தொடர்கள்
Published:Updated:

தேவாரத் திருவுலா! - திருச்சேறை

தேவாரத் திருவுலா! - திருச்சேறை


ஸ்தல வழிபாடு
தேவாரத் திருவுலா! - திருச்சேறை
தேவாரத் திருவுலா! - திருச்சேறை
தேவாரத் திருவுலா! - திருச்சேறை
தேவாரத் திருவுலா! - திருச்சேறை
தேவாரத் திருவுலா! - திருச்சேறை

சிவனாரின் திருநாமமும், திருமாலின் திருநாமமும் ஒன்றேபோல் அழைக்கப்படும் திருத்தலங்கள் தமிழகத்தில் ஏராளம். சிவாலயமும் பெருமாள் கோயிலும் அருகருகே அமைந்திருப்பதும் உண்டு.

அப்படி, சைவ- வைணவ ஒற்றுமை தழைக்கும் தலம், தேவாரப் பாடல் பெற்ற தலம், ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திவ்வியதேசம் எனும் சிறப்புக்களுடன் திகழும் திருத்தலம் திருச்சேறை. இங்கு சிவபெருமான் ஸ்ரீசார பரமேஸ்வரர் எனும் திருநாமத்துடனும், திருமால் ஸ்ரீசாரநாதப் பெருமாள் எனும் திருநாமத்துடனும் அருள்கிறார்கள்.

கும்பகோணம்- திருவாரூர் பாதையில், கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். இந்தக் கோயிலுக்கான சமீபகாலச் சிறப்புப் பெயர்- கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயம். கிழக்கு நோக்கிய கோயில். எதிரில் ஞான தீர்த்தம். இது மார்க்கண்டேயரால் அமைக்கப்பட்ட தாலும், பிறவிப் பிணியைப் போக்கும் அமிர்தமாக விளங்குவ தாலும் மார்க்கண்டேய தீர்த்தம், பிந்து சுதா தீர்த்தம் ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு. இந்தத் தீர்த்தத்தின் நீர், ஒரு துளி பட்டாலே சகல பாவங்களையும் போக்கவல்லது!

முகப்பு வாயில், மிகச் சிறிய கோபுர அமைப்புடன் திகழ் கிறது. உள் நுழைந்தால், வெளிப் பிராகாரம். குறிப்பிடும்படி யான சந்நிதிகள் இல்லை. தெற்குப் பிராகாரம் திரும்புகிற இடத்தில், சமீப காலங்களில் கட்டப்பட்ட சிறிய மேடை. தென்மேற்குப் பகுதியில், ஸ்தல விருட்சமான மாவிலங்கை. இது ஓர் அதிசய மரம். ஆண்டில் நான்கு மாதங்கள், வெறும் இலைகள் மட்டும் காணப்படும்; அடுத்த நான்கு மாதங்கள், மரம் முழுவதும் வெண்பூக்களாக இருக்கும்; அடுத்த நான்கு மாதங்கள், பூவோ இலையோ இன்றி வெற்றுமரம் மட்டுமே காணப்படும். ஒற்றைப் பரம்பொருள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகத் தெரிவதுபோன்று, ஒரே மரம் ஒவ்வொரு விதமாகத் தெரிவதால், இந்த மரமே இறைவனுக்குச் சமமாக மதித்து வணங்கப்படுகிறது. மாவிலங்கையைச் சுற்றி வந்து சிவனாரை வழிபட்டால், திருமணத் தடைகள் விலகி, பிள்ளைப்பேறும் கிட்டும்.

