கல்லிலே கலைவண்ணம் கண்ட நம் முன்னோர், ஆலயம் ஒவ்வொன்றையும் சிற்பப் பொக்கிஷமாகவே படைத்தார்கள். கோபுரம், விமானம், மண்டபங்கள் மட்டுமின்றி, விதானங்களைத் தாங்கும் தூண்களையும் சிற்ப அற்புதங்களாக்கினார்கள். அவ்வகையில், ஆலய மண்டபத் தூண்களில் கலையழகுக்காக பெரிய அளவிலான தெய்வத் திருவுருவங்கள், காலப்போக்கில் தனித்தன்மை பெற்று வழிபாட்டுக்கும் உரியதாகிவிட்டன.

இங்கே தரிசனம் தரும் ஸ்ரீராமன் அருள்வது, குடந்தை ஸ்ரீராமஸ்வாமி கோயிலில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக் கம்பத்தடி மண்டபத்தூணில் நெடும் சிலைகளாக அமைந்துள்ள அகோர வீரபத்திரர், அகோர காளி, அக்னி வீரபத்திரர், அக்னி காளி ஆகிய உருவங்கள் இப்போது வழிபாட்டுக்குரியதாக உள்ளன. மக்கள் வெண்ணெய் உருண்டைகளை இவற்றின் மீது வீசி, பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.
• தொண்டை மண்டலத்தில் ஆலயத்தூண்களில் விளங்கும் சரபேஸ்வரருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்து பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர். கோயம்பேடு, குசலவபுரீஸ்வரர் ஆலயத்தின் முன்னேயுள்ள 16 கால் மண்டபத்தில் அமைந்துள்ள சரபேஸ்வரர் தனிச்சிறப்புடன் வழிபடப்படுகின்றார். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிரதோஷ வேளைகளிலும் ஏராளமான மக்கள் இங்கு வழிபடுகின்றனர்.
• ஆவுடையார்கோயில் என அழைக்கப்படும் திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி ஆலயத்தின் முக மண்டபத்தூணில் பெரிய குதிரை வீரனின் சிலை உள்ளது. இது மாணிக்க வாசகருக்காக இறைவன் குதிரைச் சேவகனாக வந்த வடிவமாகும். இவரைக் `குதிரைச்சாமி' என அழைக்கின்றனர். இவருக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதே கோயில் தூணில் எழுந்தருளியுள்ள வீரபத்திரர் பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாகத் திகழ்கிறார்.
• சிதம்பரம் நடராஜர் ஆலயத் தூண்களில் எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்தர், தண்டபாணி ஆகிய திருமேனிகளுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
• திருவாரூரில் தியாகராஜர் சபா மண்டபத்தூணில் அமைந்துள்ள மூலாதாரக் கணபதிக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
• திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தக்கரையில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இதன் ஈசான மூலையிலுள்ள தூணில் முருகப்பெருமான் அருணகிரிநாதரின் வேண்டுகோளின்படி, பிரபுடதேவ மகாராஜன் உள்ளிட்ட பலரும் காணக் காட்சியளித்தபின், அதில் கல் திருமேனியாக எழுந்தருளினார். அந்தத் தூணை மையப்படுத்திக் கருவறை உள் மண்டபம் மகா மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். இது ‘கம்பத்திளையனார் சந்நிதி' என்ற தனிக்கோயிலாகப் போற்றப்படுகிறது.
• சிருங்ககிரி, திருப்புகலூர் முதலிய தலங்களில் தூண்களிலுள்ள விநாயகர் ஸ்தம்ப கணபதி எனும் பெயரில் சிறப்புடன் வழிபடப்படுகின்றார்.
• ஒற்றைச் சிற்பங்கள் மட்டுமின்றி, சில ஆலயங்களில் புராணக் கதைகளும் தூண் சிற்பங்களாகத் திகழ்கின்றன.
• காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயத்தில் கோபுரத்துக்கு முன் உள்ள பதினாறுகால் மண்டபத்தூண்களில் சிவப் பராக்கிரமக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
• தாராசுரம் ஐராவதேசுவரர் ஆலயத்தூண்களில் முருகன் திருமணம், சிவனுடைய திருமணம், தேவர்கள் ஊர்வலம், தெய்வயானைத் திருமணம் முதலியன தொடர் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மார்க்கண்டேயன் கதை, தாருகாவனத்து ரிஷிகளின் கர்வப் பங்கக் கதை முதலான கதைகள் தூண்களில் தொடர் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன.