மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 10

கயிலை... காலடி... காஞ்சி! - 10
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 10

‘அம்பாள் பிரார்த்தனையை பூர்த்தி பண்ணிடு’நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 10

தர்மோ மே சதுரங்க்ரிகஸ் ஸுசரித: பாபம் விநாசம் கதம்
காமக்ரோத மதாதயோ விகலிதா: காலா: ஸுகாவிஷக்ருதா
ஜ்ஞானானந்த மஹௌஷதி: ஸுபலிதா
கைவல்யநாதே ஸதா மான்யே
மானஸ புண்டரீக நகரே ராஜா வதம்ஸே ஸ்த்திதே


எவருடைய மனத் தாமரையாகிய நகரத்தில், எல்லோராலும் வணங்கப்படுபவரும் ஏக சக்கரவர்த்தியுமான சிவபெருமானின் அருளாட்சி நடைபெறுகின்றதோ, அவருடைய மனதில் தவம், தூய்மை, தயை, சத்யம் ஆகிய நான்கு பாதங்களை உடைய தர்மம் நிலைபெற்றிருக்கும்; பாவங்கள் நசிக்கப்பட்டுவிடும்; காமம், கோபம், ஆணவம் அகன்றுவிடும்; எப்பொழுதும் இன்பமே சூழ்ந்திருக்கும்; அனைத்துக்கும் மேலான ஞானானந்தம் நிலைத்திருக்கும்.

- சிவானந்த லஹரி

மஹா பெரியவா எதிரில் இருந்த தாம்பாளத்தில், காமாட்சி அம்மன் கோயிலில் தன் பேத்தி கண்டெடுத்த ரெட்டை வட தங்கச் சங்கிலியை விநயத்துடன் வைத்துவிட்டு, பெரியவா உத்தரவுக்காக மீனாட்சி பாட்டி காத்திருந்தாள். அவளுக்கு அருகிலேயே பேத்தி காமாட்சியும் நின்றிருந்தாள்.

சற்றைக்கெல்லாம் ஒரு பெண்மணி அங்கே வந்தாள். வந்தவள் மஹா பெரியவாளை நமஸ்காரம் செய்துவிட்டு, கண்ணீர் விட்டு அழுதாள். மடத்துச் சிப்பந்திகளுக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் அந்தப் பெண்மணி அன்று காலையில்தான் மஹா பெரியவாளை தரிசித்து நமஸ்காரம் செய்துவிட்டு சென்றிருந்தாள்.

அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி இங்கே குறிப்பிடுவது அவசியம்.

அன்று செவ்வாய்க்கிழமை.  அதிகாலையிலேயே ஆரணியில் இருந்து வந்திருந்த பஜனை கோஷ்டியினர் மடத்தை தங்கள் பாடல்களால் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி இருந்தனர்.

மனத்தே பெருக்கெடுக்கும் கருணை திருமுகத்தே தேஜஸாகப் பொலிய, மஹா பெரியவா சர்வேஸ்வரனாக பக்தர்களுக்கு தரிசனம் தந்துகொண்டு இருந்தார். வரிசையில் வந்துகொண்டிருந்த நடுத்தர வயதுப் பெண்மணி மஹா பெரியவா அருகில் வந்ததும் முகத்தில் மகிழ்ச்சி பெருக்கெடுக்க மஹா ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.

தான் ஊரில் இருந்து கொண்டு வந்திருந்த பழங்கள், மட்டைத் தேங்காய்கள், காய்வகைகள் போன்றவற்றை மஹா பெரியவா திருமுன்பு சமர்ப்பித்து மறுபடியும் நமஸ்கரித்து எழுந்தாள்.

அந்தப் பெண்மணியை சற்று கூர்ந்து நோக்கிய மஹா பெரியவா, “நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட பத்னி அம்புஜம்தானே? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்து ஏதோ சொல்லி துக்கப்பட்டுண்டே. இப்ப சந்தோஷமா இருக்கறதைப் பார்த்தா உன்னோட ப்ரார்த்தனையை அம்பாள் நிறைவேத்திட்டான்னுதானே அர்த்தம்? என்ன சரிதானே?’’ என்று கனிவு ததும்பக் கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மறுபடியும் மஹா பெரியவாளை நமஸ்கரித்துவிட்டு, “வாஸ்தவம்தான் பெரியவா, எங்க ஒரே பொண்ணு மைதிலிய மூணு வருஷமா அவா புக்காத்துல தள்ளி வச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் எங்களுக்கு ஒரே ஆதரவான ஒங்கக்கிட்ட வந்து என்னோட கஷ்டத்தைச் சொல்லி பிரார்த்திச்சேன். நீங்கதான் காமாட்சி அம்மன் கோயில்ல அம்பாளுக்கு அபிஷேகம் செஞ்சு, அஞ்சு நாளைக்கு அஞ்சு பிரதட்சிணம், அஞ்சு நமஸ்காரம் பண்ணச் சொன்னேள். நானும் அப்படியே செஞ்சேன். பதினஞ்சு நாளைக்கு முன்னாடிதான் மாப்பிள்ளை திடீர்னு வந்து மைதிலியை அழைச்சுண்டு போயிட்டார். எல்லாம் உங்க அனுக்கிரஹமும் அம்பாளோட கிருபையும்தான்’’ என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தாள்.

