
சங்கடங்கள் தீர்க்கும் சங்கு முத்திரை!

சிவன், விஷ்ணு வழிபாட்டில் சங்குக்கு பிரதான இடம் உண்டு. பிரதோஷம் உள்ளிட்ட சமயங்களில் சிவனை பூஜை செய்யும்போது சங்கு ஒலிப்பர். அதேபோல் மஹாவிஷ்ணுவின் ஆயுதங்களில் பிரதானமானது சங்குதான். இப்படிப்பட்ட மகத்துவமான சங்கு முத்திரை நமக்கு என்னென்ன நன்மைகளை அள்ளித் தருகிறது என்று பார்ப்போம்.
எப்படிச் செய்வது?
சப்பணங்கால் இட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடி, மார்புக்கு நேராக கைகளை வைக்கவும். இடது கையின் கட்டை விரலை, வலது கையின் நான்கு விரல்களால் சுற்றி மூடவும். வலது கையின் கட்டை விரலின் நுனியை, இடது கையின் மற்ற விரல்களின் நுனிகளால் தொட வேண்டும். (படம் பார்க்க) இதைப் பார்க்க சங்கின் தோற்ற அமைப்பு போலவே காணப்படும்.
இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம். இந்த முத்திரையை கையில் வைத்தபடி ‘ஓம்’ என்ற ஒலியை எழுப்பி வரவும். இவ்வாறு செய்தால் பன்மடங்கு பலனைப் பெற முடியும்.
பலன்கள்
மகாவிஷ்ணுவின் ஐந்து ஆயுதங்களில் பாஞ்சஜன்யம் என்ற சங்கும் ஒன்று. மங்கல சின்னமான சங்கில் இருந்து வரும் ஒலி எதிரிகளை அதிரச் செய்யும். அதுவே மகாவிஷ்ணுவை சரண் அடைந்தவர்களுக்கு பாதுகாவலனாக இருக்கும். இத்தகைய மகத்துவம் பெற்ற சங்கின் பெயரால் அழைக்கப்படும் முத்திரையைச் செய்வதன் மூலம் துன்பம் நீங்கி மகிழ்ச்சி கிடைக்கும்.
உடல் எனும் ஆலயத்தில், இறைவனை தரிசிக்க, இந்தச் சங்கு முத்திரை நமக்கு உதவுகிறது.
சங்கின் ஒலி 72,000 நாடி, நரம்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது. அதைப் போலவே, சங்கு முத்திரை நம் உடலில் உள்ள அத்தனை நாடி, நரம்புகளையும் சுத்திகரித்து புத்துயிர் தருகிறது.
ஸ்கந்த புராணம், சங்கின் ஒலி நம் ஏழு பிறவிகளின் கர்மவினையை போக்குவதாகக் குறிப்பிடுகின்றது. நமக்குள் இருக்கும் எதிர்மறை சிந்தனைகளை முழுவதுமாக, அதன் அதிர்வலையால் அகற்றிவிடுகிறது.
இம்முத்திரை ஸ்தூல உடலை மட்டு மல்லாது, சூட்சும மற்றும் காரண தேகத்தையும் தூய்மைப்படுத்துகிறது.
சங்கு முத்திரையை ஒருவர் தொடர்ந்து செய்து வர, புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனை அடையலாம்.
சங்கு முத்திரை விசுக்தி சக்கரத்தை (தொண்டைப் பகுதி) இயங்கச் செய்கிறது. எனவே, தொலைதூரத் தொடர்புகளாக, சித்தர்கள் மற்றும் மகான்களின் தரிசனம் கிட்டும்.
திக்குவாயிலிருந்து விடுபட்டு இனிய குரலும், வாக்கு பலிதமும் ஏற்படுகிறது. எனவே ஜோதிடர்கள், அருள்வாக்கு சொல்பவர்கள் இம்முத்திரையைப் பயன்படுத்தலாம்.
டெலிபதி எனப்படும் தூரத்தில் இருப்பவருடன் பேசவும், நோய்களுக்கு குணமளிக்கவும், மற்றவர்களை நல்வழிக்கு கொண்டு வருவதற்கும் சங்கு முத்திரையை தொடர்ச்சியாக செய்து வரலாம்.
தொகுப்பு: ப்ரீத்தி, படம்: எம்.உசேன்