வெளிப் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது, ஸ்வாமி- அம்பாள் சந்நிதிகளையும் வலம் வந்துவிடுகிறோம். வலம் சுற்றி, முகப்பு வாயிலின் உள்பக்கம் இருக்கும் கொடிமரத்தை அடைகிறோம். அதன் முன், அழகிய விக்கிரகத் திருவுருவத்தில் ஸ்ரீவிநாயகர். பலிபீடமும் நந்தியும் கடந்து, 2-ஆம் வாயிலுக்குச் செல்வோம், வாருங்கள். இங்கே, மூன்று நிலை கோபுரம்; அழகிய சிற்பங்கள்; சைவ நால்வர் பெருமக்களும் கம்பீரமாக நிற்கிறார்கள். தொடர்ந்து, உள் பிராகாரம். இங்கு வலம் வரும்போது, இது மிகச் சிறந்த பிரார்த்தனை தலம் என்பதை உணர்த்துவதான பெருங்கூட்டம்.

தேவாரத் திருவுலா! - திருச்சேறை

பழங்கால ஆவணங்கள், இந்த சிவாலயத்துக்கு, 'சூரிய பூஜை நடைபெறும் கோயில்' எனும் பெருமையைத் தருகின்றன!

சிவனாரை அவமதித்து தட்சன் நடத்திய யாகத்தில் தானும் கலந்து கொண்ட குற்றத்துக்காகப் பரிகாரம் தேட முயன்றான் சூரியன். பல தலங் களுக்குச் சென்று பூஜித்தான். அவ்வாறு அவன் வழிபட்ட தலங்களில் ஒன்று, ஸ்ரீசாரபரமேஸ்வரர் ஆலயம். சூரிய பூஜைக்கான கோயில்கள், கிழக்குப் பார்த்தவாறு அமைந்திருக்கும். இங்கு, இப்போதும் சூரிய வழிபாடு நடை பெறுகிறது என்பதைக் காட்டும் விதமாக, மாசி மாதம் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில், சூரியக் கதிர்கள் மூலவர் மீது விழுந்து வணங்குகின்றன.

உள் பிராகாரத்தில், தென்கிழக்கு மூலையில் மடப் பள்ளி; தென்மேற்கு மூலையில், ஸ்தல விநாயகர்; மேற்குப் பிராகாரத்தில் மார்க்கண்டேயர் வழிபட்ட ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர். தொடர்ந்து, ஸ்ரீருணவிமோசன லிங்கேஸ்வரர். அப்படியே தொடர்ந்தால் ஸ்ரீமுருகன், ஸ்ரீகஜலட்சுமி, வாயுலிங்கம், ஜேஷ்டாதேவி சந்நிதிகள். வடக்குச் சுற்றில், ஸ்ரீநடராஜ சபை. மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்பினால், ஸ்ரீபைரவர் சந்நிதி. அடுத்ததாக, ஸ்ரீசனீஸ்வரர் மற்றும் சூரியன். 1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்டதான இந்தக் கோயில், குலோத்துங்க சோழனால் மிகப் பெரிய திருப் பணிகளைக் கண்டது.

ஸ்ரீருணவிமோசனரையே கடன் நிவர்த்தீஸ்வரர் என்கின்றனர். ருணம் என்றால் கடன் என்பதாகும். இந்தத் தலத்துக்கு வந்த மார்க்கண்டேயர், தன்னுடைய பிறவிப் பிணி (பிறவியும் கடன்தானே; பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பல்வேறு கடன்களை உடம்பு தாங்குகிறதே) நீங்குவ தற்காக, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். அந்தச் சிவலிங்கமே, ருணவிமோசன சிவலிங்கம் என்பது ஐதீகம். இம்மைக்கும் மறுமைக்கும் கடன் தீர்க்கும் ருணவிமோசனர், லௌகிகக் கடன்களையும் சிக்கல்களையும் இந்தப் பிறவியிலும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. நீங்காத கடன் தொல்லையால் அவதிப்படுபவர் கள் இங்கு வழிபட்டு, நிவர்த்தி பெறுகின்றனர்.

