பொங்கிப் பெருகி பாய்ந்து வரும் தாமிரபரணியாளிடம் வழக்கத்தைவிட அதிக ஆர்ப்பரிப்பையும் உற்சாகத்தையும் கண்டான் குபேரன்.
காட்டுப்பூக்களையும் பொதிகையின் மூலிகைகளையும் நீர்ப்பரப்பில் சுமந்தபடி, பெயருக்கேற்ப தாமிர வர்ணத்துடன் பாயும் அந்த நதிமங்கை... அன்றுமட்டும் சூரிய ஒளியில் தங்கமாய் தகதகப்பதுபோல் இருந்தது அவனுக்கு.
அகத்தின் அழகு புறத்திலும்! மகிழ்ச்சியில் லயித்திருக்கும் மனம், இயற்கையை அளவில்லாமல் ரசிக்கும்; அதன் அழகை வியக்கும்! குபேரனுக்குள்ளும் இனம்புரியாத மகிழ்ச்சி; ஒருவித பரவசம்.
'இன்று ஏதோ அற்புதம் நிகழப்போகிறது' என்று உள்மனம் சொல்ல, அந்த அற்புதத்தை எதிர்நோக்கியவனாக, தாமிரபரணியில் கால் நனைத்தபடி, அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.
'ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நதி சிறப்பு பெறும். ஆனால், எல்லா யுகங்களிலும் சிறப்பு பெற்றவள் அல்லவா இவள்; பொருநை என்றும், மணி கர்ப்பணி என்றும் போற்றப்படும் இந்த நதியில் நீராட, உடல் மட்டுமல்ல... உள்ளமும் சுத்தமாகும் என்றல்லவா சொல்லி வைத்திருக்கிறார்கள். புண்ணியம் மிகுந்த இவளிடம் வசிக்கும் மீன்களும் பிற உயிர்களும் கொடுத்துவைத்தவைதான்!'
- தாமிரபரணியின் அழகை மட்டுமல்ல, அதன் மகிமையையும் நினைத்து வியந்துகொண்டிருந்த குபேரன், ஆற்றில் தொலைதூரத்தில் கலயம் ஒன்று மிதந்து வருவதைக் கண்டான். அது அருகில் வரும் வரை ஆவலுடன் காத்திருந்தான். கலயமும் குபேரனை தேடியே அங்கு வந்ததுபோல், வெகு வேகமாக நீரோட்டத்தில் மிதந்து வந்து அவனை நெருங்கியது!
சட்டென்று நீர்ப்பரப்பில் இருந்து கலயத்தைத் தொட்டுத் தூக்கியவன், அதனுள் இருந்த விக்கிரகத்தைக் கண்டு சிலிர்த்தான். உள்ளே... பூமகளாம் ஸ்ரீபூமாதேவியை மடியில் இருத்தி அணைத்தபடி அற்புதமாய் காட்சி தந்தது ஸ்ரீஆதிவராகரின் விக்கிரகத் திருமேனி.
குபேரனின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உள்ளம் குதூகலிக்க விக்கிரகத்துடன் கரையேறியவன், ஆனந்தக் கூத்தாடினான்; நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினான்; கண்ணீர்மல்க ஸ்வாமியை கரம்கூப்பி தொழுதான்; மீண்டும் ஆற்றுக்குள் இறங்கி நீரெடுத்து வந்து அபிஷேகித்தான்; ஓடோடிச் சென்று மலர்களைப் பறித்து வந்து அர்ச்சித்தான்.
அன்று தொடங்கிய குபேரனின் வழிபாடு இன்றும் தொடர்வதாக ஐதீகம்!
உலகிலேயே அதிக கருடசேவைகள் நிகழும் திருத் தலமும், கல்யாணபுரி, திருக்கரந்தை என்றெல்லாம் புராணங்கள் சிறப்பிக்கும் புண்ணியபூமியுமான கல்லிடைக் குறிச்சியில்தான், குபேரன் வழிபட்ட அந்த ஆதிவராகர் கோயில் கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில், அம்பாசமுத்திரம் அருகில் உள்ளது கல்லிடைக்குறிச்சி.
இரண்யாக்ஷனை வதம் செய்து பூமியைக் காப்பாற்றிய ஸ்ரீவராகமூர்த்தி மேலுலகம் கிளம்ப யத்தனித்தபோது, தன்னிடத்திலேயே தங்கி, உலக மக்கள் செழிப்புற அருள் புரிய வேண்டும் என்று பூமாதேவி வேண்டிக் கொண் டாளாம். அதன்படி, ஸ்ரீஆதிவராகர் கோயில் கொண்ட தலம் இது என்கின்றன ஞானநூல்கள். இந்தத் தலம் குறித்து வேறு சில புராணத் தகவல்களும் உண்டு.
இந்தப் பகுதியில் வசித்த விஷ்ணுதர்மன் எனும் மன்னன் ஒருவன் அஸ்வமேத யாகம் செய்தானாம். சிவபெருமான், பிரம்மன் போன்றோரும் இந்திரன், குபேரன் உட்பட தேவாதிதேவர்களும் முனிவர்களும் சங்கமித்திருந்த யாகசாலைக்கு, ஸ்ரீமகாவிஷ்ணு வும் விஜயம் செய்தார். விஷ்ணுதர்மன், சங்கநாதமும் ஜயகோஷமும் முழங்க, அவரை பூக்களால் அர்ச்சித்து வழிபட்டான். யாகமும் இனிதே நிறைவேறியது.
|