சிவலிங்க வழிபாடு!
அன்பே வடிவான ஈசனை, சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுவது பெரும் சிறப்பு என்று ரிஷிகள் கூறுகிறார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
1. புற்றுமண் லிங்கம் - முக்தி தரும்.
2. ஆற்றுமண் லிங்கம் - பூமி லாபம் உண்டாக்கும்.
3. பச்சரிசி லிங்கம் - பொருள் பெருகும்.
4. சந்தன லிங்கம் - சுகபோகம் உண்டாகும்.
5. மலர் லிங்கம் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
6. அரிசிமாவு லிங்கம் - உடல் வலிமை ஏற்படும்.
7. பழ லிங்கம் - நல்லின்ப வாழ்வு கிட்டும்
8. தயிர் லிங்கம் - நற்குணம் பெறலாம்
.
9. தண்ணீர் லிங்கம் - மேன்மை அடையலாம்.
10. அன்ன லிங்கம் - உணவுப்பஞ்சம் ஏற்படாது.
11. தர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியில்லா நிலை கிட்டும்.
12. சர்க்கரை, வெல்லத்தால் ஆன லிங்கம் - இன்பம் கிடைக்கும்.
13. பசு சானை லிங்கம் - நோயற்ற வாழ்வு கிட்டும்.
14. வெண்ணெய் லிங்கம் - மனமகிழ்வு அதிகரிக்கும்.
15. ருத்ராட்ச லிங்கம் - நல்லறிவு வாய்க்கும்.
16. விபூதி லிங்கம் - செல்வளம் உயரும்.
- ப. சரவணன், ஸ்ரீரங்கம்
விஸ்வாமித்திரர் சொன்ன கந்தன் பெருமை!
ஸ்ரீராமாயணத்தில் ஒரு சம்பவம். அதாவது, ஸ்ரீராமபிரானுக்கு கந்தப் பெருமானின் சரிதத்தை விவரித்த விஸ்வாமித்திரர், கந்தனின் கதையைப் படிப்பவருக்குக் கிடைக்கும் பலன்களையும் விளக்கியுள்ளார். அவர் சொன்ன பலஸ்ருதி ஸ்லோகம்:

இமம் ச்ருணுயாத் ராம
கார்த்திகேயஸ்ய ஸம்பவம்
ஸர்வ பாப விநிர் முக்தோ
யாதிப்ரஹ்ம ஸநாதநம்
பக்தச்சய: கார்த்திகேயே காகுத்ஸ்த
புவிமானவ ஆயுஷ்மாந்
புத்ர பௌத்ரைச்ச
ஸ்கந்த ஸாலோலையம் ஆப்நுயாத்
கருத்து: ஸ்ரீராமா! கார்த்திகேயனுடைய இந்தச் சரிதத்தை யார் அறிகின்றாரோ, அவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு, நிரந்தரமானப் பேரின்பத்தை அடைகிறார்.காகுஸ்தா! உலகில் கார்த்திகேயனிடத்தில் பக்தியுடைய மனிதன் எவனோ அவன், புத்திரன் மற்றும் பேரன்மாருடன் நீண்ட ஆயுளை உடையவனாக வாழ்ந்து, நிறைவில் ஸ்கந்த லோகத்தில் இருக்கும் பேற்றினை அடைவான்.
- டி.எம்.ரத்தினவேல், சத்தியமங்கலம்
ஸப்த ராம திருத்தலங்கள்
நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம் தில்லைவளாகம். இங்கே சீதாபிராட்டியார், லட்சுமணன் மற்றும் அனுமனுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீகோதண்டராமர் கொள்ளை அழகு. ரேகைகளும் கைகால் நகங்களும் மிகத் தத்ரூபமாகத் திகழும் பஞ்சலோகத்திலான இந்த விக்கிரகத் திருமேனி சிற்ப அற்புதம்தான்!
தில்லைவளாகம் செல்வோர் இந்த ராமமூர்த்தியைத் தரிசித்து வரம்பெற்று வாருங்கள். அத்துடன், வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து அருள்பெற வேண்டிய ராமன் திருத்தலங்கள் ஏழு உள்ளன. ஸப்த ராம திருத்தலங்கள் எனச் சிறப்பிக்கப்படும் அந்தத் தலங்கள்: அயோத்தி, திருப்புல்லாணி, சீர்காழி, திருவெள்ளியங்குடி, திருஎவ்வுள், திருப்புள்ளம்பூதங்குடி, திருப்புட்குழி. இவற்றில் அயோத்தியைத் தவிர, மற்றவை நம் தமிழகத்திலேயே இருப்பது, நாம் செய்த பெரும்பாக்கியம்!
- வசந்தா மாரிமுத்து, சென்னை

