தொடர்கள்
Published:Updated:

தேவி தரிசனம்... பாப விமோசனம்

தேவி தரிசனம்... பாப விமோசனம்


தொடர்கள்
தேவி தரிசனம்... பாப விமோசனம்!
தேவி தரிசனம்... பாப விமோசனம்

ந்த ஊர், பாதிரி மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாகத் திகழ்ந்தது. அங்கே, காவிரி சுழித்துக்கொண்டு ஓடும் அழகே அழகு! வனமும் நீர்நிலையும் விளைநிலமும் கொண்ட அந்தப் பகுதியில் வசிக்க அனைவரும் விரும்பினர். அந்த ஊரில் பிரமாண்ட சிவாலயம் ஒன்றும் இருந்தது.

கோயிலுக்குத் தெற்கே, ஒரு குடிசையில் கோயில்கொண்டிருந்தாள், காளியம்மன். ஆனால், அடிக்கடி தீப்பிடித்து குடிசையின் கூரை எரிந்துபோகும். புதிதாக கூரை வேய்ந்தாலும், அதுவும் சில நாட்களில் எரிந்து சாம்பலாகிவிடும்! ஊர் கவலைப்பட்டது. 'எதுனா சாமி குத்தமா இருக்குமோ?' என நடுங்கியது. காஞ்சி சங்கராச்சார்யரிடம் ஆலோசனை கேட்கலாம் என முடிவு செய்தது. அப்போது, கும்பகோணத்தில் உள்ள சங்கரமடத்துக்கு திக்விஜயம் செய்திருந்தார், அன்றைய பீடாதிபதியாக இருந்த காஞ்சி சங்கராச்சார்யர். ஊர்மக்கள் சென்று அவரை வணங்கி, தங்கள் கவலையை விவரித்தனர்.

அதாவது... ஒரு அதிகாலை வேளையில், காவிரி நதியில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்று, பாதிரிவனப் பகுதியின் கரையில் ஒதுங்கியது. துவைக்க வந்தவர்களும், குளிக்க வந்தவர்களும், நீராடித் தவம் செய்ய வந்தவர்களும், ஆடு-மாடுகளைக் குளிப்பாட்ட வந்தவர்களும், பெட்டி ஒதுங்கியதைக் கண்டு ஒன்றுசேர்ந்தனர். அப்போது, கூட்டத்தில் இருந்த சிறுமி ஒருத்திக்குள் புகுந்த அம்மன், 'நான்தான் காளி வந்திருக்கிறேன். என்னை இங்கே வைத்து வழிபடுங்கள்' என்று சொல்லிச் சென்றாள். அதன்படி, சின்னதாக குடிசை அமைத்து, அந்தப் பெட்டியை அங்கே வைத்து வழிபட்டு வந்தனர். ஆனால், யார் கண்பட்டதோ... அடிக்கடி குடிசை எரிவதும் புதுக் குடிசை அமைப்பதும் தொடர்ந்தது என்று காஞ்சி சங்கராச்சார்யரிடம் புலம்பினர்.

அதைக் கேட்டதும், பாதிரிவனத்துக்கு அவர்களுடன் சென்றார் சங்கராச்சார்யர். அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தார். அங்கே... இடுப்புக்கு மேலுள்ள திருவுருவமும், எட்டுக் கரங்களும் கொண்டு காட்சி தந்தாள் காளியம்மன். அவளது திருவுருவத்தைக் கண்டு சிலிர்த்து வணங்கிய சுவாமிகள், ''இவள் உக்கிரத்துடன் இருக்கிறாள். எனவே, பெட்டியுடன் இவளை எடுத்துச் சென்று, ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து வழிபடுங்கள். அவளது உக்கிரமும் தணியும்; உங்கள் ஊரும் செழித்து வளரும்!'' என்றார். அத்துடன், காளிதேவிக்கு ஸ்ரீசுந்தர மகாகாளி என்று திருநாமமும் சூட்டினார். சுமார் 200 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் இது.

