தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி


தொடர்கள்
அண்ணாமலையே சரணம்
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

லகத்தின் சுகங்களை உதற மிகப்பெரிய அலுப்பு வேண்டும். உண்பது உறங்குவது தவிர வேறெதுவும் தெரியாத பிள்ளைக்கு என்ன அலுப்பு வரும்? இது வேறு ரசாயனம். உலகம் என்பதைக் கடவுள் என்று கொண்ட பிறகு, வேறு எதன் மீது நாட்டம் வரும்? மனிதர்கள் அத்தனை பேருக்கும் இந்தப் பொறி சில கணங்கள் தோன்றும். வேங்கடராமன் இந்தப் பொறியில் புகுந்து, தன்னை இழந்தான். இது விதி; பெரும்பேறு!

கோயில் மண்டபம் தாண்டி, தேரடி தாண்டி, சந்நிதி தெரு வழியாக நடக்கும்போது எதுவும் மனதில் பதியவில்லை. சந்நிதி தெரு முடியுமிடத்தில், ஒரு பெரிய குளம் இருந்தது. அதற்கு ஐயன் குளம் என்று பெயர். ஐயன் குளத்துக்கு அருகே, அருணகிரிநாதர் கோயில் இருந்தது. அங்குள்ள சிவனுக்கு அருணகிரிநாதர் என்று பெயர். பழைமையான கோயில்; சற்று பள்ளமான இடத்தில் இருந்தது. கோயிலை எட்டிப் பார்த்து வணங்கிவிட்டு குளக்கரையில் இறங்கினான். கையில் பட்சணப் பொட்டலம் இருந்தது. பையில் காசுகள் இருந்தன. எல்லாம் அண்ணாமலையாருக்கு என்று முடிவாகிவிட்ட பிறகு, பட்சணம் எதற்கு? 'அவன் பார்த்துக் கொள்வான்' என்ற பிறகு காசு எதற்கு? கையிலிருந்த பட்சணப் பொட்டலத்தைக் குளத்தில் வீசியெறிந்தான். குளத்து மீன்கள் பட்சணத்தைப் பாய்ந்து குதறி, வேகமாக உண்டன. காசுகளை வீசியெறிந்தான். நாணயங்கள் நீரைத் தொட்டு சேற்றுக்கடியில் போய்ச் சொருகின.

குளக்கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தபோது யாரோ ஒருவர் வந்து, 'மொட்டையடிக்க வேண்டுமா?' என்று கேட்டார். வெளியூர்வாசி என்று முகத்தில் எழுதி ஒட்டியிருந்தது. உள்ளூர்வாசிக்கு இந்த நேரத்தில் குளக்கரையில் என்ன வேலை? பெரிய குளத்தின் வடப் பக்கத்தில் அக்ரஹாரத்துப் பெண்மணிகள் துணி துவைத்துக்கொண்டு இருந்தார்கள். மேற்குப் பக்கத்தில் இவன் மட்டுமே நின்றிருந்தான்.

மொட்டையடிக்க வேண்டுமா என்று கேட்டபோது, எந்தவித யோசனையும் இல்லாமல் சரியென்று தலையசைத்தான். அந்த ஆள் வேங்கடராமனை ஒரு நாவிதனிடம் அழைத்துப் போக, நீண்ட கருத்த குடுமி களையப்பட்டது. சரி, மழித்ததற்குக் காசு? 'இந்த நீண்ட தலைமுடிதான் காசு. இதில் சவுரி செய்தால் நிறையச் சம்பாதிக்கலாம்.' அந்த ஆசாமி முடியைச் சுருட்டித் துணியை மடித்துக் கொண்டு நகர்ந்தார். மொட்டைத் தலையோடு நின்றான் வேங்கடராமன். இனி என்ன செய்வது? சட்டையைக் கழற்றிக் குளக்கரையில் வீசினான். வேட்டியை அவிழ்த்துக் கிழித்துக் கோமணமாக்கினான். இடுப்பில் கட்டிக் கொண்டான். கோயிலுக்குப் போகலாம் என்று தீர்மானித்து நடந்தான்.

தலைமுடி மழித்துக்கொண்டு குளிக்காமல் போகலாமா? ஆனால், குளிக்க வேண்டுமென்று வேங்கடராமனுக்குத் தோன்றவில்லை. குளிக்காமல் குளக்கரையில் இருந்து கோயிலை நோக்கி நடந்தபோது, அருணாசலேஸ்வரர் மழையாகப் பொழிந்து, அவனைக் குளிப்பாட்டினார்.

