தொடர்கள்
Published:Updated:

பேசும் அரங்கன்!

பேசும் அரங்கன்!


தொடர்கள்
பேசும் அரங்கன்!
பேசும் அரங்கன்!
பேசும் அரங்கன்!
பேசும் அரங்கன்!

டையவர், திருநாராயணபுரத்தில் இருந்தபோது, ஸ்ரீரங்கத்தில் அவருடைய சீடர்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது. கூரத்தாழ்வான், தம் மனைவி மகன்களுடன் திருமாலிருஞ்சோலைக்குச் சென்றார். 90-வது வயதிலிருந்து, பார்வையை இழந்த நிலையில், அழகருக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார் அவர்.

திருக்கண்ணபுரம் ஆலயத்தின் மதில்கள் இடிக்கப்பட்டன. திருச்சித்திரக்கூடம் அழிக்கப்பட்டது. மூல விக்கிரகத்தைப் பெயர்த்து எடுத்துக் கடலில் போட்டனர். அங்கிருந்த உத்ஸவ விக்கிரகத்தை, பாகவத உத்தமர்கள் சிலர் எடுத்துச் சென்று, திருப்பதியில் எழுந்தருளச் செய்தனர்.

திருக்கோட்டியூர் நம்பிகள், திருமலையாண்டான், திருவரங்கப் பெருமாளரையர், பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள் போன்றவர்கள் பரமபதம் அடைந்தனர்.

வைணவர்களை இம்சித்து வந்த சோழ மன்னன், கழுத்து முழுவதும் புழுபுழுத்துப் புண்ணாகி (துர்முகி வருடம் கி.பி.1116) மாண்டுபோனான். இவனுடைய மகன் விக்கிரமச் சோழன், தந்தையின் செயலை எண்ணி வருந்தினான்; ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க, உடையவருக்கு அழைப்பு விடுத்தான். 12 வருடங்களாக, செல்வப்பிள்ளையைத் தன் செல்லப்பிள்ளையாகக் கருதி, திருநாராயணபுரத்தைக் கோலாகலமாக்கிய ராமானுஜர், திருவரங்கத்துக்குச் செல்லச் சம்மதித்தார். அதைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் துடித்தனர். பிறகு, தனது விக்கிரகம் ஒன்றை வார்ப்பித்து, அதில் தனது சக்தியினைச் செலுத்தி, பிரதிஷ்டை செய்து, அதற்கு 'தமர் உகந்த திருமேனி' எனத் திருநாமமிட்டு, அனைவரையும் ஆசீர்வதித்தார். அப்போது அவருக்கு வயது 101.

பேசும் அரங்கன்!

சுமார் 21 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீரங்கம் வந்த உடையவருக்கு, அமர்க்களமான வரவேற்பு! கூரத்தாழ்வான் முதலான சீடர்கள், மீண்டும் திருவரங்கத்தை அடைந்தனர். அனைவரையும் ஆசீர்வதித்து, அழகிய மணவாளன் திருமண்டபம் சென்று தண்டனிட்டவர், பெரியபெருமாளைத் தொழுதார்; நம்பெருமாளின் திருவடியை வணங்கினார். அப்போது நம்பெருமாள், 'நெடுநாள் தேசாந்திரம் சென்று, வெகுவாக மெலிந்தீரே?' என்று கேட்டார். உடனே உடையவர், 'இவ்வளவு துன்பங்களை எனக்கு ஏன் தந்தாய் அரங்கா?' என்று கேட்கவில்லை. 'ஆதிநாயகனான நீயிருக்க, துன்பமேது எனக்கு?!' என்றார். நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் பொங்க, அரங்கனைத் தொழுதபடி, கூரத்தாழ்வானை சந்தித்தார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து உடையவரை நமஸ்கரித்தார் கூரத்தாழ்வான். அவரை வாரி அணைத்துக் கொண்டு, சின்னக்குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழுதார் ராமானுஜர்.

திருச்சித்திரக்கூடம் அழிந்து, அங்கேயுள்ள உத்ஸவர் திருப்பதியில் இருப்பது தெரிவிக்கப்பட்டது. பிறகு, திருப்பதிக்குச் சென்ற ராமானுஜர், மூலவரான கோவிந்தராஜ பெருமாளுக்கு திருச்சித்திரக்கூட பெருமாளை உத்ஸவராக ஸ்தாபித்தார். 'தென்தில்லைச் சித்திரகூடத் தென் செல்வனை, மின்னிமழை தவழும் வேங்கடத் தென்வித்தகனை' என்ற திருமங்கைஆழ்வாரின் பாசுர வரிகள், மெய்யாகிவிட்டதை எண்ணிப் பரவசப்பட்டார் உடையவர். திருவேங்கட முடையானைத் தரிசித்துவிட்டு, அப்படியே காஞ்சிப் பேரருளாளனைச் சேவித்தார். அப்போது ராமானுஜருக்கு 114 வயது; கூரத்தாழ்வானுக்கு 122 வயது.

