
அனுமனைப் போல் நடந்துகொள்ளுங்கள்!
திருமுருக கிருபானந்த வாரியார்
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆற்றில் குளித்தால் நன்மை ஏற்படுவது ஆற்றுக்கு அல்ல; நமக்குத்தான். அதேபோல் கடவுளை வணங்கினால், நன்மை கடவுளுக்கு அல்ல; நமக்குத்தான்.
பலபேர் கூடிக் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை அதிகாரிகள் உடனடியாகக் கவனிப்பார்கள். அதேபோல் பலபேர் கூடி கூட்டுப் பிரார்த்தனை செய்தால், அந்த விண்ணப்பத்தைக் கடவுள் உடனே கவனிப்பார். இறைவன் எப்போதும் நமக்கு அருளைத்தான் அளிக்கிறார். சில நேரங்களில் வரும் சோதனைகள், துன்பம்போல் தோன்றும். அது நம்முடைய அறியாமையால் ஏற்படுகிறது.
இறைவனை எஜமானாகக் கருதி, சேவை செய்வதில் அனுமானைப் போல் நடந்து கொள்ள வேண்டும். கடவுள் உணர்வு இல்லாதவன், எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும், அவன் விலங்காகத்தான் கருதப்படுவான்.
இறைவனை நினைத்தபடி சாப்பிடுங்கள்!
சாந்தானந்த சுவாமிகள்
கடவுளை நினைத்துக்கொண்டே உணவை உட்கொள்ளுங்கள். அப்போதுதான் சாப்பிடும் உணவு கடவுளுக்கு உகந்த பிரசாதமாகி, உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக்கும். உள்ளம் தூய்மையாக இருப்பவன், தான் காணும் காட்சிகளில் எல்லாம் கடவுளையே காண்பான். மன மாசற்றவன் அகமும் புறமும் பரிசுத்தத்தை முழுமையாக உணர்வான்.
சேர்த்துவைத்த பொருள் அனைத்தும் இறந்தவர்களுடன் செல்வதில்லை என்பதைக் கண்டுகொண்ட பிறகும், மனிதன் பொருள் தேடி பொருளில்லாமல் அலைகிறான். கடவுள் சத்தியமாக இருக்கிறார், நம்மைக் கவனித்துக்கொண்டே இருக்கிறார் என்று நம்பும் கூட்டம் அதிகரித்தால், உலகம் எங்கும் அறநெறி தழைத்தோங்கும்; அறநெறி மலர்ந்தால், பூவுலகமே சொர்க்கமாகும்.
காலம் மிகவும் அரிய விஷயம். வீணே காலத்தைக் கழிக்காதீர்கள். காலன் நமக்குப் பின்னே விரைந்து வந்துகொண்டிருக்கிறான். அதற்குள் உங்களால் இயன்ற பயனுள்ள செயல்களைச் செய்வீர்களாக! சத்திரத்திலே தங்கிக் களைப்பாறலாம். ஆனால், சத்திரத்தை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. சத்திரத்தை விட்டு வெளியேறுவதுபோல, இந்த உலகமாகிய சத்திரத்தை விட்டும் ஒரு நாள் நாம் வெளியேற வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
தொகுப்பு:ஆர்.வேங்கடசுப்ரமணியன், விசாகப்பட்டினம்