தொடர்கள்
Published:Updated:

புனித பூமியில் மனித தெய்வங்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள்


இளைஞர் சக்தி
புனித பூமியில் மனித தெய்வங்கள்! - துளசிதாசர்
புனித பூமியில் மனித தெய்வங்கள்

காமம் துறந்தார்... கடவுளை அடைந்தார்!

புனித பூமியில் மனித தெய்வங்கள்

ணிமுடி துறந்து, மரவுரி தரித்து, மனையாளும் இளவலும் பின்தொடர, வனம் புகுகிறான் ஸ்ரீராமன். படகோட்டி குகனின் அன்பையும் நட்பையும் ஏற்று, அவனது ஓடத்தில் ஏறி, கங்கையைக் கடக்கிறார்கள் அவர்கள்.

ராமனும், சீதையும், இலக்குவனும் கங்கையைப் படகில் கடந்ததை, இப்படிச் சாதாரணமாகத்தான் வர்ணிக்கிறது வால்மீகி ராமாயணம்.

ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், பாமரர்களும் பாடிப் பரவசப்படும்படி, ராம காதையை ஹிந்துஸ்தானியில் இயற்றிய உன்னதமான ராமபக்த கவிஞர் ஒருவர், இதே நிகழ்வை எப்படிச் சித்திரிக்கிறார், பாருங்கள்!

புனித பூமியில் மனித தெய்வங்கள்

தம்பியுடனும் தாரத்துடனும் கானகத்துக்கு வரும் ராமனை உள்ளன்புடன் உபசரிக்கிறான் குகன். அவனது வேண்டுகோளை ஏற்று, கங்கைக் கரையில் இரவைக் கழிக்கும் அவர்கள், காலையில் கங்கையைக் கடப்பதற்காக குகனின் ஓடத்தை நெருங்குகின்றனர்.

அப்போது, ''ஐயா, மன்னியுங்கள். என் படகில் ஏறத் தங்களை அனுமதிக்க இயலாது'' என்று தடுக்கிறான் குகன். அதைக் கேட்டு ஸ்ரீராமன் அதிர்ச்சியுற, குகன் தொடர்ந்து கூறுகிறான்...

''ஓடங்களை நம்பியே பிழைப்பு நடத்தும் ஏழைகளான நாங்கள், உங்கள் பாததூளி பட்டுக் கல்லும் பெண்ணாக மாறிய அற்புதத்தை அறிவோம். பாறைகளையே பெண்ணாக உருமாற்றும் உங்கள் கால் தூசியின் சக்திக்கு முன்னால், எங்களின் மர ஓடங்கள் எந்த மூலைக்கு?! எனவே ஐயனே, புழுதியில் நடந்து தூசு படிந்திருக்கும் தங்களின் திருப்பாதங்களை நீரினால் கழுவிவிடாமல், என் படகில் கால் பதிக்கத் தங்களை அனுமதிக்க இயலாது!''

சாபத்தால் கல்லாகிப்போன அகலிகை, ஸ்ரீராமனின் கால் தூசு பட்ட மாத்திரத்திலேயே விமோசனம் பெற்றதைச் சுட்டிக்காட்டி, அப்பேற்பட்ட பாதங்களைத் தொட்டு நீராட்டி பாத பூஜை செய்யும் பாக்கியத்தைத் தனக்கு அளிக்கவேண்டும் என்பதைத்தான் அப்படி அழகாக வேண்டுகிறான் குகன். அன்பில் நெகிழும் அண்ணலின் பாதங்களை ஆசை தீர நீராட்டி, அந்த நீரைத் தன் தலை மீது தெளித்துத் தன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு மகிழ்கிறான்.

இவ்வாறு வளமான கற்பனையுடன், ஸ்ரீராமனின் மேன்மையை மிக அற்புதமாக வர்ணித்த அந்த பக்த கவிஞர், துளசிதாசர்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராஜாபூர் என்ற இடத்தில், 1532-ஆம் ஆண்டு, சிரவண சுக்ல சப்தமி அன்று, ஆத்மா ராம் தூபே- ஹுலஸி பாய் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் துளசிதாஸர். குழந்தைக்குத் 'துலாராம்' என்று பெயர் சூட்டப்பட்டது. பிறந்த சில நாட்களிலேயே அன்னையை இழந்தான் துலாராம். ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்ட தந்தையோ, மகன் ராசியில்லாதவன் எனத் தீர்மானித்து, இளம் வயதிலேயே அவனை விட்டுப் பிரிந்து சென்றார்.