பேசும் அரங்கன்!

அப்போது, ராமானுஜரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, வரதராஜரிடம் கண் பார்வை வேண்டி, 'வரதராஜஸ்தவம்' எனும் பாமாலையைச் சமர்ப்பித்தார் கூரத்தாழ்வான். இதைக் கேட்டு வரதராஜர் அவர் முன்னே தோன்றி, ''என்ன வேண்டுகிறாய்?'' என்று கேட்க... அவ்வளவுதான்; கேட்டதை மறந்து மெய்யுருகி நின்றார் கூரத்தாழ்வான். தங்களை மன்னனுக்குக் காட்டிக் கொடுத்த நாலூரான், பெரிய தண்டனை அனுபவிக்கப் போவதை உணர்ந்தார். ''நான் பெற்ற பேற்றினை, நாலூரானும் பெறவேண்டும்'' என கனிவுடன் வேண்டினார். 'அப்படியே ஆகட்டும்' என அருளி மறைந்தார் அருளாளன். இதில் நெகிழ்ந்த ராமானுஜரிடம், 'என்னையும் உன்னையும் இவர் மனக்கண்ணால் காண்பார்' என அருளினார் வரதராஜர். அப்படியே கூரத்தாழ்வான், தம் மனக்கண்ணால் தரிசித்து, வரதராஜரின் திவ்யா பரணங்களை விவரிக்க, மகிழ்ந்து போனார் ராமானுஜர். பிறகு, இருவரும் ஸ்ரீரங்கம் வந்தனர்.

காவேரீ வர்த்ததாம் காலே காலே வர்ஷது வாஸவ
ஸ்ரீரங்கநாதோ ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீஸ்ச வர்த்ததாம்

(ஸ்ரீராமாயண பாராயண க்ரமம்)

என்கிறார் ஸ்ரீராமானுஜர். அதாவது, எழுநூறு சந்நியாசிகள், எழுபத்து நான்கு ஆச்சார்யபுருஷர்கள், பன்னீராயிரம் ஏகாங்கிகள் (உதவியாளர்கள்), முந்நூறு கொற்றியம்மைமார்கள், ராஜாக்கள், சாற்றாத (பூணூல் அணியாத) ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகியோரால் நிறையப் பெற்று, திருக் காவிரியானது (பயிர்களுக்கு) வேண்டிய காலங்களில் பெருகட்டும்; வேண்டிய தருணங்களில் மழை பொழியட்டும். ஸ்ரீரங்கநாதன் வெற்றியுடன் வாழட்டும்; திருவரங்கச் செல்வம் வளரட்டும்' என்ற பிரார்த்தனையுடன், நம்பெருமாளை மங்களாசாசனம் செய்தார்.

கூரத்தாழ்வானுக்கு ஒரு ஆசை... 'ஸ்ரீராமானுஜருக்கு முன்னமே பரமபதம் அடையவேண்டும்' என! அரங்கனிடம் இதுகுறித்து வேண்டினார்; முதலில் மறுத்து விட்டார் அரங்கன். தொடர்ந்து வலியுறுத்தவே, 'சரி.. உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் பரமபதம் தந்தோம்' என அருளினார் அரங்கன். அதுமட்டுமா? இறுதியாக திருப்பரிவட்டம், தீர்த்தம், பிரசாதம், துளசி மாலை ஆகியவற்றை அளித்து விடை கொடுத்தார். இதையறிந்த ராமானுஜர், கூரத்தாழ்வானிடம் ''என்ன காரியம் செய்திருக்கிறீர்?!'' என்றார் சோகத்துடன். உடனே கூரத்தாழ்வான், ''உம்மை பரமபதத்தில் வரவேற்கவே, முன்பே செல்ல எண்ணம் கொண்டேன்'' என்றார். இதைக் கேட்டுச் சிலிர்த்த உடையவர், ''பரமபதநாதனும் நித்யசூரிகளும் உம்மை அங்கே அடைய என்ன பாக்கியம் செய்தனரோ? இங்கே உறங்கும் பெரியபெருமாளும் அடியேனும் என்ன பாபம் செய்தோமோ?'' எனப் புலம்பினார். உடையவரின் திருப்பாதத்தில் வேரறுந்த மரமென விழுந்தார் கூரத்தாழ்வான்.

பேசும் அரங்கன்!

'யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம வ்யாமோஹதஸ்
ததிதராணி த்ருணாய மேநே!
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயையக
ஸிந்தோ ராமானுஜஸ்ய
சரணௌ சரணம் ப்ரபத்யே!'