வெகு நாளாக மழை காணாத திருவண்ணாமலை மண், மழையை ஆவலாக உறிஞ்சியது. ஒரு ஞானியின் பாதம் பட்டதும் தனக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தை நினைத்து ஆனந்தப்பட்டது. மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி கோயில் பக்கம் வந்தான் வேங்கடராமன். அங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண் டான். பசித்தது. ஆனால், யாரிடமும் சோறு கேட்க ஆசைப்படவில்லை. மௌனமாய்க் கண் மூடி, தனக்குள் தான் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான்.

ஸ்ரீரமண மகரிஷி

பசி இருந்தது. ஆனால், தொந்தரவு செய்ய வில்லை. பசியை உணர முடிந்தது. ஆனால், சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. தின்பது என் உடம்பின் வேலை. அதற்கு உணவிடுவது அருணாசலேஸ்வரரின் வேலை. அவன் உள்ளுக்குள் மௌனமாக இருந்தான்.இரவு முழுவதும் சாப்பிடாமல், அங்கேயே உட்கார்ந்திருந்தான். கோயிலின் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து பராமரிக்கிற மௌன சுவாமிகள் என்கிற அன்பர், அந்தச் சிறுவன் அசையாது உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். பசியில் முகம் வாடியிருப்பது அந்த சாதுவுக்குத் தெரிந்தது.

பழனி சுவாமி என்கிற இன்னொரு சாதுவை நோக்கி, 'அந்தப் பிள்ளை வெகுநேரம் அசையாமல் உட்கார்ந்திருக்கிறான். பசியால் வாடியிருக்கிறான். அவனுக்குச் சிறிது உணவு கொடு' என்று மௌன பாஷையில் உத்தரவிட்டார். கோயில் நந்த வனத்தைப் பராமரிக்கிறவர் பழனி சுவாமி.

ஒரு தகர டப்பாவில் பழைய சோறும், அதன் மீது உப்பும் தூவி, மேலே ஊறுகாய் வைத்துக் கொடுத்தார் பழனி சுவாமி. எதிரே உணவு வைக்கப்பட்டதும், வேங்கடராமன் அதை எடுத்து உண்டான். பசி அடங்கியது. அருணாசலேஸ்வரர் தன் குழந்தைக்குக் கொடுத்த முதல் உணவு; தன் சீடனுக்கிட்ட முதல் பிசைவு; கையேந்தாமல் கிடைத்த பிரசாதம்.

''தோ பார்டா..! ஒரு மொட்டை, அசையாம சிலை மாதிரி உட்கார்ந்திருக்கு!'' - ஒரு பையன் சுட்டிக் காட்டினான்.

''ஆட மாட்டானா? ஒரு கல்லு விட்டா, தானா ஆடுவான். இப்ப பாரு, ஆட வைக்கிறேன்!'' - இன்னொரு பையன் சவால் விட்டான். விதியின் கோரப்பிடியில் மாட்டிக்கொண்டிருந்த பிள்ளை, பாவம் செய்யத் தூண்டப்பட்டான். கல் எகிறி, சடேரென்று பக்கத்துத் தூணைத் தாண்டி, தலையை உரசிப் போயிற்று.

''அசையலையே!''

ஸ்ரீரமண மகரிஷி

இன்னொரு கல் விட்டான். அந்தக் கல்லும் மேலே படாமல் போயிற்று. இன்னும் இரண்டு பையன்கள் முயற்சி செய்தார்கள். குடிப்பவரைப் பார்த்துக் குடிப்பதும், கோபப் படுபவரைப் பார்த்துக் கோபப்படுவதும், பாவம் செய்பவனைப் பார்த்துப் பாவம் செய்வதும் இந்த உலகத்தின் இயற்கை. விதிவசத்தால் அந்தப் பையன்கள் தொடர்ந்து கல் எறிந்தார்கள். பின்பு, யாரோ துரத்த, சிதறி ஓடினார்கள்.

'இந்த இடம் சரியில்லையே!'- பாலசுவாமி மெள்ள எழுந்தார். அவருக்குள் எந்த வருத்தமுமில்லை. யார் முகமும் பதியவில்லை. மீண்டும் கல் வீசி அவர்கள் பாவம் செய்யாமல் இருக்கவேண்டுமே என்ற எண்ணத்தினாலோ என்னவோ, நகர்ந்து வேறொரு இடத்துக்குப் போனார்.