வயதான பாட்டியிடம் வறுமையையும், துயரத்தையுமே நட்பாகக் கொண்டு வளர்ந்தான் துலாராம். அந்தப் பாட்டியும் விரைவிலேயே காலமாகிவிட, ஊரிலிருந்த ஆஞ்சநேயர் ஆலயத்தையே இருப்பிடமாகக் கொண்டு, மக்கள் அளித்த பிரசாதங்களை உண்டு பிழைத்தான்.

ஆனால், இப்படியரு சாதாரண வாழ்க்கைக்காக இறைவன் அவனைப் படைக்கவில்லை!

நரஹரிதாஸ் என்பவர் சிறந்த பண்டிதர். புராணக் கதைகளை, காவியச் சுவையுடன் பாடல்களும் கலந்து சொல்வதில் வல்லவர். ஒருமுறை ராஜாபூருக்கு வந்தவர், ஆஞ்சநேயர் ஆலயத்தில் தங்கியிருந்து, ராமாயண உபந்யாசம் செய்யத் தொடங்கினார். அவர் மூலம், ராம கதையைக் கேட்கும் பாக்கியம் பெற்ற துலாராமின் உள்ளத்தில் பக்தி பெருக்கெடுத்தது. திறந்த வாய் மூடாமல் ராம கதையைக் கேட்டவன், அது தொடர்பான பக்திப் பாடல்களை இனிய குரலில் பாடி ஆனந்தத்தில் திளைத்தான்.

அவனைக் கண்டு வியந்து, அவன் மேல் பெரும் அன்பு கொண்ட நரஹரிதாஸ், அவனைத் தன் சீடனாக ஏற்றார். அவருடனேயே இருந்து வேதங்களையும் புராணங்களையும் கற்றான் துலாராம்.

சீடனின் வளர்ச்சி கண்டு மகிழ்ந்த ஆசான், அழகிலும் குணத்திலும் சிறந்த ரத்னா வளி என்ற மங்கையை அவனுக்கு மணமுடித்து வைத்தார். நல்ல முறையில் இல்லறம் நடத்தும்படி ஆசி கூறிச் சென்றார்.

புனித பூமியில் மனித தெய்வங்கள்

இளமை, நல்ல கல்வி, உபந்யாசங்கள் செய்வதன் மூலம் நிலையான வருமானம், பேரழகியான மனைவி... என சுகமான வாழ்க்கையால் தடம் மாறினான் துலாராம். படாடோபமான வாழ்க்கை மற்றும் மனைவியின் மேல் கொண்ட மோகத்தால் கடவுளை மறந்தான்.

ஒருநாள், பணிகள் முடிந்து வீடு திரும்பிய துலாராமைப் பூட்டிய கதவுகளே வரவேற்றன. அவனுடைய மனைவி தாய் வீட்டுக்குச் சென்றிருப்பதாக, அண்டை வீட்டார் தகவல் சொன்னார்கள்.

மனைவி இல்லாத அந்த இரவு நரகமாகத் தோன்றியது துலாராமுக்கு. உடனடியாக மனைவியைப் பார்க்க அவளின் தாய்வீட்டுக்குப் புறப்பட்டான்.

நள்ளிரவு. புயல், இடி, மின்னலுடன் பெருமழை பொழிந்தது. ஆனால், காம வயப்பட்டிருந்த துலாராமுக்கு அவை எதுவும் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இருட்டில் தட்டுத் தடுமாறியபடி ஓடினான்.

வழியில் கங்கையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. சற்றும் தயங்காத துலாராம் ஆற்றில் குதித்து நீந்தத் துவங்கினான். பெருக்கெடுத்து வரும் நீர் தன்னை அடித்துக்கொண்டு போகாமல் இருக்க, மிதந்து வந்த கட்டை ஒன்றைப் பற்றினான். ஆனால், அது கட்டையல்ல, சடலம் என்பதைத் தாமதமாக உணர்ந்தான். எனினும், அதைப் பிடித்துக்கொண்டு நீந்தி, எதிர்க் கரையை அடைந்தான். ஓட்டமும், நடையுமாக மனைவியின் வீட்டை அடைந்தான். அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தவிர, இடி முழக்கம் மற்றும் மழைச் சத்தத்தில் துலாராம் அழைத்ததோ, அவன் கதவைத் தட்டும் சத்தமோ அவர்களின் காதில் விழவே இல்லை!

