தொடர்கள்
Published:Updated:

எல்லை சாமிகள்!

எல்லை சாமிகள்!


தொடர்கள்
எல்லை சாமிகள்!
எல்லை சாமிகள்!
எல்லை சாமிகள்!
எல்லை சாமிகள்!

ருது பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம்... காளையார்கோவிலுக்குக் கிழக்கில் உள்ள காட்டாத்தி எனும் கிராமத்தில், காளையப்பன் என்பவர் வசித்தார். நிறைய பசுக்களை வளர்த்து வந்த இவர், காளையார்கோவிலில் உள்ள ஸ்ரீகாளீஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய, தினமும் பால் வழங்குவார்.

எல்லை சாமிகள்!

இதனால், ஊரிலும் அரண்மனையிலும் அவருக்கு ஏகமரியாதை!

சின்ன மருதுவும் பெரிய மருதுவும் தினமும் காலையில் ஆலயத்துக்கு வந்து காளீஸ்வரரைத் தரிசித்துவிட்டு, அப்படியே கோபுரத்தில் ஏறி, தூரத்தே தெரியும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தை வணங்குவர். பின்னர், ஆடல்- பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில தருணங்களில், காளையப்பனும் தன் மூன்று மனைவியருடன் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.

ஒருநாள், மருது சகோதரர்கள் கோபுரத்தில் ஏறும் வேளையில், சீதையம்மாள் எனும் நாட்டியக்காரி ஓடி வந்து, காளையப்பனை முத்தமிட்டாள். மதிமயங்கிய காளையப்பனும் பதிலுக்கு முத்தம் தந்தார். இதைக் கண்டு கோபம் கொண்ட சின்ன மருது, சீதையம் மாளைச் சிறையில் அடைக்க உத்தரவிட் டார். காளையப்பனுக் கான தண்டனையை மறுநாள் அறிவிப்பதாகக் கூறிச் சென்றார்.

அன்றிரவு, காளையப்பனுக்கு ஒரு கனவு... ஸ்ரீகாளீஸ்வரர் ருத்ரதாண்டவம் ஆட, தெப்பக்குளத்தின் தண்ணீரெல்லாம் தெருவுக்கு வந்தது. தொழுவத்தில் இருந்த மாடுகள், கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடின. ஆடி முடித்து குளக்கரையில் அமர்ந்தார் ஈசன். நடந்தது எதுவும் தெரியாத பார்வதிதேவி, ஈசனுக்குப் பின்புறமாக வந்து, அவரு டைய கண்களை பொத்தினாள். அவளின் கரங்களை விலக்கி, கோயிலில் நடந்த விஷயங்களை விவரித்த ஈசன், ''எனது சித்தப்படியே அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஆனால், நாட்டியக்காரியைச் சிறையில் அடைத்துவிட்டனர். விடிந்ததும், காளையப்பனை சிரச்சேதம் செய்யப் போகின்றனர். அவனைக் காப்பாற்ற வேண்டும்'' என்றார்.

அவ்வளவுதான்... கனவு கலைந்தது! விடிந்ததும் தொழுவத்தில் மாடுகளைக் காணாமல் அதிர்ந்தார் காளையப்பன். தரையில் தென்பட்ட மாடுகளின் குளம்படி தடங்களைக்கொண்டு, மேற்கு நோக்கிப் பயணித்தார். நாள் முழுக்கப் பயணித்து அழகர் மலையை அடைந்தவர், அங்கே கோயில் மாடுகளுக்கு நடுவே தனது மாடுகளும் இருப்பதைக் கண்டார். 'தன்னைக் காப்பாற்ற, இறைவன் நிகழ்த்திய அற்புதம் இது' என்று சிலிர்த்த காளையப்பன், 'இனி, எங்கே செல்வது?' என அழகர் மலையானிடமே வேண்டினார்.