அது பாழடைந்த மண்டபம். மண்டபத் தின் கீழே, பாதாளத்தில் சிவலிங்கம் இருந்தது. பாதாள லிங்கேஸ்வரர் என்று அதற்குக் காரணப்பெயரிட்டிருந்தார்கள். யாரோ ஒருவரின் சமாதியின்மீது வைக்கப் பட்ட லிங்கம் அது. ஓர் இனத்தாருக்குச் சொந்தமான இடத்தை அரசர் வாங்கி இடித்துக் கல்மண்டபமாகக் கட்டியிருந்தார். சிவலிங்கத்தை அகற்றாமல் இருந்தார். அதைச் சுற்றிக் கல் மண்டபம் கட்டியதால், சிவலிங்கம் பாதாளத்துக்குப் போயிற்று. மண்டபம், சிவலிங்கத்தைவிட உயரத்தில் இருந்தது. ஆனால், அது கல்லெறிவதற்கு வசதியாக இருந்தது.

தூணுக்குப் பின்னே நின்று, மறுநாளும் அதற்கு அடுத்த நாளும்கூட அந்தப் பிள்ளைகள் கல் எறிந்தார்கள். இரண்டு, மூன்று கற்கள் மேலே பட்டன. பாலசுவாமி அசையாமல் இருந்தார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்று சிறிதும் அறியாதிருந்தார். தான் உட்கார்ந்திருந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதும் தெரியாதிருந்தார். உட்கார்ந்த இடம் ஈரப்பதமாக இருந்தது. ஈரமான இடத்தில் விஷ ஜந்துக்கள் அலைந்தன. தொடையைப் பூரான்கள் அரித்தன. எறும்புகள் கடித்தன. அட்டைகள் தொற்றிக் கொண்டு, ஒட்டி உறிஞ்சின.

தேகம் என்பது பற்றிய சிந்தனை இல்லாமல், மனம் உள்ளுக்குள் போய், உள்ளே என்ன இருக்கிறதோ அதை இறுகிப் பற்றிக்கொண்டிருந்ததால், வெளியே நடப்பது முற்றிலும் தெரியாமல் போயிற்று.

''நாம கல்லடிச்சும் இந்த மொட்டை வெளியே வரலை. அசையாம உள்ளேயே இருக்கான், பாரேன்!''

ஸ்ரீரமண மகரிஷி

கண்களைச் சுருக்கிக்கொண்டு பையன்கள் இருட்டுக்குள் உற்றுப் பார்த்தார்கள். ஆள் இருப்பதைக் கண்டு கொண்டார்கள். இந்த முறை எப்படியேனும் மேலே படும்படி அடித்து, இம்மியேனும் அசைத்து விடவேண்டுமென்ற ஆவேசத் தோடு, கற்கள் பொறுக்கி வீச ஆரம்பித்தார்கள். இப்படி அவர்கள் கல் வீசுவது பாலசுவாமியை நோக்கி மட்டுமல்ல; இதற்கு முன் பல பேரை நோக்கி எறிந்திருக்கிறார்கள். திருவண்ணா மலையில் வானம் பார்த்துச் சிரித்துக்கொண்டும், இடுப்பில் கை வைத்தபடி நடந்தவாறு தனக்குத்தானே பேசிக்கொண்டும் இருக்கின்ற சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்தாலும் கல் விட்டு எறிவார்கள்.

'பைத்தியம்தான் தனக்குத்தானே பேசும்; பைத்தியம் தான் வானம் பார்த்துப் பேசும்' என்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது. தன்னுள் கவனித்துப் பேசுவது என்பது, தனக்குத் தானே பேசுவது போல் தோன்றும் என அவர்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. சொல்லித் தரக்கூடிய வலிமை அவர்களைச் சார்ந்தோருக்கு இல்லை. எனவே, சாதுக்கள் மீது கல் எறிவது அவர்களுக்கு ஆனந்த விளையாட்டாக இருந்தது. அப்படி அடிபட்டு அவஸ்தைப்பட்ட சேஷாத்ரி சுவாமிகள், இப்போது யார் அடி வாங்குவது என்று தவித்து, வேகமாக மண்டபத்துக்குப் பாய்ந்தோடினார். பையன்களை அதட்டி விரட்டினார்.