புனித பூமியில் மனித தெய்வங்கள்

வேறு வழி தெரியாத துலாராம், அருகில் இருந்த மரக் கிளையில் தொங்கும் கயிறு ஒன்றைப் பற்றிக் கொண்டு மேலே ஏறினான். ஆனால், அது கயிறல்ல; கருநாகம் என்பதை உணர்ந்தான். எனினும், பிடியைத் தளரவிடாமல் மேலே ஏறி, சுவரைக் கடந்து வீட்டுக்குள் குதித்தான். சத்தம் கேட்டு ரத்னாவளி விழித்துக்கொண்டாள். இந்தப் புயல் மழையில் எந்தத் திருடன் வந்து விட்டான் என்று பார்ப் பதற்காக எழுந்து வந்தவள், மழையில் நனைந்தபடி துவண்டுபோய் நிற்கும் கணவனைக் கண்டு திடுக்கிட்டாள்.

ஓர் இரவுப்பொழுதுகூட தன் பிரிவைத் தாங்க முடியாமல்... பெரும் புயல்- மழையையும் பொருட்படுத்தாது, பிணத்தைப் பிடித்து நீந்தியும், கருநாகத்தைக் கயிறாகப் பற்றிக்கொண்டு சுவரேறிக் குதித்தும் தன்னைத் தேடி வந்த கணவனின் காதலை நினைத்து ஒரு கணம் சிலிர்த்தாள். ஆனால், அடுத்த கணமே கோபம் பீறிட்டது!

''என்ன மனிதர் நீங்கள்? அழியப்போகும் இந்த உடலின் மீது கொண்ட ஆசையில் ஒரு துளியாவது, அழிவே இல்லாத இறைவன் மீது வைத்திருந்தால் உமக்கு முக்தியே கிடைத்திருக்குமே!'' என்று கத்தினாள்.

பேரிடியாய் விழுந்த மனைவியின் வார்த்தைகள், துலாராமின் கண்களைத் திறந்தன. மாயையின் வசத்தால், சிற்றின்பத்துக்கு ஆசைப்பட்டு வழிதவறிப் போனதை உணர்ந்து தெளிந்தார். 'மூலாதாரமான ஸ்ரீராமனின் பாதங்களைத் தவிர, வேண்டுவது யாதுமில்லை' என அனைத்தையும் துறந்து, அவன் நாமங்களிலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்டார். ராமனைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார். ஸ்ரீராமனின் திருநாமத்தை அழகிய பல கவிதைகளில் அமைத்துப் பாடிப் பரவசமடைந்தபடி, சித்திரகூடம், அயோத்தி, காசி என ஊர் ஊராகச் சென்றார்.

இவ்வாறு துலாராமிலிருந்து கோஸ்வாமி துளசி தாசராக பரிமளித்தவர், 'ராமனே பரப்பிரும்மம். அவன் திருவடிகளை அடைவதே, உலகத்தார் கடைத்தேற ஒரே வழி!' என உபதேசிக்கத் தொடங்கினார். அனுமனின் அருளால், ராமனின் ஸ்ரீதிவ்விய தரிசனத்தைக் கண்டு சிலிர்த்தார்; ஸ்ரீராமனின் சரித்திரத்தை, மக்கள் பேசிப் பழகும் ஹிந்துஸ்தானி மொழியில் 'ராமசரித மானஸ்' எனும் காவியமாகப் படைத்தார்.

மனிதனாகப் பிறந்து, தனது நடத்தையாலும் குணநலன் களாலும் தெய்வீகத்தை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்திய புருஷோத்தமனாக ஸ்ரீராமனை அவர் சித்திரித்தது, சாமானிய மக்களையும் சிலிர்க்க வைத்தது. கவிதைச் சுவை நிரம்பிய அந்தக் காவியம், நூற்றாண்டுகள் பல கடந்தும் இந்திய மக்களின் இதய சிம்மாசனத்தில் இன்றும் கொலுவீற்றிருக்கிறது!

வினய பத்ரிகா, கவிதாவளி, கீதாவளி, கிருஷ்ணா வளி போன்ற பல அற்புதமான நூல்களையும் படைத்த கோஸ்வாமி துளசிதாசரின் வழியில், ஆயிரக்கணக்கானோர் ராம பக்தி என்ற ஆனந்த சாகரத்தில் மூழ்கித் திளைத்தனர்.

பக்தியையும், கவிதையையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த கோஸ்வாமி துளசிதாஸர் 1623-ஆம் ஆண்டு, காசியில் ஸ்ரீராமனின் திருவடியை அடைந்தார். ஸ்ரீராமனின் நாமம் உச்சரிக்கப்படும் இடமெல்லாம், துளசிதாஸரின் பெயரும் பக்தியுடன் நினைக்கப்படும்!

- (தரிசிப்போம்)