுதிகளில் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 5 -ம் தேதிவரை கடைகள் நடத்த அனுமதியில்லை. பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால் பேருந்துகள் பழநி - தாராபுரம் சாலையில் உள்ள மால்குடி மருத்துவமனை அருகே தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்படும். பேருந்துகள் அனைத்தும் தற்காலிகப் பேருந்து நிலையத்திலேயே நிறுத்தப்படும். அங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் மூலம் பழநி நகருக்குள் வந்து மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பழநி நகருக்குள் வரும் வாகனங்களை நிறுத்த நான்கு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு 1,500 வாகனங்கள்வரை நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.

திருட்டு உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க நகர் முழுவதும் 266 கண்காணிப்பு கேமராக்கள், பலூன்கள், வைஃபை வசதியுடன் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும்.
மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் ஆகிய வசதிகள் தடையின்றி ஏற்பாடுகள் செய்யவும், பக்தர்கள் வரும் பாதையில் நடைபெறும் சாலைப் பணிகள், சாக்கடை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.