
எது பரிசு? எது தண்டனை?தெனாலி , ஓவியம்: மகேஸ்
செல்ல மகள் சிணுங்கிக் கொண்டிருந்தாள்... “அப்பா! இன்னிக்கு நான் எல்லா வீட்டுப் பாடமும் செஞ்சுட்டுப் போனேன். ஆனா, என் கையெழுத்து கிறுக்கலா இருக்குன்னு டீச்சர் திட்டினாங்க. என் ஃப்ரெண்டு நிறைய பாடங்கள் எழுதவே இல்லே. ஆனாலும், அவளை ‘குட்! கீப் இட் அப்!’னு பாராட்டினாங்க. போப்பா! எங்க டீச்சர் சுத்த மோசம்!” என்றாள்.
“நேரடியா நீ பார்க்கிறதை வெச்சு ஒரு முடிவுக்கு வரக்கூடாதும்மா! நீ இன்னும் நல்லா வரணும்கிற அக்கறையில அவங்க உன்னைத் திட்டியிருக்கலாம். உங்க டீச்சரை நல்லா புரிஞ்சுக்கிட்டா நீ இப்படி வருந்தமாட்டே!” என்று ஆறுதல்படுத்திய அப்பா அவளுக்கு ஒரு குட்டிக் கதை சொன்னார்.
ஒருமுறை, தங்களின் கஷ்டத்தை தீர்க்குமாறு வேண்டிக்கிட்ட இரண்டு பக்தர்களுக்காக, சிவனும் பார்வதியும் வயசான தம்பதி மாதிரி பூமிக்கு வந்தாங்க. முதல்ல ஒரு வீட்டுக் கதவைத் தட்டி, சாப்பிட கொஞ்சம் உணவும், ராத்திரி தங்க இடமும் தரும்படி கேட்டாங்க. ‘நாங்களே கஷ்டத்துல இருக்கோம். இதுல நீங்க வேறயா...’ன்னு எரிச்சலடைந்து சாப்பிடக் கொஞ்சம் பழைய சோறும், படுக்க ஒரு கிழிஞ்ச பாயும் கொடுத்து, திண்ணையில படுக்கச் சொன்னாங்க அவங்க. சிவனார் அந்தச் சோற்றுப் பருக்கைகளைத் தொட்டதுமே அது வெள்ளி நாணயங்களா மாறிடுச்சு. மறுநாள் அதைப் பார்த்ததும்தான், ‘அடடே! நேத்து வந்தவங்க கடவுளா! சரியாக உபசரிக்காம விட்டுட்டோமே!’ன்னு வருத்தப்பட்டு, இனிமே விருந்தாளிகளைக் கனிவோட உபசரிக்கணும்னு முடிவெடுத்தாங்க.
சிவனும் பார்வதியும் இன்னொரு பக்தர் வீட்டுக்குப் போனாங்க. அவங்களோ அன்போடு வரவேற்று, “கொஞ்சம் நொய் இருக்கு. உப்புமா பண்ணித் தரேன். வெளியே குளிரும்! நீங்க உள்ள கட்டில்ல படுத்துக்குங்க. வெளித் திண்ணையில் நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப் படுத்துப்போம்”னாங்க.

அன்னிக்கு ராத்திரி பெரிய இடி விழுந்து, அந்த வீட்டின் கூரை எரிஞ்சு, தொழுவத்துல கட்டியிருந்த பசுமாடும் இறந்திருச்சு! கொல்லைப்புறத்துல இருந்த வாழைத் தோட்டமும் கருகிப் போச்சு. அவங்க அப்பவும், தங்கள் வீட்டுல தங்கின பெரியவங்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்துடுச்சான்னுதான் கவலைப்பட்டாங்க.
அவங்ககிட்டே விடைபெற்று வெளியேறினதும், பார்வதி சிவனிடம்,“என்ன அநியாயம்! எரிச்சலோடு வரவேற்றவங்களுக்கு அவங்க கஷ்டம் தீர, வெள்ளி நாணயங்களைப் பரிசா அளிச்சீங்க. அதுவே அன்போட வரவேற்றவங்களுக்கு இடி மூலமா, மேலும் கஷ்டம் கொடுத்தீங்க. இது சரிதானா சுவாமி?”ன்னு கேட்டாங்க.
சுவாமி சிரிச்சார். “பார்வதி! முதல் பக்தருக்குத் தங்க நாணயங்கள் தரணும்னு நினைச்சேன். ஆனா, அவங்க இன்னும் பண்படணும்னு தெரிஞ்சதும் வெள்ளி நாணயங்களை மட்டுமே கொடுத்தேன். இரண்டாவது பக்தர் வீட்டுல, அவர் மகனுக்கு வெகு சீக்கிரமே ராஜாங்கத்துல நல்ல உத்தியோகம் கிடைக்கப் போகுது. அவன் குடும்பமே அவனால பேரும் புகழும் அடையப் போகுது. ஆனா, அன்னிக்கு ராத்திரி இடி தாக்கி அவன் இறந்து, அவனோட பெற்றோர் நிர்க்கதியா நிக்கும்படியா விதி இருந்தது. நாம் உள்ளே படுத்து, அவன் தன் பெற்றோரோடு வெளியே படுத்துக்கிட்டதால, அவன் தப்பிச்சான். அவன் விதியை மாத்தி எழுதினேன். ஆக, இரண்டு பக்தர்களுக்குமே அவங்க பக்திக்கும் பண்புக்கும் தகுந்த பலனைத்தான் கொடுத்திருக்கேன்!”னார்.
அப்பா சொன்ன இந்தக் கதை மகளுக்கு மட்டுமில்லே; மத்தவங்களுக்கும் பல விஷயங்களைப் புரிய வெச்சுடுச்சு!