விசேஷமாக ராம தரிசனம்!
திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள திருத்தலம் பொன்விளைந்த களத்தூர். இங்கு அருள்பாலிக்கும் ராமபிரான் சதுர்புஜங்களுடன் காட்சி தருகிறார். அதேபோல் பத்ராசலத்தில் அருள்புரியும் ராமபிரானும் நான்கு திருக்கரங்களுடன் திகழ்கிறார். அம்பு, வில், சங்கு, சக்கரம் தாங்கியிருக்கிறார் இந்த ராமன். இதிலும் ஒரு விசேஷம் உண்டு. வழக்கமாக சங்கு, சக்கரங்கள் முறையே பெருமாளின் இடக்கரத்திலும் வலக்கரத்திலுமாகத் திகழும். ஆனால், இந்தத் தலத்தில் ராமனின் இடக்கரத்தில் சக்கரமும், வலக்கரத்தில் சங்கும் திகழ்வது சிறப்பம்சமாகும்!
- டி.பூபதிராவ், காஞ்சிபுரம்
‘பாகற்காய் பறிக்கும் தியாகேசா!’
யோக நெறியில் நிற்கும் சாதகர்கள், பாகற்காய் பொரியலும் தூதுவளைக் கீரை மசியலும் உண்பது வழக்கம். இவை, உடலில் யோக சாதனைக்குரிய மாற்றத்தை உண்டாக்குவதுடன், உடற்சூட்டைத் தணித்து மயக்கங்களை நீக்கும் என்பர்.தவயோக ராஜனாகத் திகழும் திருவாரூர் அருள்மிகு தியாகேசப் பெருமானுக்கு, உச்சிக்கால பூஜை வேளையில் தூதுவளையையும், பாகற்காயையும் நிவேதிக்கும் வழக்கம் இருந்தது. வெள்ளைப் பாகற்காயை நீளவாக்கில் வெட்டி நெய்யில் வதக்கி, மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நிவேதனம் செய்வார்களாம்.
முன்னாளில் பெருந்திருவிழாவின்போது ஒருநாளாகப் `பாகற்காய் மண்டபப் பிரவேசம்’ என்ற நிகழ்ச்சி இருந்ததாகக் கூறுகின்றனர். ‘ஆடாது ஆடி பாகற்காய் பறிக்கும் தியாகேசா’ என்றொரு பாடல் வரியும் உண்டு!
- சித்ரா மூர்த்தி, சென்னை - 20

உபதேசத் திருத்தலங்கள்!
சிவபெருமானின் உபதேசம் நிகழ்ந்த திருத்தலங்களைத் தரிசிக்க அறியாமை நீங்கும், கல்வி-கலைஞானம் ஸித்திக்கும் என்பார்கள் பெரியோர்கள். அப்படியான சிவத்தலங்கள் சில வற்றைக் காண்போமா?
உத்திரகோசமங்கை: உமையம்மைக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம் இது.
ஓமாம்புலியூர்: இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, உமாதேவிக்கு, பிரணவப் பொருளை உபதேசித்ததாகப் புராணம் சொல்கிறது.
இன்னம்பர்: அகத்தியர், இறைவனிடம் இலக்கண உபதேசம் பெற்ற தலம்.
ஆலங்குடி: சுந்தரர் இந்தத் தலத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்றார்.
சிதம்பரம்: பைரவரின் பிரம்ம தத்துவத்தை உபதேசித்த தலம்.
திருப்பனந்தாள்: அம்பாள், சுவாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
திருக்கடவூர்: பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
மயிலாடுதுறை: குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்ற ஊர்.
திருவானைக்கா: அம்பிகை ஞானோபதேசம் பெற்ற திருத்தலம்.
- ப.சரவணன், ஸ்ரீரங்கம் - 20
கீதை கூறும் தவங்கள் மூன்று!
பகவான் கிருஷ்ணன் தன்னுடைய கீதையில், மனிதர்களின் குணங்கள், அவர்களின் உணவு போன்ற பல விஷயங்களையும் மூன்று வகைகளாகப் பகுத்துக் கூறி இருக்கிறார். அதேபோல் தவத்தையும் மூன்று வகைகளாகப் பகுத்துக் கூறி இருக்கிறார்.