ருணவிமோசனர் சந்நிதிக்கு அருகில், முன்னதாக சந்நிதி கொண்டிருக்கும் அபிராமி உடனாய அமிர்த கடேஸ்வரர், பிறவித் துன்பத்தை நிரந்தரமாகப் போக்கும் அமிர்தமாக திகழ்பவர். வடகிழக்குப் பகுதியில்... எட்டுத் திருக்கரங்களுடனும், நாய் வாகனத்துடனும் அருளும் ஸ்ரீபைரவருக்கு, அஷ்டமி நாட்களில், வடை மாலை சாற்றி நடைபெறும் பைரவ பூஜை வெகு பிரசித்தம். இந்தத் தலத்துக்குப் பதிகங்கள் பாடிய நாவுக்கரசர், பைரவரைக் குறிப்பிட்டே பாடுகிறார்.

விரித்த பல்கதிர்கொள் சூலம் வெடிபடு தமருகம் கை
தரித்ததோர் கோல கால பயிரவனாகி வேழம்
உரித்துமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே

- என்பது திருநாவுக்கரசரின் திருவாக்கு. மன உளைச்சல், பதற்றம் போன்ற சிக்கல்களிலிருந்து விடுபட, இந்தப் பாடலைப் பாடி, பைரவரை வணங்கும் பிரார்த்தனையும் தவறாமல் நடைபெறுகிறது.

மூலவர் சந்நிதிக்குச் செல்ல யத்தனிக் கிறோம். முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய சந்நிதி. மகா மண்டபத்தில், வலதுபக்கம் நால்வர் பெருமக்கள். அர்த்த மண்டப வாயிலில் துவார பாலகர்கள். உள்ளே... ஸ்ரீசெந்நெறியப்பர். ஸ்ரீசாரபரமேஸ்வரர் என்றும் திருநாமம். திருமாலின் சாரப் பெருமாள் கோயிலும் இந்தத் தலத்தில் இருப்பதால், சிவனையும் சாரப்பெருமான் என்று அழைக்கத் தொடங்கி, இவ்வாறான திருநாமம் ஏற்பட்டதாம். பிறவித் துன்பத்தைத் தீர்த்து, நன்னெறியான முக்தியை வழங்குவதால், செந்நெறியப்பர்! மூலவர், வட்ட வடிவ ஆவுடையாருடன், உயரமான பாணத் துடன் திகழ்கிறார். ஆதிகாலத்தில், தௌமிய மகரிஷி இவரை வணங்கி முக்தி அடைந்தாராம்.

மீண்டும் கருவறையைச் சுற்றி வருகிறோம். தெற்குக் கோஷ்ட மாடங்களில்- விநாயகர், நடராஜர், மான்- மழு ஏந்திய சிவன், தட்சிணாமூர்த்தி; மேற்குக் கோஷ்டத்தில்- லிங்கோத்பவர்; வடக்குக் கோஷ்ட மாடங்களில்- ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை, தனி மண்டபத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர்.

தேவாரத் திருவுலா! - திருச்சேறை

உள் பிராகாரத்திலிருந்து, வடக்குச் சுற்றுப் பக்கவாட்டு வாயில் வழியாக, அம்பாள் சந்நிதிக்குச் செல்லலாம். கிழக்கு நோக்கிய இந்தச் சந்நிதியின் அர்த்த மண்டப வாயிலில், விநாயகரும் முருகரும் எழுந்தருளியுள்ளனர். பராசக்தி இங்கு, அருள்மிகு ஞானாம்பிகையாக, ஞானவல்லி எனும் திருநாமத்துடன் அருள்கிறாள். நின்ற திருக்கோலம்; நான்கு திருக்கரங்கள்; பாசம், அங்குசம், அபயம் மற்றும் வரம் தாங்கிய கரங்கள். நான்கு வேதங்களையுமே நான்கு கரங்களாகக் கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம். மாசி மாதம் 13, 14, 15-ஆம் தேதிகளில், இறைவியின் திருவடிகளிலும் சூரியக் கதிர்கள் விழுகின்றன. அம்பாள், ஞானாம்பிகை என்பதால், பூஜைக்குத் தீர்த்தம் எடுக்கப்படும் கோயில் கிணறும் ஞானக் கேணி என்றே அழைக்கப்படுகிறது.

