தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!


ஸ்தல வழிபாடு
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

லகாளும் இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களை தரிசிப்பதிலும், ஊர் மக்களைச் சந்தித்து ஆசிகள் வழங்குவதிலும் அப்படியரு ஆனந்தம், காஞ்சிப் பெரியவருக்கு! குறிப்பாக, காவிரி புரண்டோடும் சோழ தேசத்துக்குச் செல்வதில், காஞ்சி முனிவருக்கு அலாதிப் பிரியம்!

இப்படித்தான், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள அந்தக் கிராமத்துக்கு திக்விஜயம் செய்தார் காஞ்சிப் பெரியவாள். அங்கேயுள்ள சிவாலயம் ஒன்றில், மக்களைச் சந்திப்பதாக ஏற்பாடு. கோயிலில் நுழைந்தவர், கொடிமரம் அருகில் வந்ததும், அப்படியே நின்றார். 'அடடா! என்ன அழகு... என்ன அழகு..!' என அங்கிருந்த நந்தியின் விக்கிரகத் திருமேனியைப் பார்த்து மெய்சிலிர்த்தார். ''ரிஷபத்தோட முகம், முதுகு, வால், கால், நரம்புகள்னு எல்லாமே எத்தனை தத்ரூபமா இருக்கு, பாருங்கோ!'' என்று சொல்லிவிட்டு, அந்த ரிஷபத்தை, நந்திதேவரை மெள்ள வருடிக் கொடுத்தார். 'இந்த ஜில்லாவுல பெரியகோயில் நந்திதான் உசரம்; அதுக்கு இணையா இருக்கற இந்த நந்தி, பெரியகோயில் நந்தியைவிட ரொம்பவே தத்ரூபம்'' எனச் சொல்லிச் சிலாகித்தார்.

நந்தி மட்டுமா பிரமாண்டம்..? அழகு..?! இங்கேயுள்ள ஸ்ரீவிஜயவிடங்கஸ்வரரும் ஸ்ரீபாலவனநாதரும்கூடக் கொள்ளை அழகுதான்! பிறகென்ன... அங்கிருந்த நாளிலெல்லாம் ஆலயத்துக்குச் செல்வதும், நந்தியை வருடிக் கொடுப்பதும், ஈசனைத் தொழுவதுமாகவே பொழுது போனது, பெரியவாளுக்கு!

நுழைந்ததும் காட்சி தரும் நந்தியே இத்தனைத் தத்ரூபமாக உள்ளது எனில், உள்ளே குடிகொண்டிருக்கும் இறைவன் எத்தனை சாந்நித்தியத்துடன் இருப்பான்?! இந்த ஆலயத்தை சோழதேசமும் ஊரும் எப்படியெல்லாம் கொண்டாடியிருக்கும்?! கற்பனை செய்து பார்க்கும் போதே பிரமிப்பாக இருக்கிறது.

ஆலயம் தேடுவோம்!

அந்த ஊர், இளங்காடு. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து, சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஊர். சின்னஞ்சிறிய கிராமத்தின் நடுவில், பிரமாண்டமாக எழுந்தருளியுள்ளது ஸ்ரீவிஜயவிடங்கேஸ்வரர் ஆலயம்.

திருக்கோவிலூரை ஆட்சி செய்து வந்தான் சிற்றரசன் சேதிராயன். இவனுடைய மகனை, தனது தளபதியாக்கிக் கொண்டான் விக்கிரமசோழன். சோழதேசத்துக்கும் கர்நாடக தேசத்துக்கும் போர் நிலவியது (அடக்கடவுளே... அப்போதுமா?!). இதில், சேதிராயனும் அவனுடைய மகனும் இணைந்து, சோழ தேசத்துக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். இதில் மகிழ்ந்த விக்கிரமசோழன், வல்ல நாட்டின் ஆட்சிப் பொறுப்பை சேதிராயனுக்கு வழங்கினான். அதுமட்டுமின்றி, வல்ல தேசத்தின் பகுதியில், அழகிய சிவாலயம் ஒன்றை எழுப்பினான். ராஜராஜ சோழனுக்கு மிகவும் விருப்பமான 'ஸ்ரீவிஜயவிடங்கன்' எனும் திருநாமத்தை இறைவனுக்குச் சூட்டினான். தந்தையின் பட்டப்பெயரான 'ராசகேசரி' எனும் பெயரை, ஊர்ப்பெயராக அறிவித்தான். பிறகு, ராசகிரி என அது மருவிப் போனதாம்!

ஒருமுறை, காவிரியில் பெரிய வெள்ளம் வந்ததில், ஊரே சின்னாபின்னமாகிப் போனது. ஆலயமும் சிதைந்துபோனது. பிறகு, ஊர்மக்கள் அனைவரும் திரண்டு, ஒரு பகுதியை மேடாக்கி, அங்கே மீண்டும் ஆலயம் எழுப்பினராம். அதன்பின், அடுத்தடுத்து அந்நியப் படையெடுப்புகள் நிகழ்ந்தபோதிலும், அந்தக் கோயிலையோ, குடிமக்களையோ யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை.

ஆனால், இப்போது..?

ஆலயம் தேடுவோம்!