(ஸ்ரீவைகுண்டஸ்தவம்)

அதாவது, 'அச்யுதனின் திருவடித் தாமரைக்கு இணையான, மற்றவை அனைத்தும் புல்லென மதித்த, ஆச்சார்யரான, ஞானாதிகுண பூரணரான, கருணைக்கடலான ஸ்ரீராமானுஜரின் திருவடியைச் சரணடைகிறேன்' என்றார் கூரத்தாழ்வான்; அவருடைய திருப்பாதத்துக்கு பூஜை செய்தார்; மகன்களுக்கு அறிவுரைகள் கூறினார்; மனைவி ஆண்டாளிடம், 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார். ''தங்களது திருவுளத்தைப் பின்தொடர்வது தவிர, வேறு நினைவில்லை'' என்று நமஸ்கரித்தாள்.

பிள்ளைப் பிள்ளையாழ்வான் எனும் வைஷ்ணவரின் மடியில் தலை வைத்து, மனைவியின் மடியில் திருவடிகளை வைத்து, உடையவரின் திருவடியைத் தியானித்தபடி, தனது 124-வது வயதில் (கி.பி.1133-ஆம் வருடம்), பரமபதம் அடைந்தார் கூரத்தாழ்வான். அதன் பிறகு, ஆறு மாதங்களான நிலையில், முதலியாண்டானும் பரமபதம் அடைந்தார். தண்டையும் (முதலியாண்டான்) பவித்ரத்தையும் (கூரத்தாழ்வான்) இழந்து தவித்தார் ஸ்ரீராமானுஜர். அதையடுத்து, முழுக்க முழுக்க அரங்கனுக்குக் கைங்கர்யங்கள் செய்து வந்தார் ராமானுஜர். இதனால், ஸ்ரீரங்கம் நகரம் இன்னும் இன்னும் செழித்தது.

உடையவர் பிறந்த புண்ணியபூமியாம் ஸ்ரீபெரும்புதூரில், அவரது திருமேனி விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்ய, முதலியாண்டானின் மகன் கந்தாடையாண்டான் தலைமையில் அனைவரும் விரும்பினர்; அதற்கு உடையவரின் சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் பெற்றனர். அந்த விக்கிரகத் திருமேனியை ஆரத்தழுவி, பூரண சக்தியைச் செலுத்தி, அனுக்கிரகித்தார் (பின்னாளில், 'தானுகந்த திருமேனி' எனப் புகழ்பெற்றது, இந்த விக்கிரகம்!). கி.பி.1136-ஆம் வருடம் தைமாதம் பூச நட்சத்திரத்தில், ஸ்ரீபெரும்புதூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அதையடுத்து, அரங்கனையும் பெரியபிராட்டியையும் தரிசித்து, வைகுண்ட கத்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம் ஆகிய ஸ்தோத்திரங்களைச் சொல்லிப் பிரார்த்தித்தார் ராமானுஜர். அவரது கோரிக்கையை அறிந்த அரங்கன், 'என்ன வேண்டும்?' என்று கேட்க... ''இவ்வுலக வாழ்வின் பற்று நீங்கிற்று; காலம் நெருங்கிவிட்டது'' என்றார் ராமானுஜர். இதைக் கேட்ட அரங்கன், ''உன் மூலமாக இந்த உலகைத் திருத்த நினைத்தேன். அதற்குள் அவசரம் எதற்கு?'' என்றார். உடனே உடையவர், ''காலதாமதம் இன்றி, அடியேனைத் தங்களின் பொன்னடியில் சேர்த்துக்கொள்ளுங்கள்'' என வேண்டினார். ''இன்றிலிருந்து ஏழாம் நாள், அப்படியே ஆகும்'' என உறுதி கூறினார் அரங்கன். இதில் மனம் நிறைவுற்ற உடையவர், ''அடியேனைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பரமபதம் அடைய அருளுங்கள், ஸ்வாமி'' என்று வேண்ட... 'அப்படியே ஆகட்டும்' என்றார் அரங்கன். சந்தோஷமும் மனநிறைவுமாக மடத்துக்குத் திரும்பினார் ராமானுஜர்.

பேசும் அரங்கன்!