பிறரை அழிக்க வேண்டும் என்பதற்காக, தன்னைத்தானே வருத்திக்கொண்டு செய்யும் தவம், தாமச வகையைச் சேர்ந்தது. தாமச குணம் உள்ளவன், பொறாமையினால் தன்னுடைய தாழ்ந்த சுபாவத்துக்கு இடம்கொடுத்து, பிறரை அழிப்பதற்கான காரியங்களில் ஈடுபடுகிறான். அவன் என்னதான் தவமும் பூஜையும் செய்தாலும், அவனுடைய நோக்கம் பிறருக்குத் தீமையை ஏற்படுத்துவதே என்பதால், அந்தத் தவம், தாமச தவம் ஆகும். அதனால் ஒரு நன்மையும் கிடையாது.
அடுத்ததாக, ராஜஸ குணம் கொண்டவனின் தவம். ராஜஸ குணம் கொண்டவன், தான் செய்யும் தவம், பூஜை அனைத்தின் பலனையும் தான் ஒருவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவான். அநித்தியமான விஷய போகங்களில் ஈடுபாடு கொண்டு செய்யும் தவம் இது என்பதால், இம்மாதிரியான தவத்தினை மேற்கொள்பவன் மறுபடியும் மறுபடியும் பிறப்பு - இறப்புச் சுழலில் சிக்கித் தவிக்கிறான்.
ஆனால், உயர்ந்த நம்பிக்கையுடனும், யோகத்திலே உறுதி பெற்றவனாக, தன்னலம் கருதாமல் செய்யும் தவம், சாத்விக வகையைச் சேர்ந்தது. இதுவே சிறந்த தவம் ஆகும். இதனால் உள்ளத் தூய்மை உண்டாவதுடன், இறைவனின் அன்புக்கும் பாத்திரமாகி, பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை அடைகிறான்.

பதினாறு திருநாமங்கள்!
மகாவிஷ்ணுவுக்குப் பதினாறு நாமாக்கள் உண்டு. எந்தெந்தத் தருணங்களில் எந்தெந்த நாமத்தைச் சொல்லி அவரை வணங்க வேண்டும் என்று ஞான நூல்கள் வழிகாட்டியுள்ளன.

மருந்து உட்கொள்ளும்போது - விஷ்ணு
உணவு உட்கொள்ளும்போது - ஜனார்த்தனன்
படுக்கச் செல்லும்போது - பத்மநாபன்
திருமணத்தின்போது - பிரஜாபதி
யுத்தம் செய்யும்போது - சக்ரதாரி
வெளியில் கிளம்பும்போது - திரிவிக்கிரமன்
நண்பர்களைச் சந்திக்கும்போது - ஸ்ரீதரன்
கெட்ட கனவுகண்டால் - கோவிந்தன்
கஷ்டம் வரும்போது - மதுசூதனன்
காடுகளில் செல்லும்போது - நரசிம்மன்
நெருப்பால் கஷ்டம் வரும்போது - ஸ்ரீமஹாவிஷ்ணு
தண்ணீரால் கஷ்டம் வந்தால் - ஸ்ரீவராகன்
மலையின் மேல் ஏறும்போது - ஸ்ரீராமன்
நடக்கும்போது - வாமனன்
இறக்கும் நிலையில் - நாராயணன்
எல்லா சமயங்களிலும் - மாதவன்
- புவனா