ஸ்வாமி- அம்பாளை வழிபட்டுவிட்டு, வெளிப் பிராகாரத்தில் வந்து நிற்கும்போது, ஊரின் பெயர் உள்ளத்தில் ரீங்காரமிடுகிறது. அதென்ன சேறை?

காவிரியால் வளம் பெறும் இந்தப் பகுதி, வயல்கள் நிறைந்தது. வயல் என்றாலே, கழனியின் சேறு கண்டிப்பாக இருக்கும். எனவே, சேறுகள் நிறைந்த பகுதி, சேற்றூர் எனப்பட்டு, பின்னர் சேறை என்று மருவியது. இதற்கொரு புராணக் கதையும் உண்டு. பிரளய காலத்தில், மண்ணெடுத்து கடம் செய்து, அதில் வேதங்களையும் அடுத்த சிருஷ்டிக்கான பீஜங்களையும் பாதுகாக்க முயன்றாராம் பிரம்மன். எங்கிருந்து மண்ணெடுத்தாலும், கடம் பிடிக்க வராமல், குடம் உடைந்துகொண்டே இருந்தது. திருமாலைப் பிரார்த்திக்க, 'இந்தத் தலத்துக்கு வந்து சேற்று மண் எடுத்தால், கடம் நிற்கும்' என்று வரம் தந்தார் திருமால். அதன்படி பிரம்மன், இங்கிருந்து சேற்று மண்ணெடுத்து, சிருஷ்டிக் கானவற்றைச் சேமித்து வைத்ததால், சேறு தந்த ஊர் சேறையூர் ஆனதாம்!

புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர்படுதுயர் களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினொடா சிலையளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடை உடை அடிகள்தம் வளநகர் சேறையே

- என்று திருஞானசம்பந்தர் போற்றும் திருச்சேறையிலிருந்து அகல மனமில்லாமல் அகல்கிறோம்!

ருணவிமோசனர் வழிபாடு!

தேவாரத் திருவுலா! - திருச்சேறை

மூலவருக்கு நேர் பின்புறம், மேற்குத் திருச்சுற்றில் அமைந்துள்ள ருணவிமோசன லிங்கேஸ்வரர் சந்நிதியில், திங்கட்கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. வசிஷ்ட மகரிஷியால் அருளப்பட்ட தாரித்ர துக்க தஹன சிவ ஸ்தோத்திரம், இங்கு எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரிய துக்க தஹனாய நமச்சிவாய

- எனும் ஸ்தோத்திரத்தை ஓதி, ஸ்ரீருணவிமோசனரை 11 திங்கட்கிழமைகள் தொடர்ந்து பூஜித்துப் பிரார்த்தித்து, 11-வது திங்களன்று அபிஷேக- ஆராதனைகள் செய்தால், கண்டிப்பாகக் கடன் தொல்லைகள் நீங்கும்.

சகல நலன்களும் அருளும் மூன்று துர்கைகள்!
தேவாரத் திருவுலா! - திருச்சேறை

டக்கு கோஷ்டத்தில் மாடத்தில் அருளும் ஸ்ரீதுர்கை சந்நிதிக்கு முன்பாக, மூன்று துர்கையர் வடக்கு நோக்கியபடி எழுந்தருளியுள்ளனர். சிவ துர்கை, விஷ்ணு துர்கை, வைஷ்ணவி துர்க்கை என்று எழுந்தருளியிருக்கும் இந்தத் திருக்காட்சி, வெகு அபூர்வம். ராகு காலங்களில், மூன்று துர்காதேவியரையும் வழிபட்டு, எலுமிச்சை தீபம் ஏற்றுவது, சகல நன்மை களையும் அள்ளி வழங்கும். புத்திர பாக்கியமும் கிட்டும்!

- (இன்னும் வரும்)
படங்கள் ந. வசந்தகுமார்