மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை! - 28

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
பிரீமியம் ஸ்டோரி
News
தெரிந்த புராணம்... தெரியாத கதை! ( தெரிந்த புராணம்... தெரியாத கதை! )

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!  - 28
தெரிந்த புராணம்... தெரியாத கதை!  - 28
தெரிந்த புராணம்... தெரியாத கதை!  - 28

மிழ்க்கடவுள் முருகப்பெருமானை 'ஸுப்ரமண்யன்’ என்றும் சொல்வோம். எத்தனை அர்த்தமுள்ள பெயர் இது என்பது உங்களுக்குத் தெரியுமா? 'பிரம்மண்யன்’ என்றால், பிரம்மத்தை உணர்ந்த பரம ஞானம் பெற்றவன் என்று பொருள். 'ஸு’ என்பது இதனை மேலும் சிறப்பிக்கும் அடைமொழி. 'அதி உன்னதமான’ என்பது இதன் பொருள்.

பிரம்மண்யத்தின் அதிஉயர்வான நிலையை அடைந்தவன் ஸுப்ரமண்யன். அவனுக்கு மேலான ஞானம், தேஜஸ் வேறு இல்லை என்பது பொருள். ஆகவேதான், முருகப்பெருமானை ஞானக்கடவுள் என்கிறோம். அப்பேர்ப்பட்ட ஞானவடிவமான முருகப்பெருமான், ஒருமுறை தேவலோக மாம்பழம் ஒன்றைப் பெறமுடியாத காரணத்தால் கோபம் கொண்டு ஆண்டியாகப் போய்விட்டதாக எல்லோரும் அறிந்த ஒரு புராணக்கதை உண்டு.

நாரதர் ஒருமுறை கயிலாயத்துக்கு தேவலோக மாங்கனி ஒன்றைக் கொண்டு வந்து, அதை ஈஸ்வரன் கையில் தந்தார். அருகில் இருந்த கணபதி, முருகப்பெருமான் ஆகிய இருவரில் யாருக்கு அந்தக் கனியைக் கொடுப்பது என்ற பிரச்னை எழுந்தது. உடனே ஒரு போட்டி வைத்தார் ஈசன்.

'யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே அந்த மாங்கனி’ என்று முடிவெடுக்கப்பட்டது. மயில் மீதேறி ஏழு உலகங்களையும் சுற்றினார் முருகப்பெருமான். அவர் வருவதற்கு முன்னே அம்மையப்பனான உமையையும் ஈஸ்வரனையும் வலம் வந்து, 'அது உலகங்கள் அனைத்தையும் சுற்றியதற்குச் சமம்’ என உணர்த்திக் கனியைப் பெற்றுக்கொண்டார் கணபதி. தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணிக் கோபமுற்ற முருகப்பெருமான், யார் தடுத்தும் கேட்காமல், கயிலாயம் விட்டுச் சென்று, ஆண்டிக்கோலம் தரித்துப் பழநியில் தண்டபாணியாக நின்றுவிட்டார்.

இது, நாம் அறிந்த புராணம். இதில் தெரியாத கதையையும் தத்துவத்தையும் இப்போது அலசிப் பார்ப்போம்.

##~##
முருகன் ஞானக்கடவுள். உலகைச் சுற்றுவதற்குப் பதிலாக உமா- மகேஸ்வரனைச் சுற்றிவந்தாலே போதுமானது என்ற தத்துவம் அவருக்குத் தெரியாமலா இருந்திருக்கும்? மேலும்... உயர்ந்த தத்துவத்தை உலகுக்கு உணர்த்த அம்மையப்பனையே சுற்றிவந்து கனியைப் பெற்றுக்கொண்ட அண்ணன் கணபதியிடம், ஞானமே வடிவான குமரன் கோபம் கொள்வானா? இப்படிப்பட்ட வரலாற்றை நம் குழந்தை களுக்குச் சொன்னால், கடவுளிடமே கோபமும் தாபமும் இருந்தால் மனிதர் களிடம் இருக்காதா என்று எண்ண மாட்டார்களா? இந்தச் சம்பவத்தை ஆராய்ந்து பார்த்த பெரியவர்கள், அதில் அடங்கியுள்ள தத்துவத்தைத் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

