மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2

சேதி சொல்லும் சிற்பங்கள்
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

 சதாசிவலிங்கம்!

##~##

ராஜராஜீச்சரம் எனப்படும் தஞ்சை பெரியகோயிலின் விமானம் 216 அடி உயரம். தரையில் இருந்து கலசம் வரைக்கும் முழுக்க முழுக்கக் கருங்கல் கட்டுமானம். சுமார் 10 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போதே, பெருவுடையார் கோயில் விமானத்தைத் தரிசிக்கலாம்.

எல்லாக் கட்டடங்களையும் போல இதுவும் ஒரு கட்டடம், கோயில் விமானம் என்று நினைத்தால், அது தவறு. ராஜராஜப் பெருவுடையார் அப்படி நினைத்துக் கட்டவில்லை. இது, மகா சதாசிவலிங்கத் தோற்றத்தின் வடிவம். மகுடாகமம் அப்படித்தான் இதைத் தெரிவிக்கிறது. திருவதிகை வீரட்டம், திருவானைக்கா போன்ற தலங்களில் திருச்சுற்று மண்டபங்களில் சதாசிவலிங்கங்கள் (முகலிங்கம்) இருப்பதைப் பார்க்கலாம். அதாவது, பாணத்தின் நான்கு திசைகளிலும் நான்கு முகங்கள் இடம்பெற்றிருக்கும். திண்டிவனம் அருகில் உள்ள திருவக்கரை சிவாலயத்தின் மூலஸ்தானத்தில் முகலிங்கத்தைத் தரிசிக்கலாம்.  

தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என சிவனாரின் ஐந்து வடிவத்தைச் சொல்வார்கள். இவற்றில், முதல் நான்கு வடிவங்களின் திருமுகங்களை, லிங்க பாணத்தில் காணலாம். ஈசான முகத்தை, ஊர்த்துவ முகம் எனக் கற்பனையில் கொள்ளவேண்டும்.

தஞ்சாவூர்ப் பகுதியில் சில சிவாலயங்களில், தாமரை மலரில் அமர்ந்தவராக நான்கு திருமுகங்களும் கொண்டு, சிவனாரின் திருவுருவத்தைக் காணலாம். இதனை 'வாக்ச சிவா’ என அழைப்பார்கள்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2

தஞ்சைக் கோயிலில் கல்வெட்டுச் சாசனம் ஒன்றில், ராஜராஜ சோழ மன்னன் செய்து அளித்த செப்புத் திருமேனி பற்றிய குறிப்பு உள்ளது. சிவனாரின் உருவமான அந்தத் திருமேனியை 'பஞ்சதேக மூர்த்தி’ என்பார்கள். திருமேனியின் உயரம், வடிவம் ஆகியவற்றின் துல்லிய அளவையும் கல்வெட்டில் பொறித்துள்ளான், மன்னன். ஒருவேளை... பிற்காலத்தில் இந்தத் திருமேனி அதாவது திருவிக்கிரகம் கிடைக்கப் பெறாமல் போனால்கூட, அந்த விக்கிரகம் எப்படி இருந்திருக்கும் என்பதை அந்தக் கல்வெட்டின் மூலம் தெளிவுற அறியலாம். இதுகுறித்து இன்னொரு செய்தி... இந்தியாவில் எந்தவொரு சிவாலயத்திலும் பஞ்சதேகமூர்த்தி எனும் பெயரில் செப்புத் திருமேனி இருந்ததாகத் தெரியவில்லை.  

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2

சிவனாரின் ஐந்து தேகங்களையும் இணைத்து, செப்புச் சிலை வடிவில் ஓர் உருவமாகச் செய்து வழிபட்டிருக்கிறான் ராஜராஜ சோழன். அதுமட்டுமா? ஐந்து திருவுருவங்களையும் தனித்தனியே வடித்து, ஸ்ரீவிமானத்தின் கோஷ்டப் பகுதிகளில் வைத்து, விமானத்தையே சதாசிவலிங்கமாகக் காட்டி மகிழ்ந்திருக்கிறான். சிவனாரின் அந்த ஐந்து வடிவங்களை, பெரியகோயில் தவிர, வேறு எந்த ஆலயத்திலும் தரிசிக்க வாய்ப்பே இல்லை.

