லிங்க ரூபினியே... சிம்மவாஹினியே!



கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து சுமார் 26 கி.மீ. தொலைவில் உள்ளது கட்டீல் ஸ்ரீதுர்காபரமேஸ்வரி ஆலயம். இயற்கை எழிலார்ந்த இந்தப் பகுதியில் துர்காபரமேஸ்வரி கோயில் கொண்ட கதை அலாதியானது!
அருணாசுரன் என்பவன், முனிவர்களுக்கும் மக்களுக்கும் கொடும் துன்பங்கள் இழைத்து வந்தான். அவன் அழிந்தால் மட்டுமே உலகம் அமைதி பெறும் என்பதை உணர்ந்த ஜாபாலி என்ற முனிவர், அதற்காக யாகம் செய்ய முற்பட்டார். இத்தனைக்கும் அந்த அசுரனுக்கு மகத்துவமான காயத்ரீ மந்திரத்தை அருளியதே ஜாபாலிதான்!
அப்போது பூமியில் கடும் பஞ்சம் நிலவியதால், யாகத்துக்கான பொருட்கள் கிடைப்பதில் சிரமமாக இருந்தது. எனவே, தேவேந்திரனிடம் சென்று 'காமதேனுவை அனுப்பி உதவுங்கள்’ எனக் கேட்டார் முனிவர். அப்போது, காமதேனு வருணலோகம் சென்றிருந்ததால், அதன் கன்றான நந்தினியை அழைத்துச் செல்லப் பணித்தான் இந்திரன்.

##~## |
காயத்ரீ மந்திர ஜபத்தால் கலை வாணியின் அருளையும், 'தேவர்கள், மானிடர்கள், இரண்டு மற்றும் நான்கு கால் பிராணிகள் ஆகியவற்றால் எனக்கு மரணம் நிகழக்கூடாது’ எனும் வரத்தையும் பிரம்மனிடம் பெற்றிருந்தான் அருணாசுரன். அவனது கொடுமைகள் தாங்காத தேவர்கள், பராசக்தியிடம் முறையிட்ட போது, 'அசுரன் காயத்ரீ ஜபம் செய்யும் வரை, அவனை எதுவும் செய்ய முடியாது’ எனக் கூறிவிட்டாள் தேவி.


தேவர்கள், பிரகஸ்பதியைச் சரண டைந்தனர். அவர் ஓர் உபாயம் செய்தார். அசுரனைச் சந்தித்து அவனை வானளாவப் புகழ்ந்தார்; 'நீயே தெய்வம் அப்படியிருக்க... காயத்ரீ மந்திரத்தை நீ ஜபிக்கவேண்டிய அவசியம் என்ன?’ என்றார். புகழ்ச்சியில் மயங்கிய அசுரன், மந்திரம் சொல்வதை கைவிட்டான்.
பிறகென்ன... மோகினியாக உருவெடுத்து வந்தாள் ஆதிசக்தி. அவளைக் கண்டு மோகித்தான் அசுரன். அவளை மணக்கும் எண்ணத் துடன், தனது இருப்பிடத்துக்கு தூக்கிச்செல்ல முயன்றான். தேவி, அருகில் உள்ள பாறைக்குப் பின்னால் மறைந்தாள். அசுரன், ஆவேசத் துடன் பாறையை தனது வாயால் ஊதித் தள்ள முயற்சிக்க, பாறையில் இருந்து தேனீக்கள் பெருங்கூட்டமாக வெளிவந்தன பிரமாண்ட மான தேனியாக உருவெடுத்த சக்தி, அசுரனை துரத்தி அழித்தாள். மகிழ்ச்சி அடைந்த தேவர்க ளும் முனிவர்களும் தேவியை துதித்தனர்; இளநீரால் அபிஷேகித்தனர். இதனால் உக்கிரம் தணிந்தவள், நந்தினி நதியின் நடுவில், லிங்க சொரூபமாக கோயில் கொண்டாளாம்!
''எங்களின் கண்கண்ட தெய்வம் ஸ்ரீதுர்காம்மா. மனதில் ஏதும் கலக்கம் என்றால், துர்காம்மா சந்நிதிக்கு ஓடி வந்துடுவேன். என் திருமணம் முதலான அத்தனை நிகழ்வுகளுக்கும் பக்க துணையாக நின்றவளும், நிற்பவளும் இவளே. திருமண வரம், குழந்தைப் பேறு கிடைக்க இவளை வழிபடுவது சிறப்பு. அதுமட்டுமில்லீங்க... பறிபோன பொருள் மீண்டும் கிடைக்க, இங்கு வந்து முறையிட்டால் போதும். விரைவில் அந்தப்பொருள் திரும்பக் கிடைத்து விடும்'' என்று சிலிர்ப்புடன் விவரிக்கிறார் தேன்மொழி ரவிக்குமார். இவர், தென் கர்நாடக மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் மக்கள் தொடர்பாளராகத் திகழ்கிறார். இவர் மட்டுமல்ல, அனுதினமும் நம்பிக்கையுடன் இந்தக் கோயி லுக்கு வழிபட்டுச் செல்லும் பக்தர் கூட்டமும், துர்காதேவியின் சாந்நித்தியத்துக்குச் சான்று.
இந்தத் தலத்தில் ஸ்ரீதேவி ரக்தேஸ்வரிக்கும் சந்நிதி உண்டு. ஸ்ரீஐயப்பன், ஸ்ரீக்ஷேத்திரபாலர் மற்றும் நாக தேவதைகளையும் இங்கே தரிசிக் கலாம். ஸ்ரீபிரம்மனுக்கும் தனிச் சந்நிதி உள்ளது. ஸ்ரீமகா கணபதிக்கு எதிரில் நடைபெறும் மகா கணபதி ஹோமம் மற்றும் பஞ்ச காஜ்ஜயா பூஜைகள் வெகு பிரசித்தம்!
படங்கள்: கே.கார்த்திகேயன்
மனம் குளிர இளநீர் அபிஜேகம்! |