நாரதர் தேவலோக மாங்கனியைச் சிவனாரிடம் கொடுத்து, அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்ததுமே, ஞானக் குழந்தைகளான கணபதி, முருகப்பெருமான் இருவரிடம் இருந்தும் சட்டென்று பதில் வந்தது... 'தாங்கள் ஸர்வேஸ்வரன். இது தங்களுக்கே உரியது’ என்றார்கள் அவர்கள்.

ஆனால் ஈஸ்வரனோ, ''மூத்தவன் நீ. இந்தா, கனி உனக்கு!'' என்று கொடுத்தார்.

''இல்லை. இளையவன் அவன்; அவனுக்குக் கொடுங்கள்'' என்று முருகப் பெருமானைக் கைகாட்டினார் கணபதி. முருகனோ அண்ணனுக்கே அந்தப் பழம் சேர வேண்டும் என்று விரும்பினார்.

இப்படித்தான் பிரச்னை ஆரம்பித்தது. அப்போது ஒரு வேடிக்கையான நாடகம் நடத்த விரும்பினார், நாரதர். ''இது வெறும் பழமல்ல; ஞானப்பழம். தகுதி உடைவர்களுக்கே இது சேர வேண்டும்'' என்றார். ஈசன் சிந்தித்தார். ''உங்களில் உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்தப் பழம். அப்புறம், போட்டியில் வென்றவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இதைக் கொடுக்கட்டும்'' என்று பிரச்னைக்கு மற்றொரு புதிய பரிமாணத்தை உருவாக்கினார்.

உலகைச் சுற்ற வேண்டும் என்றதும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம்வர மயிலேறிப் புறப்பட்டார் முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு அருள்பாலிக்கும் சிவசக்தியைச் சுற்றி வந்தால் போதுமென நினைத்தார். அதனால் அம்மையப்பனை வலம் வந்து, கந்தன் வரும் முன்பே கனியைப் பெற்றார் கணபதி.

கந்தன் வந்தார். அண்ணன் கையில் கனியைக் கண்டார். அது எப்படி அவருக்குக் கிடைத்தது என்பதை தெரிந்துகொண்டார். 'உமா மகேஸ்வரனே உலகங்கள் அனைத்தும்’ என்ற உண்மை தனக்குத் தெரியாமல் போனதை ஒரு கணம் எண்ணினார். அதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அண்ணன் கணபதி பிரணவ வடிவம்; ஞானஸ்வரூபன். அவரிடமே இதற்குக் காரணம் கேட்டார் முருகப்பெருமான்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!  - 28

அனைத்து உலகங்களையும் அம்மையப்பனில் காணும் ஆற்றல் விநாயகருக்கு இருந்தது. தவத்தின் பலனாய் பெற்ற ஞானம்தான் அந்த ஆற்றலுக்குக் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டார் குமரன். அதன் தொடர்ச்சியாக, ப்ரம்மண்யனான தாம், ஸுப்ரமண்யனாக விரும்பினார். அதற்காக அவர் மேற்கொண்ட தவக்கோலமே பழநியாண்டி ரூபம்.

