அகிலம் காக்கும் அன்னை!

##~## |
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஓலைக் குடிசை யில் அம்மனை வைத்து வழிபடத் துவங்கினார்கள். பிறகு காலப்போக்கில், குடிசையாக இருந்த கோயில், அழகிய, பிரமாண்டக் கட்டடமாக வளர்ந்திருக்கிறது.
திண்டிவனம் அருகேயுள்ள மேல்மலையனூர் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ... அந்தப் பலன்கள் இங்கே, இந்தத் தலத்திலும் கிடைக்கும் எனப் போற்றுகின்றனர், பெண்கள்.
செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், தொடர்ந்து ஏழு அல்லது ஒன்பது வாரங்கள் வந்து, அம்மனுக்கு செவ்வரளி மாலை அல்லது எலுமிச்சை மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால்... விரைவில் விரும்பியபடி வரன் அமையும்; தாலி பாக்கியம் நிலைக்கும் என்பது ஐதீகம்!

பிள்ளை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து, அம்மனைத் தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், குழந்தைச் செல்வம் கிடைக்கப் பெறுவார்கள் என்று போற்றுகின்றனர் பெண்கள். நோயில் இருந்து குணம் பெற வேண்டும் என்று, கொழுக்கட்டையில் அம்மனின் உருவம் பிடித்து, அதனை சூறை விட்டு வேண்டிக் கொள்வதும் இங்கே சிறப்பு.
அல்லிக்கேணியில் அருளும் பொருளும் அள்ளித் தரும் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிக்கு, மேல்மலையனூரில் நடைபெறுவது போலவே மயானக் கொல்லை முதலான விழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.
கடன் பிரச்னை, கணவன் - மனைவி உறவில் சிக்கல், எதிரிகள் தொல்லை என தவித்து வேதனைப்படுபவர்கள், இங்கே இந்தத் தலத்துக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால வேளையில் வந்து, அம்மனிடம் தங்களது கோரிக்கைகளை வைத்தால், கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள்; தம்பதியிடம் ஒற்றுமை மேலோங்கும்; எதிரிகள் தொல்லை முழுவதுமாக ஒழியும் என நேர்த்திக்கடன் செலுத்தும் அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
அகிலம் காக்கும் அழகுத் தெய்வமாம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியை மனதார வேண்டுங்கள். நீங்கள் வேண்டியதையெல்லாம் தந்தருள்வாள், அந்தக் கருணைத் தெய்வம்!
- பொ.ச.கீதன்
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்