
ஆன்மிக துளிகள்...

திருஞானசம்பந்தர் மணவிழா...
1. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், வைகாசி மூலத்தைக் கடைநாளாகக்கொண்டு திருஞானசம்பந்தர் விழா பத்து நாள்கள் கொண்டாடப்படும். நிறைவு நாளில் திருஞானசம்பந்தர் வீதி உலா கண்டபின்னர், கருவறைக்கு முன்னுள்ள பெரிய மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கே ஞானபூரணியாருக்கும் திருஞானசம்பந்தருக்கும் திருமண விழா நடைபெறும். அதன் பின்னர், உள் பிராகாரத்தை வலம்வந்து ஜோதியில் கலக்கும் ஐதீக விழா நடைபெறும்.
சப்த தாண்டவங்கள்!
2. நடராஜரின் தாண்டவக் கோலங்களில் ஏழு தாண்டவங் களை `சப்த தாண்டவங்கள்' எனச் சிறப்பிப்பார்கள். அவை:
தில்லை: ஆனந்த தாண்டவம்
மதுரை: சந்தியா தாண்டவம்
திருப்புத்தூர்: கெளரி தாண்டவம்
குற்றாலம்: திரிபுர தாண்டவம்
திருவாலங்காடு: காளிகா
தாண்டவம்
நெல்லை: முனி தாண்டவம்
இவைபோக, இருண்ட காடுகளில் சம்ஹார தாண்டவம் ஆடுகிறாராம் பரமன்.
வெள்ளியம்பலம்...
3. சிவபெருமான் ஆடும் ஐம்பெரும் மன்றங்களில் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சி உடனாய சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மகா மண்டபத்தின் வடபகுதியில் உள்ளது. இதில் பெருமான் நெடிய திருமேனியுடன் கால்மாறி ஆடும் கற்பகமாகக் காட்சியளிக்கிறார். இவர் ஆடிக்கொண்டிருக்கும் சபையைத் தவிர மற்றைய நான்கு தலங்களிலுள்ள சபைகளை நினைவூட்டும் வகையில் அமைந்த பெரிய மண்டபங்களும் மதுரையில் உள்ளன.
பாலசம்பந்தர்...
4. சிவாலயங்களில் அமையும் திருஞான சம்பந்தப்பெருமானின் மூர்த்தம்... பால ஞானசம்பந்தர், பாலறாவாயர், திருஞான சம்பந்தர் என மூன்று கோலங்களில் அமையும்.
பால ஞானசம்பந்தர் வடிவில், அவர் வலது கை சுட்டு விரலால் இறைவனைச் சுட்டிக் காட்டிக்கொண்டு, ஒரு காலை ஊன்றி மறுகாலைத் தூக்கி நடனமாடும் கோலத்தில் விளங்குகிறார்.
பாலறாவாயர் வடிவில், ஒரு கையால் இறைவனைச் சுட்டிக்காட்டியபடியும், மறுகையில் பால் கிண்ணத்துடனும் காட்சியளிக்கிறார்.
திருஞானசம்பந்தர் பொற்றாளமிட்டுப் பாடும் கோலத்தில் நின்றவாறு காட்சியளிக்கிறார். அவர் திருமணக் கோலத்தில் தேவியுடன் விளங்குவது ஆச்சாள்புரத்தில் மட்டுமே.
- பூசை ஆட்சிலிங்கம்