தேவி தரிசனம்... பாப விமோசனம்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது கொரநாட்டு கருப்பூர். இங்கேயுள்ள ஸ்ரீஅபிராமியம்மை சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம், புராணப் பெருமைகள் கொண்ட திருத்தலம். பிரம்மா, இங்கே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, கடும் தவம் இருந்து, சிவனருளைப் பெற்றார். அதேபோல், குபேரன் இந்தத் தலத்தில் தவம் இருந்து, செல்வத்துக்கு அதிபதியானார்! அதுமட்டுமா? இந்திரன், இந்தத் தலத்துப் புஷ்கரணியில் நீராடித் தவம் இருந்து, சிவ-பார்வதி தரிசனம் கிடைக்கப் பெற்றான்; பின்னர், தனது ஐராவதம் யானை மீது ஏறி, இந்தத் தலத்தில் இருந்து தேவலோகம் கிளம்பிச் சென்றான் என்கிறது ஸ்தல புராணம். கோயில் தீர்த்தக் குளத்தின் படித்துறையில், இந்திரன் மற்றும் ஐராவதம் யானையின் விக்கிரகத் திருமேனியை இன்றைக்கும் தரிசிக்கலாம். இன்னொரு சிறப்பும் இந்தத் தலத்துக்கு உண்டு. இந்திரன், சிவனாரின் அருளைப் பெற கும்பகோணத்தில் பௌந்தரீக யாகம் நடத்திய போது, யாகக் கலசத்தில் இருந்து அமிர்தத்துக்கு நிகரான ஐந்து திரவத் துளிகள்... திருநாகேஸ்வரம், தாராசுரம், திருவிடைமருதூர், சுவாமிமலை மற்றும் கொரநாட்டுக் கருப்பூர் ஆகிய தலங்களில் விழுந்தனவாம்.

இத்தனைச் சிறப்புகள் கொண்ட ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறாள் ஸ்ரீசுந்தர மகாகாளி! சுந்தரேஸ்வரர் கோயில் என்று கேட்டால், யாருக்கும் தெரியவில்லை; பெட்டிகாளியம்மன் என்றால்தான், சட்டென்று ஆலயத்துக்கு வழிகாட்டுகிறார்கள் பக்தர்கள்.

தேவி தரிசனம்... பாப விமோசனம்
தேவி தரிசனம்... பாப விமோசனம்

செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகுகால வேளையில் பெட்டி திறக்கப்படும். அப்போது ஸ்ரீசுந்தர மகாகாளிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடை பெறும். அப்போது, அம்மனைத் தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் வருகின்றனர். இவளுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள். குங்குமம், எலுமிச்சைப் பழம் மற்றும் பூ என காளி கோயிலில் தரப்படும் வழக்கமான பிரசாதங்கள் எதுவும் இங்கே தரப்படுவதில்லை. விபூதியும் நைவேத்தியமுமே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

அமாவாசை, பௌர்ணமி மற்றும் அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில், மாலை வேளையில், பெட்டிகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இந்த நாட்களில் காளி தேவியை வழிபட... எதிரிகள் தொல்லை அகலும்; மனதில் நிம்மதியும் தைரியமும் பிறக்கும் என்பது ஐதீகம்.

தடைப்பட்ட திருமணம், பிள்ளை பாக்கியம் இல்லாமல் கலங்குவோர் தொடர்ந்து ஐந்து வெள்ளிக்கிழமைகளில் (ராகு கால வேளையில்) இங்கு வந்து, பெட்டிகாளியம்மனுக்கு நெய்தீபமேற்றி வணங்க வேண்டும்; ஆறாவது வெள்ளிக் கிழமையன்று, சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து அம்மனை வணங்கினால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்; வீட்டில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதி என்று பூரிப்புடன் தெரிவிக்கின்றனர் பெண்கள்.

பெட்டிகாளியம்மனை ராகு கால வேளையில் தரிசியுங்கள்; இனி, எல்லா நேரமும் நல்ல நேரம்தான் உங்களுக்கு!

தேவி தரிசனம்... பாப விமோசனம்


நாக கன்னியர் தரிசனம்!

ங்கே, பிராகாரத்தில் அஷ்ட நாக கன்னியருக்குத் தனிச் சந்நிதி உள்ளது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ராகு காலத்தில், பெட்டிகாளியம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபட்டுவிட்டு, நாக கன்னியருக்கு பாலபிஷேகம் செய்து வழிபட... நாக தோஷம் முதலான சகல தோஷங்களும் விலகும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீகுபேர பூஜை!

ஸ்ரீசுந்தரேஸ்வரரை வழிபட்டு, குபேரன் செல்வத்துக்கு அதிபதியாக வரம்பெற்ற தலம் இது! எனவே, தீபாவளித் திருநாளுக்கு மறுநாள் (கேதாரகௌரி நோன்பு), ஸ்ரீசுந்தரேஸ்வரருக்கும் ஸ்ரீஅபிராமியம்மைக்கும் சிறப்பு குபேர பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. இந்த நாளில் சிறப்பு ஹோமம், அபிஷேகம், விசேஷ பூஜை ஆகியவற்றில் கலந்துகொண்டு ஸ்வாமி மற்றும் அம்பாளைத் தரிசித்தால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறலாம்.

- வி. ராம்ஜி, படங்கள் கே. குணசீலன்