''நாக பஞ்சமி, சிம்ம சங்கராமணி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி, விநாயக சதுர்த்தி, நரக சதுர்த்தி, நவராத்திரி, துளசி பூஜை, தீபாவளி ஆகியன இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. பிணிகள் தீர, எடைக்கு எடை ஏதேனும் பொருள் வழங்கியும்; திருமண வரம் கேட்போர், ஸ்ரீதுர்கைக்கு புடவை சார்த்தியும் பிரார்த்திக்கின்றனர். ஒரு வருடத்தில், சுமார் 15,000 புடவைகள் ஸ்ரீதுர்கைக்ணீகுச் சமர்ப்பிக்கப்படும்! கடந்த வருடம் பெல்லாரியில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு, கோயிலின் சார்பில், புடவைகள் வழங்கப் பட்டன'' என்று பெருமிதத்துடன் சொல்கிறார், தலைமை அர்ச்சகர் ஸ்ரீஹரிநாராயன தாச அஸ்ராணா. ''இங்கு நடைபெறும் யட்சகானம் விசேஷம். சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இதில் ஆச்சரியம்... இந்த வைபவத்துக்காக அடுத்த 25 வருடங்களுக்கு பக்தர்கள் பணம் செலுத்திவிட்டனர். அதேபோல், ஸ்ரீசண்டி ஹோமம், ஒரு வருடத்துக்கு முன்னதாகவே பதிவு செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு சுமார் 6,500 கூவின பூஜையும் (மல்லிகை அர்ச்சனை), ஒரு வாரத்துக்கு சுமார் 3,000 இளநீர் அபிஷேகமும் நடைபெறுகின்றன. தினமும் அன்னதானமும் நடைபெறும். அதேபோல், புதிய வாகனங்களுக்கு இங்கு பூஜையிட்டுப் பிரார்த்திக்க, விபத்துகள் ஏதும் நிகழாது என்பது ஐதீகம். கோயில் வருவாயில் இருந்து, பள்ளி, கல்லூரி, சம்ஸ்கிருத முதுநிலைக் கல்லூரி ஆகியவை நடத்தப்படுகின்றன. காலை 4 மணிக்குத் திறக்கப்படும் ஆலயம், இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்'' என்கிறார் ஸ்ரீஹரிநாராயண தாச அஸ்ராணா. |