அண்ணனைப் போலத் தானும் தவமியற்றி, ஞானஸ்கந்தனாக விரும்பியதன் விளைவே அந்த ஆண்டி வேடம். சூரனை அழிக்கும் வீர சக்தியுடன் சிவனாரின் நெற்றிக்கண்ணில் உதித்த குமரன், ஞானக்கடவுளாகி, ஞாலத்தைக் காக்க எடுத்துக்கொண்ட பற்றற்ற திருக்கோலமே பழநி ஆண்டிக்கோலம்! 'கனி கிடைக்கவில்லை’ என்ற கோபத்தில் ஆண்டியாகவில்லை கந்தன். உயர்ந்த ஞானம் தன்னுள்ளே உருவாகி, தன்னை வழிபடுவோர்க்கெல்லாம் அதனை வழங்குவதற்காக, விரும்பி ஏற்றுக்கொண்ட வடிவமே அந்தப் பரதேசி வடிவம்.

கந்தனின் தவம் தொடங்கியது. பிரணவம் அவருள் அடங்கியது. ஞானம் அவர் மூச்சாகியது. அழகும் அறிவும் அவருள் ஒளிவீசியது. இப்போது இறைவன் ஈஸ்வரன், தன் திருக்குமரனின் ஞானத் தவத்தின் பயனை அறிய விரும்பினார். தன் மகனை அழைத்தார். ''ஓம்காரப் பிரணவத்தின் உண்மைப் பொருளை உன் தவத்தால் உணர்ந்து கொண்டாயா?' என்று கேட்டார்.

''ஆம் தந்தையே!'' என்றார் ப்ரம்மண்யன்.

''எங்கே கூறு பார்க்கலாம்...'' என்றார் ஈஸ்வரன்.

ஒரு ஆசிரியர் மாணவனைப் பார்த்து 'பத்தும் இரண்டும் எத்தனை?’ என்று கேட்டால், அந்தக் கூட்டல் கணக்கு ஆசிரியருக்குத் தெரியவில்லை என்று அர்த்தமாகாது. மாணவனுக்குத் தெரியுமா என்று சோதித்துப் பார்க்கத்தான் அந்தக் கேள்வி. இப்போது, அந்த ஆசிரியர் நிலையில் நின்றுதான் பரமேஸ்வரன் முருகப்பெருமானிடம் அப்படியரு கேள்வி கேட்டார். கேள்விக்குப் பதில் தெரிந்த மாணவன் போன்றுதான் முருகனும் பதில் கூறினார். ஆனால், பிரணவத்தை எங்கே, எப்படி, எந்த பாவத்தில் சொல்ல வேண்டுமோ, அப்படி ஈஸ்வரன் மடியில் அமர்ந்து, காதில் ஓதினார். தந்தைக்கு குருவாக அல்ல; குருவுக்குச் சீடனாகத்தான்! இது தெரியாமல்... முருகப்பெருமானின் உயர்வைக் குறிப்பதற்காக, 'ஈஸ்வரனுக்கே ஓம்காரப் பொருள் தெரியவில்லை; அதை முருகப்பெருமான்தான் உபதேசித்தார்’ என்று கூறினால், அது சிவ அபராதம் ஆகிவிடும்.

நடந்த சம்பவத்தின் மூலம் தந்தைக்குத் தன் அறிவின் திறத்தை உணர்த்தினார் முருகன். ஈஸ்வரனும், ப்ரம்மண்யனை 'ஸுப்ரமண்யன்’ என்று உணர்ந்துகொண்டார். சுப்ரமண்யன் சிவபெருமானுக்கு ஓம்கார பிரணவத்தை உபதேசித்த திருத்தலம்தான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுவாமிமலை.

அசுரர்களை அழிக்க மட்டுமல்ல; தர்மத்தைக் காக்கவும் தோன்றியவர் முருகன். அநீதியை அழிக்கும் சக்தியை, பிறக்கும்போதே பெற்றவர் அவர். பின்னர், தர்மத்தைக் காக்கும் ஞானத்தைத் தன் தவத்தால் பெற்றார். நமக்கெல்லாம் ஞானத்தை அள்ளி வழங்க, தன்னையே ஆண்டியாக்கிக்கொண்ட தனிப்பெரும் தெய்வம் முருகப்பெருமான்!

- இன்னும் சொல்வேன்