இறைவனைப் போற்றிப் பாடி வழிபடுவது ஒருமுறை அவரை நிந்தனை செய்வதையே வழிபாட்டு முறையாக்கிக் கொண்டவர்களும் உண்டு. இதனை நிந்தாஸ்துதி என்பர்.

புலவர் ஒருவர் சிவனைப் பற்றிப் பாடும்போது “பக்தர்களே! உங்கள் குறைகளைச் சொல்லி சிவபிரானிடம் மன்றாடாதீர்கள். ஏனெனில், அவரே தில்லையில் மன்றாடிக் கொண்டுதான் இருக்கிறார். ஏற்கெனவே, தனது நிலை சரியில்லாமல் மன்றாடுபவரிடத்தில் நாம் மன்றாடுவதால் என்ன பயன்’’ என்று பாடுகிறார்!
`மன்றாடுதல்’ என்பதற்குக் குறைகளைச் சொல்லி முறையிடுதல் என்று பொருள். வேறொரு பொருளும் உண்டு. அதாவது, `அம்பலத்தில் ஆடுதல்’ என்றும் ஒரு பொருள் சொல்லலாம். இந்தச் சிலேடையைப் பயன்படுத்தி நிந்தாஸ்துதியாக இறைவனைப் போற்றிப் பாடுகிறார், அந்தப் புலவர்!
அதேபோல், காளமேகப் புலவர் ஒரு பாடலில் சிலேடையை எப்படிக் கையாளுகிறார் பாருங்கள்...
தில்லையின் கூத்தரசன் சந்நிதியில் புலி முனிவராகிய வியாக்கிரபாதர் இறைவனின் ஆடலை தரிசித்த நிலையில் காணப்படுகிறார். `ஆட்டு’ என்பது ஆடலைக் குறிக்கும். இந்தச் சொல்லை வைத்துக்கொண்டு வித்தை செய்கிறார், காளமேகப் புலவர். அதாவது, நடன தரிசனம் காணும் வியாக்கிரபாதரைப் பார்த்து, ஆட்டை விட்டு (ஆடலைக் காண்பதை விட்டு), புலி (வியாக்கிர பாதர்) அகலாதோ எனச் சிலேடையாக வினா எழுப்புகிறார்.
இதோ அந்தப் பாடல்...
நாட்டுக்குள் ஆட்டுக்கு நாலுகால் ஐயாநின்
ஆட்டுக் கிரண்டுகால் ஆனாலும் நாட்டமுள்ள
சீர்மேவு தில்லைச் சிவனேஇவ் வாட்டைவிட்டுப்
போமோசொ லாயப் புலி.
(சிந்தனைச் சிலேடைகள் நூலிலிருந்து...)
- ஆர்.சி.சம்பத்
படம்: கே.எம்.பிரசன்னா