மூலவர் ஸ்ரீபிரகதீஸ்வரரை வணங்கிவிட்டு, அர்த்த மண்டபம் வழியே தெற்கு வாயிலுக்கு வரும் வழியில், கீழ்ப்புற கோஷ்டத்தில் தத்புருஷ மூர்த்தியும், விமானத்தின் தெற்குப் புற கோஷ்டத் தில் அகோர மூர்த்தியும் நின்று அருள்பாலிப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இல்லையெனில், அடுத்த முறை செல்லும்போது கவனிக்கத் தவறாதீர்கள். மேலிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன் இடது கரத்தில் மாதுளம்பழத்தை ஏந்தியபடி, முன் வலது கரத்தில் அபயம் காட்டி நிற்பார் தத்புருஷர். உடல் முழுவதும் பாம்புகளை ஆபரணம் போலச் சூடிக்கொண்டு, எட்டுத் திருக்கரங்களும், எடுப்பான மீசையும் கொண்டு அகோரமூர்த்தியும், விமானத் தின் மேற்கு கோஷ்டத்தில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் அபய வரதம் காட்டி சத்யோஜாத மூர்த்தியும், கோஷ்டத் தின் வடக்கில், பின்னிரு கரங்களில் மான்- மழு ஏந்தி, முன்னிரு கரங்களில் வாளும் கேடயமும் ஏந்தியபடி வாமதேவ மூர்த்தியும், விமானத்தின் வட கீழ்த் திசையில், அர்த்தமண்டபம் செல்லும் வாசலுக்கு அருகில் கோஷ்டத்தில் வலது கரத்தில் நீண்ட திரிசூலத்தை ஏந்தி, இடது கரத்தை இடுப்பில் வைத்தபடி ஈசான மூர்த்தியும் காட்சி தருகின்றனர். இந்த மூர்த்திகளைத் தரிசித்துவிட்டு, உலகமே போற்றுகிற 216 அடி உயர விமானத்தைக் கூர்ந்து கவனியுங்கள். அப்போது... அது, சதாசிவலிங்க திருவடிவம் என்பது புரியும்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2
சேதி சொல்லும் சிற்பங்கள்! - 2

கிழக்கு ராஜகோபுரமான கேரளாந் தகன் நுழைவாயிலின் மேல் நிலையில் வடதிசையிலும் மேற்குத் திசையிலும் பத்துக் கரங்கள், ஐந்து தலைகளுடன் கூடிய சதாசிவ மூர்த்தியின் சுதை வடிவங்களையும் தரிசிக்கலாம். தவிர, பெரியகோயிலில் சிவனாரின் பல்வேறு வடிவங்களான ஆடவல்லார், பிட்சாடனர், காலகால தேவர், விஷ்ணு அநுக்கிரஹ மூர்த்தி, ஹரிஹரர், லிங்கோத்பவர், சந்திர சேகரர், கங்காதரர், கௌரி பிரசாதர், திரிபுரம் எரித்த தேவர், ஆலமர்ச் செல்வர் ஆகிய மூர்த்தங்களும் உண்டு.

திருமந்திரத்தின் 7-ஆம் தந்திரத்தில், சதாசிவலிங்கத்தின் சிறப்பை எடுத்துரைத்துள்ளார் திருமூலர். திருஞான சம்பந்தர் திருவாஞ்சியப் பதிகத்தில் 'உடல் அஞ்சினர்’ என்றும், திருநாவுக்கரசர் திருவதிகை வீரட்டானத்துப் பதிகத்தில் 'அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகை வீரட்டனீரே’ என்றும் சதாசிவ மூர்த்தியின் பெருமைகளை உரைத்துள்ளனர்.

- புரட்டுவோம்

படங்கள்: கே.குணசீலன்