

பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூருவில் இருந்து சுமார் 68 கி.மீ. தொலைவில் உள்ளது கோலார் நகர். இந்த நகரத்தை தலைநகரமாகக் கொண்டு, 3-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவர்கள், கங்க மன்னர்கள். பிறகு, அந்த நகரத்தை சோழர்கள் கைப்பற்றினார்கள். அடுத்து ஹொய்சாளர்கள், விஜயநகரப் பேரரசு மன்னர்கள் எனப் பலரும் ஆட்சி செய்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தங்கச் சுரங்கம் உள்ள கோலார் தங்கவயலுக்கும் கோலார் நகருக்கும் 27 கி.மீ. தூரம். இது ஆலயங்களுக்கும் பெயர் பெற்ற நகரம்.
##~## |
மண்டபம் போன்ற நுழைவாயில். உள்ளே சென்றால், வெளிப் பிராகாரம், உட்பிராகாரம் இரண்டுமே உள்ளன. உட்பிராகாரத்தில் நுழையும் வாசலுக்கு வலது பக்கத்தில், சுவரில் ஐந்து அடி சதுரக் கல்லில் யுத்தக் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மிக நுணுக்கமான, அரியதொரு சிற்பம்!
கருவறையின் வெளிச் சுவரில் ஏராளமான கல்வெட்டுக்கள். அவற்றில் பெரும்பாலானவை தமிழில் அமைந்தவை. 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் ராஜேந்திர சோழ மன்னர் (1012-1045) காலத்துக் கல்வெட்டுக்களாம் இவை! பிறகு, 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் காலத்தில், சில கல்வெட்டுக்கள் கன்னட மொழி எழுத்துக்களைக் கொண்டு இங்கே அமைக்கப்பட்டுள்ளன.
கருவறையில், நேரே பார்க்கும் பக்தர்களுக்கு சப்த மாதா சிற்பமே தெரிகிறது. உள்ளே, சப்த மாதாவுக்கு இடப்புறம் மகிஷாசுரமர்த்தினி (துர்க்கா) எட்டுக் கைகளுடன், ஒரு கையில் உள்ள திரிசூலத்தால் காலடியில் உள்ள அசுரனைக் கொல்லத் தயாராகும் கோலத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்கைதான் 'கோலாரம்மா’ என மக்களால் அழைக்கப்படுகிறாள்!

கோலாரம்மா உக்கிரமாகக் காட்சி தருவதால், நேரடியாக பக்தர்கள் காண முடியாதபடி, ஒரு மூலையில் அமைக்கப்பட்டு, சப்த மாதாவுக்கு வலது பக்கம் நிறுத்தப்பட்டுள்ள நிலைக் கண்ணாடி மூலமாக தரிசிக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
மிகவும் சக்தி வாய்ந்தவள் இவள் எனப் பூரிக்கின்றனர் ஊர் மக்கள். இவளின் சந்நிதியில் வந்து தங்களது குறைகளைச் சொன்னால் போதும்... விரைவில் கவலைகளில் இருந்து விடுபட்டு விடலாம் என்கின்றனர் பக்தர்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் அதிகம். ஆனால், காலை 9 மணிக்குப் பிறகு, கோயில் நடை சார்த்தி இருப்பதுதான் வேதனை. இது தெரியாமல் 9 மணிக்குமேல் வரும் வெளியூர் பக்தர்கள் பலரும், ''கோலாரம்மாவைத் தரிசனம் செய்தால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்னு கேள்விப்பட்டு வந்தோம். இங்கு கருவறை சாத்திக் கிடக்குதே! வெளியிலிருந்துகூட அம்மாவைப் பார்க்க முடியாதபடி, கனமான மரக்கதவு போட்டுப் பூட்டி வெச்சிருக்காங்களே'' என்று புலம்பித் தவிக்கின்றனர்.
காலை 9 மணிக்குள் பூஜைகளை முடித்துவிட்டுச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வருகிறார் அர்ச்சகர். அதன் பிறகுதான் கோலாரம்மனையும் சப்த மாதாவையும் தரிசிக்க முடியும்! செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகலிலும் ஆலயம் திறந்திருக்குமாம்.
ஆவலுடன் கோலாரம்மாவைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாட்களில் செல்வதானால், காலை 9 மணிக்கு உள்ளேயும், மாலை 6 மணிக்கு மேலும் செல்வது உத்தமம். இரவு 8 மணிக்கு ஆலயம் நடைசாத்தப்பட்டுவிடும்.
படங்கள்: ச.வெங்கடேசன்