
திருப்பட்டூரில் சங்கமிப்போம்! - சிலிர்க்கும் தரிசனம் சிறப்பு தரிசனம்!
திருப்பட்டூர் - நம் வாசகர்கள் பலருக்கும் மிகப்பரிச்சயமான திருத்தலம். ஆணவத்தால் தன்னுடைய பெருமைகளைத் தொலைத்து தவித்த பிரம்மதேவனுக்கு, சிவனருளால் மீண்டும் மகிமை கிடைத்த தலமிது.
‘இங்கு வரவேண்டும்’ என்று விதிக்கப்பட்டவர்களே திருப்பட்டூர் க்ஷேத்திரத்தை அடைவார்கள். அவ்வண்ணம், திருப்பட்டூர் வந்து சேரும் அன்பர்களின் தலைவிதியை நன்முறையில் மாற்றி எழுதவேண்டும் என்பது பிரம்மனுக்குச் சிவம் இட்ட கட்டளை. அதன்படி, நம் தலையெழுத்தை மாற்ற பிரம்மன் காத்திருக்கும் புண்ணியப் பதி இது!

ஆதியில் தேவகணங்கள் யாவும் சங்கமித்து வேதகோஷம் முழங்க சிவ வழிபாடு செய்த இவ்வூருக்கு, `திருப்பிடவூர்' என்று பெயர். அதுவே திருப்பட்டூர் என்று மருவிய தாகச் சொல்கிறது தலபுராணம்.
முருகப்பெருமான் சூரபதுமனை சம்ஹாரம் செய்ய படைகளைத் திரட்டிச் செல்லும் போது, இங்கு வந்து வணங்கினார் என்பதால், ‘திருப்படையூர்’ என்றும் ஒரு பெயருண்டு என்கிறார்கள். பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் மட்டுமின்றி, அருள்மிகு காசிவிஸ்வநாதர் ஆலயம், 3500 ஆண்டுகள் பழைமையான, மூவேந்தர்களாலும் தொழப்பட்ட ‘ஞான உலா அரங்கேற்றிய ஐயனார்’ திருக்கோயில், கிராம தேவதையாய் காக்கும் மாரியம்மன் ஆலயம் என திருக்கோயில்கள் நிறைந்த புண்ணிய பூமி திருப்பட்டூர்.
திருக்கயிலாயத்துக்கு நிகராகப் போற்றப்படும் இந்தத் தலத்தில், பிரம்மதேவன் உருவாக்கிய பிரம்மதீர்த்தமும் சிவலிங்கத் திருமேனிகளும் விசேஷம் வாய்ந்தவை. இறைவனின் திருநாமம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர். அம்பிகை- பிரம்மசம்பத் கௌரி; இவளை வணங்கி வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.
பல்வேறு தலங்களில் பிரம்மதேவர் பிரதிஷ்டை செய்து வழி பட்ட 12 சிவலிங்கங்கள், பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் - சிற்றாலயங்களில் திகழ்வது, சிறப்பம்சம். திருப்பட்டூர் சென்று வழிபட்டால் கங்கைக்கரையில் வீற்றிருக்கும் 108 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்குமாம். வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் போற்றிய திருத்தலம் இது. ஆக சிவனருளோடு, இந்த மகான்களின் சாந்நித்தியமும் பரிபூரண மாக நிரம்பியிருக்கும் திருத்தலம் திருப்பட்டூர்.

இத்தகு மகிமைகள்பல கொண்ட திருப்பட்டூரில் உங்களுக்காகக் காத்திருக் கிறது சிலிர்க்கும் தரிசனம்... சிறப்பு தரிசனம்! உலக நன்மைக்காகவும் வாசகர் களின் குடும்பங்களில் மகிழ்ச்சி பொங்கிப் பெருகவும், வரும் 23.9.18 ஞாயிறன்று திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அற்புத தரிசனம், சிறப்பு வழிபாடு, ஆன்மி கக் கலந்துரையாடல்... என உங்களோடு இணைந்து, மகேசனின் அருள்பெற்று திளைக்க நாங்களும் காத்திருக்கிறோம்.
வாருங்கள் திருப்பட்டூரில் சங்கமிப்போம்;
சிவனருளால் சிந்தை மகிழ்வோம்!
உங்கள் கவனத்துக்கு...
சிறப்பு தரிசனம்: திருப்பட்டூர் கோயில்கள்!
தரிசன நாள்: 23.9.18 ஞாயிறு
எப்படிச் செல்வது?: திருச்சி-சென்னை தேசிய நெடுஞ் சாலையில், திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்தி லிருந்து சுமார் 30 கி.மீ. தொலை விலுள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்துநிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு. தேசிய நெடுஞ் சாலையில் சிறுகனூர் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள திருப்பட்டூருக்கு ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோவில் செல்லலாம்.
அன்பார்ந்த வாசகர்களே...
சிறப்பு தரிசனம் மற்றும் வழிபாட்டில் கலந்துகொள்ள விரும்பும் வாசகர்கள், திருப்பட்டூர் மகிமைகுறித்த தகவல் துணுக்குகளை கீழ்க்காணும் முகவரிக்கு எழுதியனுப்புங்கள். கச்சிதமாகத் தகவல் அனுப்பும் 21 வாசகர்கள், சிறப்புத் தரிசனத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்குச் சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது!
சிறப்புத் தகவலுடன் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் விவரமும் அவசியம். அவரவர் ஊரிலிருந்து திருப்பட்டூர் வந்து செல்லும் பொறுப்பு வாசகர்களையே சேரும்.
தகவல் அனுப்பவேண்டிய முகவரி :
`சிறப்பு தரிசனம்... சிலிர்க்கும் தரிசனம்'
சக்தி விகடன், 757,அண்ணாசாலை, சென்னை-600 002
email: sakthi@vikatan.com