வைஷ்ணவர்களை ஆசீர்வதித்தார்; பட்டர் களுக்குக் கைங்கர்யங்களை வகுத்துக் கொடுத்தார்; அவர்களை பகவத் பாகவத காரியங்களில் ஈடுபடச் சொன்னார். மேலும் அனுகூலர், பிரதிகூலர், அநுபயர் என மூவரைப் பற்றி விவரித்தார். அனுகூலர் என்றால், வைஷ்ணவர்கள்; பிரதிகூலர் என்றால், பகவத் துவேஷிகள்; அநுபயர் எனில், சம்சாரிகள். அனுகூலரைக் கண்டால், குளிர்ந்த நிலவைக் கண்டது போல், தென்றலின் சுகத்தை உணர்ந்ததுபோல் இருக்க வேண்டும்; பிரதிகூலரைக் கண்டால், சர்ப்பம் (பாம்பு) மற்றும் அக்னியைக் கண்டால் எப்படி ஜாக்கிரதையாக இருப்போமோ, அப்படி அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; சம்சாரிகளைக் கண்டால், அவர்களுக்கு ஆத்மஞானத்தை உபதேசித்தும், அவர்களுக்காக மனமிரங்கியும் செயல்படவேண்டும் என்று தெரிவித்தார் ஸ்ரீராமானுஜர். அத்துடன், ஒவ்வொரு வைணவனும் என்னென்ன செய்யவேண்டும் எனப் பட்டியலிட்டார் உடையவர்.

ஸ்ரீபாஷ்யத்தை வாசிக்கவேண்டும்; அதற்கான திறன் இல்லையெனில், பிரபந்தங்களைப் படிக்கவேண்டும்; அதும் இயலாத காரியம் எனில், திவ்விய தேசங்களில் பெருமாளுக்கு அமுதுப்படி, சாத்துப்படி அளிக்கவேண்டும்; இதுவும் இயலாதவர்கள், திருநாராயணபுரத்தில் குடிசை அமைத்தேனும் வாழவேண்டும்; இயலாதபட்சத்தில், த்வயத்தை உணர்ந்து, மனனம் செய்யவேண்டும்; இவை எதையுமே செயல்படுத்த முடியாதவர்கள், எம்பெருமானின் பரமபாகவதனை நமஸ்கரித்து, அவரது அபிமானத்தைப் பெறவேண்டும் என அறிவுறுத்தினார் ராமானுஜர். அதையடுத்து, பெரியபெருமாளின் திருவடியை தியானித்தார்; ஆளவந்தாரை பிரார்த்தித்தார்; பரவாஸூதேவரை நமஸ்கரித்தார். அதே நேரம், அங்கே இருந்தவர்கள் திருமந்திரம், த்வயம், அருளிச் செயல்கள், வேதங்கள், புராண- இதிகாசங்கள் ஆகியவற்றைப் பாராயணம் செய்தனர். அந்த மகாபுண்ணியரை வழியனுப்ப அனைவரும் திரண்டிருந்தனர். ஆனால் ராமானுஜரோ தேஜோமயமான திருமுகத்துடன், பெரியநம்பி மற்றும் கூரத்தாழ் வானை நினைத்தபடி வடுகநம்பியின் மடியில் படுத்திருந்தார். ஸ்தூல சரீரமாகவும் சூட்சும சரீரமாகவும் உள்ள பிரக்ருதியை, பழைய வஸ்திரத்தைக் கழிப்பதுபோல, சிரமம் ஏதுமின்றி, திருமேனியில் இருந்து தனது உயிரை விண்ணுலகம் அனுப்ப... அங்கே ஆத்மஜோதி கிளம்பிற்று! தனது 120-வது வயதில் (கி.பி.1137), தாம் அவதரித்த பிங்கள வருடத்தில், மாசி வளர்பிறை தசமி திதியில், திருவாதிரை நட்சத்திரத்தில், சனிக்கிழமை நண்பகலில், பரமபதம் அடைந்தார் ராமானுஜர்!

'உண்மையில், ஆன்மாவுக்கு பந்தமும் இல்லை; விடுதலையும் கிடையாது. துன்பம், காமம், இன்பம் ஆகியவை, உடல் எடுப்பதால் ஏற்படுபவை. மனிதனின் அறியாமையால்தான் பந்தமும், அதனால் துன்பமும் ஏற்படுகிறது. ஞானத்தால் விடுதலை கிடைக்கிறது. மனித ஆன்மா என்னுடைய பிரதிபலிப்பு; என்னில் ஒரு அங்கம்! எப்படிப் பாத்திரத்திலுள்ள நீரில் சூரியனின் பிம்பம் தெரிகிறதோ, அதுபோல் எல்லா உயிர்களிலும் 'நான்' கலந்து நிற்கிறேன்' என்கிறது உத்தவ கீதை.

தன்னிடம் மாறாப் பற்று கொண்ட ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், அவ்வளவு ஏன்... பாமரர்களாகக்கூட இருக்கட்டும்; அவர்களுடன் இன்றைக்கும் பேசிக்கொண்டுதான் இருக்கிறான், அரங்கன்! அரங்கனை அறிய, கடும் தவமோ பெருமுயற்சியோ தேவையில்லை. அவனிடம் என்றும் மாறாத அன்பு வைத்திருந்தாலே போதும்... அரங்கன் உங்களிடமும் பேசுவான்!

இந்த உலகில் சாஸ்வதமானது, அன்புதானே?!

- (நிறைவுற்றது)