கால ஓட்டத்தில், தற்போது கோபுரத்தைக் காணோம்; மதில் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக எண்ணற்ற விரிசல்கள்; மூலவர் மற்றும் அம்பாள் சந்நிதிகளின் விமானத்தின் உச்சியிலும், கோஷ்டச் சுவர்களிலும் பச்சைப் பசேலென முளைத்திருக்கும் செடி-கொடிகளைப் பார்த்தால், ரத்தக் கண்ணீரே வருகிறது. சப்த கன்னியரில் இரண்டு கன்னியர் மட்டுமே காணக் கிடைக்கின்றனர். மற்றபடி, இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய மடப்பள்ளியும் இல்லை; பள்ளியறையும் கிடையாது.

ஆலயம் தேடுவோம்!

ராசகேசரி எனும் ஊர், ராசகிரியாக மருவி, பிறகு இளங்காடாக மாறிவிட்டதல்லவா? அதேபோல் ஆதிகாலத்தில், மூலவரான பிரமாண்ட லிங்கத் திருமேனியர், ஸ்ரீவிஜயவிடங்கேஸ்வரர் எனத் திருநாமம் கொண்டிருந்தார். பிறகு, வெள்ளமோ அந்நியர்களோ... ஊருக்குள் அத்துமீறிப் புகுந்து கலைத்ததில், ஸ்ரீவிஜயவிடங்கேஸ்வரரைக் காணோம்; புதிதாக லிங்கத் திருமேனியைப் பிரதிஷ்டை செய்து, இளங்காடு என்பதால் இறைவனுக்கு ஸ்ரீபாலவனநாதர் என்று திருநாமம் சூட்டப்பட்டதாம்! எது எப்படியோ... இப்போது, இங்கே இரண்டு லிங்கமூர்த்தங்களைத் தரிசிக்கும் பாக்கியம், நமக்கு! ஆனால்... எல்லா பாக்கியங்களையும் தொலைத்துவிட்டுக் களையிழந்து காட்சி தருகிறது ஆலயம்.

கருங்கல் திருப்பணிக் கோயில் இது. இங்கேயுள்ள ஒவ்வொரு கல்லும், 'இரண்டு மூன்று முறை பாலாலயம் செய்தும், கும்பாபிஷேகம் மட்டும் பூர்த்தியாக வில்லையே...' என ஏக்கமும் துக்கமுமாக, மிச்ச சொச்ச பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு, விழாமல் நிற்பதே விந்தைதான். இங்கேயுள்ள அம்பாளின் திருநாமம்- ஸ்ரீபாலாம்பிகை! தாய்க்குத் தாயாக, சேய்க்கு சேயாக காட்சி தந்தருளும் கருணைத் தெய்வம்!

கிழக்கு நோக்கிய ஆலயம். ஸ்வாமியும் அம்பாளும் கிழக்குப் பார்த்தபடி, விடியலுக்காகக் காத்திருக்கும் தலம் இது. திருமணக் கோலத்தில் சந்நிதி கொண்டிருக்கும் ஆலயம் என்பதால், வணங்குவோருக்கு திருமண வரம் கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை. ஏதேனும் ஒரு திங்கட்கிழமை, இங்கே வந்து விஜயவிடங்கேஸ்வரரையும் பாலவனேஸ்வரரையும் பாலாம்பிகையையும் தரிசிக்க... நினைத்தவை யாவும் நடந்தேறும் என்பது நம்பிக்கை.

முக்கியமாக... அழகாகவும் உயிர்ப்பாகவும் நந்திதேவர் காட்சி தரும் அற்புதத் தலம். எனவே, பிரதோஷ நாளில், நந்தியம்பெருமானுக்கு அபிஷேகமும் அர்ச்சனையும் செய்து, நைவேத்தியமும் படைத்து, மனதாரப் பிரார்த்தியுங்கள்; சக்தி வேண்டுவோர்க்குச் சக்தியும், முக்தி வேண்டுவோர்க்கு முக்தியும் கிடைக்கும்; சகல ஐஸ்வரியங்களையும் பெற்று, நிம்மதியாக வாழலாம் என்பது உறுதி!

பெங்களூரு வாசகிக்கு நன்றி!

'திருக்காட்டுப்பள்ளி மற்றும் பழமார்நேரிக்கு அருகில் உள்ள இளங்காடு ஸ்ரீவிஜயவிடங்கேஸ்வரர் தலத்துக்கு, என் சகோதரர் என்னை அழைத்துச் சென்றார். அற்புதமான ஆலயம், சிதிலம் அடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன். சக்தி விகடனில் இந்த ஆலயம் குறித்து வெளிவந்தால், விஜயவிடங்கேஸ்வரர் கோயிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும் வாய்ப்புக் கிட்டும் என நம்புகிறேன். தயவுசெய்து அந்தக் கோயில் பற்றி எழுதுங்களேன்' என்று, வாய்ஸ் ஸ்நாப் மூலம் (044-4289 0021) தகவல் தெரிவித்திருந்தார் பெங்களூரு வாசகி புவனேஸ்வரி. அவருக்குச் சக்தி விகடன் சார்பாகவும், வாசகர்கள், ஆன்மிக அன்பர்கள் சார்பாகவும் நன்றி!

- வி. ராம்ஜி, படங்கள் கே. குணசீலன்