

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சமீபத்தில் வீசிய 'தானே’ புயற்காற்றால் கடலூர், நாகை மாவட்டங்களும் புதுச்சேரி மாநிலமும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி, லட்சோப லட்சம் மக்களின் வாழ்வாதாரங்கள் நசித்துப் போயிருப்பதை எண்ணும்போது நெஞ்சம் கனக்கிறது.
'மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பது சக்தி விகடனின் மாபெரும் நம்பிக்கை. 'ஆண்டவன் தொண்டர்க்குத் தொண்டன்’ என்பதற்கும், 'அடியார்க்குச் செய்யும் உதவியே ஆண்டவனுக்குச் செய்யும் உதவி’ என்பதற்கும் புராணங்களில் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன.
அந்த வகையில், 'தானே’ புயலின் கோரத் தாண்டவத்திலிருந்து கடலூர் - புதுச்சேரி மக்களை மீட்டெடுப்பதற்கான துயர் துடைப்புத் திட்டத்துக்கு உதவிடும் வகையில் முதல் பங்களிப்பாக விகடன் குழும நிறுவனங்கள் சார்பாக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். நீங்களும் கருணை உள்ளத்தோடு அவரவரால் இயன்ற நிதியை அனுப்பிக்கொண்டு இருக்கிறீர்கள். காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழருவி மணியன் ரூ.67,000 நிதி அளித்துள்ளார். இவை தவிர, வாசகர்களிடமிருந்து இதுவரை ரூ.3 லட்சத்துக்கும் மேல் நிதி வந்துள்ளது. 'எந்தப் பெயருக்கு நிதி அனுப்ப வேண்டும்? எப்படி அனுப்ப வேண்டும்?’ என்று தொடர்கின்றன உங்களின் மனித நேயமிக்க விசாரணைகள்.
##~## |
வெளிநாட்டு வாசகர்கள் எங்களின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண்: 443380918-க்கு (ஆர்.டி.ஜி.எஸ்./ஐ.எஃப்.எஸ்.சி கோட்: IDIB 000C032 எத்திராஜ் சாலை கிளை, சென்னை-600 008) அனுப்பலாம். நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடனின் அண்ணா சாலை அலுவலகத்தில் அளித்து, உரிய ரசீதை உடனே பெற்றுக் கொள்ளலாம்.
Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/0304 dt.10052010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே... நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருப்பினும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தையும் தயவுசெய்து பூர்த்திசெய்து, 'தானே துயர் துடைப்புத் திட்டம்’ என்று உறையின் மீது மறவாமல் குறிப்பிட்டு 'ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600002’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.
உங்களுக்கான ரசீதுகளை அனுப்பிவைப்பதோடு, துயர் துடைப்புத் திட்டத்தில் தொடரும் முன்னேற்றங்களை விகடன் இணையதளத்தின் மூலம் தொடர்ந்து பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். www.vikatan.com/thane என்ற இணைய முகவரியில், இது தொடர்பான பூர்வாங்க விவரங்களை இப்போதே நீங்கள் காணலாம். நிதி அளித்து வரும் நல்ல மனங்களின் பட்டியலும், நமது பல்வேறு நிவாரண நடவடிக்கைக்கான செலவுக் கணக்கும் அந்த இணைய முகவரியின் வாயிலாக அடுத்தடுத்து உங்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.

'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுப்பதற்கான நிவாரணப் பணிகளோடு கூடவே, அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையும் புத்துணர்ச்சியும் ஊட்டுவதும் மிக முக்கியமான ஒன்று எனப் பலப்பல வாசகர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள். இந்த வகையில், சக்தி விகடன் பத்திரிகை தன்னாலான முயற்சியில் இறங்கியுள்ளது.
கடலூர், மஞ்சகுப்பம் பகுதியில் முகாம் அமைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு - அதாவது, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவரிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர் வரை - அனைவரையும் அழைத்து, அவர்களும் அவர்களின் குடும்பங்களும் இந்தத் துயரிலிருந்து மீண்டு வருவதற்கான கூட்டுப் பிரார்த்தனைக்கும், சிறப்புப் பேச்சாளர்களைக் கொண்டு மன தைரியம் ஊட்டுவதற்கான சிறப்புச் சொற்பொழிவுக்கும் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் 'உலக சமுதாய சேவா சங்க’த்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது, சக்தி விகடன்.
இதற்காக, சுமார் 500 பேர் அமரும்படியான இடம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வருகிற ஞாயிற்றுக்கிழமை 29-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் இந்த முகாமில் கலந்துகொள்ள, இட வசதியைக் கருத்தில் கொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு விருப்பம் தெரிவிப்பவர்களுக்கே முன்னுரிமை வழங்க இயலும். தங்கள் மாணவர்களை இதில் பங்கேற்கச் செய்யும் விருப்பம் உள்ள பள்ளி/ கல்லூரி ஆசிரியர்கள், முதல்வர்கள் மற்றும் தாளாளர்களும் இந்தத் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
'வீழ்வது எழுவதற்காகவே’ என்பது தன்னம்பிக்கைச் சுடர்விடும் வாக்கியம். வாருங்கள், அதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டுவோம். 'எத்தனைச் சோதனைகள் வந்தாலும் எங்கள் மனத் திண்மையை அவை இம்மியளவும் குறைத்துவிடாது’ என்பதை உலகுக்குப் பறைசாற்றுவோம்!
- ஆசிரியர்