'உள்ளே யார்?' என்று குரல் கொடுத்தார். ஆள் இருப்பது தெரிந்தது. அசைவில்லை.

மௌன சுவாமியையும், பழனி சுவாமியையும் குரல் கொடுத்து அழைத்தார். இருவரும் வந்தனர். உள்ளே போய், மெள்ள பால சுவாமியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்கள். மண்டபத்தில் உட்கார வைத்தார்கள். பின் பக்கம் முழுவதும் எறும்பால் அரிக்கப்பட்டிருந்தது. பூச்சியால் கடிக்கப்பட்டிருந்தது. ரணம் அதிகமாகி, சீழ் கோத்துக் குதறிக் கொண்டிருந்தது.

'இது எவ்வளவு வலி கொடுக்கும்! இந்த வலியைப் பொறுத்துக்கொண்டு தன்னை மறந்து இருக்க முடியுமா! இத்தனை கல் வீச்சை தாங்கிக்கொண்டு இருக்கமுடியுமா! என்ன மாதிரி சுவாமி இது! என்ன தபஸ் இது! எப்படி கிடைத்தது!'

ஆச்சரியப்பட்டார்கள். எழுப்பி நிற்க வைத்து, மருந்து போட்டார்கள். மெள்ளக் கைத்தாங்கலாய் அழைத்துக் கொண்டு வந்து, நந்தவனத்தில் உட்கார வைத்தார்கள். சோறு கொடுத்தார்கள்.

'இந்தத் தவத்தைக் கலைக்க வேண்டாம். இருக்கட்டும்' என்று சேஷாத்ரி சுவாமிகள் சொல்ல, வேளாவேளைக்கு உணவு மட்டும் கொடுத்துக் கவனித்து வந்தார்கள். ஆனால் அங்கும் தொந்தரவு தொடர்ந்தது.

'அங்கே தப்பிச்சுட்டே! இங்கே இருக்க விடுவோமா!' இன்னொரு போக்கிரிக் கும்பல் சேர்ந்துகொண்டது. பிறரைக் கொடுமை செய்து பழகி, அதில் இன்பம் கண்டுவிட்டால், பிறகு விடுவது கடினம். எந்த நேரமும் மனம் கொடுமையைப் பற்றியே நிற்கும். இது பூர்வஜென்ம கர்மா. போன ஜென்ம சாபம். ஒற்றைச் சாபம் நூறாய் பெருகி, அட்டகாசம் செய்வதற்குண்டான தூண்டுதல்.

உயரமான அரளிச்செடிகள் கூடிய அந்த நந்தவனத்தில் ஏதேனும் ஒரு மரத்தடியில் கண் மூடி பால சுவாமிகள் இருப்பார். பிறகு, விழித்துப் பார்க்கும்போது, வேறொரு மரத்தடியில் கிடப்பதை உணர்வார்.

எப்படிப் போனோம், எது நடந்தது, எது நகர்ந்தது, எப்படி நகர்ந்தோம் என்று தெரியாமல், மறுபடி கண் மூடி அமர்வார். எத்தனை தொந்தரவுகள் வந்தபோதும், எத்தனை வேதனைகள் வந்தபோதும் தவம் கலையவில்லை; மனம் ஒருமையிலிருந்து நீங்கவில்லை; வைராக்கியம் குறையவில்லை.

இல்லை... அது தவம்கூட இல்லை. தவம் குறிக்கோள் உடையது. எந்த இலக்கும் இல்லாமல் தன்னையே அவதானித்து, தனக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கின்ற மிகப் பெரிய பேரானந்தத்தை, அந்த பாலசுவாமி இடையறாது அனுபவித்துக் கொண்டிருந்தார். அண்ணாமலையார், அவருக்கு இன்னும் நிம்மதியான ஓர் இடம் தரவேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்குண்டான மனிதர் கள் நகர்ந்து, பால சுவாமியை நோக்கி வரத் துவங்கினார்கள்.

கடவுளிடம் தன்னை ஒப்படைத்தவருக்கு எந்தக் கவலையும் இல்லை. கடவுள் அவரை மிக நிச்சயம் காப்பாற்றுவார். எப்படிக் காப்பாற்றுவார்? அது கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

- தரிசிப்போம்...