பின்னர் மஹா பெரியவாளிடம் தான் கோயிலுக்குச் சென்று அம்பாளை தரிசித்துவிட்டு வருவதாகக் கூறினாள்.

“பேஷா போயிட்டு வா. அவதானே உன்னோட கஷ்டத்தை தீர்த்து வச்சா. அம்பாளை தரிசனம் பண்ணிட்டு திரும்பவும் மடத்துக்கு வந்து சாப்டுட்டுதான் ஊருக்குப் போகணும் சரியா?’’ என்று கேட்டு உத்தரவு கொடுத்து அனுப்பினார்.

காலையில் மகிழ்ச்சியுடன் கோயிலுக்குச் சென்றவள் இப்போது ஏன் அழுகிறாள் என்பது அங்கிருந்தவர்களுக்கு புரியவில்லை.

அழுதபடியே மஹா பெரியாவாளிடம் நடந்ததைக் கூறினாள்.

கயிலை... காலடி... காஞ்சி! - 10

“பெரியவா, என்னோட பொண்ணை அவளோட புக்காத்துல திரும்ப அழைச்சுண்டா, நான் கழுத்துல போட்டிருக்கற எட்டு பவுன் ரெட்ட வடச் சங்கிலியை காமாட்சிக்கு காணிக்கை செலுத்தறதா வேண்டிக்கிட்டேன். ஆனால், என்னோட சங்கிலி எங்கயோ அறுந்து விழுந்துடுச் பெரியவா. நானும் போன எடத்துலல்லாம் தேடிப்பார்த்துட்டேன். எங்கேயும் கிடைக்கலை பெரியவா. நான் என்ன குத்தம் செஞ்சேனோன்னு ஒரே குழப்பமா இருக்கு பெரியவா’’ என்று கண்ணீர் மல்கக் கூறினாள்.

அதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மீனாட்சி பாட்டி பரபரப்புடன் மஹா பெரியவாளுக்கு முன்பு இருந்த தாம்பாளத்தில் தான் வைத்த ரெட்டை வடச் சங்கிலியை எடுத்து அம்புஜத்திடம் காட்டி, “மாமி, இந்த சங்கிலியா பாருங்கோ’’ என்று கேட்டாள்.

அதைப் பார்த்ததுமே அம்புஜம் ஆனந்தப் பரவசத்துடன், “ஆமாம் மாமி, என்னோடதுதான் இது. இதைத்தான் நான் அம்பாளுக்குக் காணிக்கை செலுத்தறதா வேண்டிக்கிட்டேன். இது எப்படி உங்க கையில கெடைச்சுது?’’ என்று கேட்டாள்.

மீனாட்சி பாட்டியும் சாங்கோபாங்க மாக நடந்ததை விவரித்தாள்.

அதையெல்லாம் கேட்ட அம்புஜம், மீனாட்சி பாட்டியிடம், “பெரியவா சந்நிதானத்துல இருந்து சொல்றேன். இந்த சங்கிலியை அம்பாளுக்கு காணிக்கை செலுத்தறதா வேண்டிக்கிட்டதாலே இதை அம்பாளுக்கு காணிக்கை செலுத்திட்டு, இன்னிக்கு சாயங்காலமே கடைக்குப் போய் உங்க பேத்திக்கு ரெட்டை வடச் சங்கிலி எட்டு பவுன்ல வாங்கித் தந்து, கல்யாணம் நல்லபடியா நடக்க அஞ்சாயிரம் ரூபா பணமும் தர்றேன்’’ என்று கூறினாள்.

அதுவரை நடப்பதை எல்லாம் மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்த மஹா பெரியவா, ‘‘மீனாட்சி பாட்டி, அம்பாள் எப்படி உன்னோட பிரார்த்தனையை நிறைவேத்தி இருக்கா பார்த்தியா? நீ என்ன பண்றே, இன்னைக்கு சாயந்தரமே காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போய், சங்கிலி கெடைச்சுட்ட அவசரத்துல காலையில நீ அம்பாளுக்குப் பண்ணாம விட்டுட்ட பஞ்ச ஸங்க்யோபசாரத்தை பூர்த்தி பண்ணிடு’’ என்று உத்தரவு கொடுத்து அனுப்பினார்.

இந்தச் சம்பவத்தின் வாயிலாக நமக்கெல்லாம் மஹா பெரியவா சொல்லாமல் சொல்லும் படிப்பினை இதுதான்:

நம்முடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற வேண்டுதலுடன், குறிப்பிட்ட காலத்துக்கு  ஒரு விரதத்தையோ அல்லது வழிபாட்டையோ மேற்கொள்ளும்போது, தெய்வத்தின் அருளால் அந்த விருப்பம் உடனே நிறைவேறி விட்டாலும்கூட, நம்முடைய விருப்பம்தான் நிறைவேறிவிட்டதே என்று வழிபாட்டை பாதியிலேயே நிறுத்திவிடாமல், முழுமையாகச் செய்துவிட வேண்டும்.

இதில் அம்பாளின் மகத்துவத்தை நமக்கெல்லாம் உணர்த்தும் மற்றும் ஒரு படிப்பினையும் உண்டு. அது..?

- திருவருள் தொடரும்