
எத்தனை சிதம்பரங்கள்?!
‘எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்’ எனப் பாடியுள்ளார் திருமூலர். அகிலத்தின் ஒவ்வொரு துகளிலும் பரமனின் நடனம் நடந்துகொண்டே இருக்கிறது. அதனால் அவ்விடங்கள் யாவுமே சிதம்பரம் ஆகும். இதையொட்டியே ‘எங்கும் சிதம்பரம்’ எனப் பாடிப் பரவுகிறார் திருமூலர்!

* திருவெண்காட்டை புராணங்கள் ஆதி சிதம்பரம் எனப் போற்றுகின்றன. கோவை மாவட்டம் பேரூர் பட்டீச்சரம், மேலைச் சிதம்பரம் எனப் போற்றப்படுகிறது.
* இலங்கையில் காரைத்தீவில் அமைந்த சௌந்தராம்பிகை சமேத சுந்தரேசுவரர் ஆலயத்தை ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றுவர். இந்தத் தலத்தில் ஆண்டியவர் என்பவர் தவம் இருந்தாராம். இவரின் சீடரான சிவமுருகர், தமது குருவின் ஆணைப்படி ஐயனாருக்கு கோயில் கட்டினார். ஐயனார் இவருக்கு நடராஜராகவே காட்சியளித்ததாகக் கூறுவர். பிறிதொரு காலம் சிவாலயம் அமைக்க விரும்பினார் சிவமுருகர். இறைவன் ஆணைப்படி தில்லைக்கு வந்து, சிவலிங்கம், நந்தி, அம்பிகை திருவடிவங்களை வடிக்கச் செய்து தமது ஊரில் நிலைப்படுத்தினாராம்!
* அருட்பிரகாச வள்ளலார் தாம் அமைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆலயம் அமைந்த வடலூரை, உத்தரஞான சிதம்பரம் என அழைக்கிறார். வடநாட்டில் சதாரா எனும் இடத்தில் பெரிய நடராஜர் ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இதையும் உத்தர சிதம்பரம் என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் பெரும்பாலான கட்டட அமைப்பு, நம் தில்லை கோயிலைப் போன்றே திகழ்வது குறிப்பிடத்தக்கது.
* வேதங்கள் வழிபட்ட வேதாரண்யம் திருத்தலத்தை கீழைச் சிதம்பரம் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். இந்தத் தலத்தை ஒட்டியுள்ள கடல்பகுதிக்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். தேவர்களின் வேண்டுகோளை ஏற்று, சிவபெருமான் அக்னி தாண்டவ சபையை இங்கே தோற்றுவித்து, அதில் தனது ஆடலை ஆடிக்காட்டி அருளியதாக புராணம் சொல்லும்.
- பூசை ஆட்சிலிங்கம், சென்னை-4