அப்போது, காயாம்பு என்பவர்போல் உருவெடுத்து வந்த அழகர்மலையான், ''இந்தக் கூட்டத்தில் உன் மாடுகளை எப்படிக் கண்டறிவாய்?'' என்று கேட்டார். ''என் குரலைக் கேட்டதுமே என் மாடுகள் ஓடி வந்துவிடும்'' என்றபடி காளையப்பன் குரல் கொடுக்க, அவருடைய மாடுகள் ஓடோடி வந்து, அவருக்கு அருகில் நின்றுகொண்டன. அதைப் பார்த்து புன்னகைத்த காயாம்பு (அழகர் மலையான்), ''தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டாய். மன்னனுக்கும் புத்திமதி சொல்லப்பட்டுள்ளது. எனவே, பயம் வேண்டாம். நீ கிழக்கு நோக்கித் திரும்பப் பயணிக்கலாம்'' என்றார்.

கூடவே, காளையப்பனிடம் பிரம்பு ஒன்றைக் கொடுத்த காயாம்பு, ''இங்கேயுள்ள பதினெட்டாம்படி பெரியகருப்பண்ண சுவாமியின் பிரம்பு இது. உனக்குத் துணை நிற்கும்.

இதை எந்த இடத்தில் ஊன்றுகிறாயோ, அதுவே உனது வசிப்பிடம். மீண்டும் அங்கிருந்து இந்தப் பிரம்பை அசைக்கக்கூட முடியாது!'' என்று அருளினார்.

பிறகு, தன் மாடுகளை ஓட்டிக்கொண்டு குடும்பத்துடன் கிழக்கு நோக்கிப் பயணித்த காளையப்பன், நாட்டரசன்கோட்டைக்கு வந்து சேர்ந்தார். அந்த இடம் மாடுகளைப் பராமரிக்க ஏற்றதாக இருக்கும் என்று கருதியவர், கருப்பரின் பிரம்பை அங்கேயே ஊன்றினார்; அந்தப் பிரம்பைக் கருப் ராகவே கருதி, பாலபிஷேகம் செய்து வழிபடலானார். ஒருநாள் கருப்பரிடம், ''வருங்காலத்தில் உமக்கான தினப்படி பூஜைகளை செய்யப்போவது யாரோ?'' என்று கேட்டார்.

எல்லை சாமிகள்!

அப்போது, ''மேலூர் அருகில் உள்ள மலம்பட்டியில், மாணிக்கவல்லி என்பவள், குளத்தில் பொட்டிக்கிழங்கு (தண்ணீரில் விளையும் ஒருவகைக் கிழங்கு) எடுத்துக் கொண்டு இருப்பாள். அவளிடம் கேள்!'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி மாணிக்கவல்லியைச் சந்தித்த காளையப்பன், அவள் மீது ஆசைப்பட்டார். அதையறிந்த மாணிக்கவல்லி, ''நானொரு தெய்வப்பிறவி. கருப்பருக்குத் தொண்டு செய்ய ஒரு பிள்ளையை உருவாக்கித் தரவேண்டும் என்பது எனக்கு இடப்பட்ட கட்டளை'' என்றாள். காளையப்பன் அவளிடம் மன்னிப்புக் கேட்டார்.

பிறகு, அவள் பிரசவித்துக் கொடுத்த ஆண் குழந்தையுடன் நாட்டரசன்கோட்டையை அடைந்தார் காளையப்பன். காலங்கள் ஓட... குழந்தையும் வளர்ந்து கருப்பர் கோயிலின் பூசாரியானான். இன்றுவரை, அடுத்தடுத்த வாரிசுகளே கருப்பருக்குப் பூசாரிகளாக உள்ளனர்.

எல்லை சாமிகள்!

கருப்பண்ண சுவாமி கோயில் உருவானபோது, மருது சகோதரர்களிடம் பணிபுரிந்த திவான் ஒருவர், தானும், தனது வகையறாக்களும் கருப்பரை வழிபட அனுமதி தாருங்கள் என்று கேட்டாராம். ஆனால், அனுமதி கிடைக்காததால் திவான் வகையறா, தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் உள்ள தங்களுடைய குலதெய்வமான ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயத்திலிருந்து பிடிமண் எடுத்து வந்து, கருப்பர் கோயிலில் காமாட்சியம்மனுக்கும் சந்நிதியை அமைத்தனராம். கோயிலில் பிரதான தெய்வமாகத் திகழ்வது ஸ்ரீகாமாட்சியம்மனே! அம்மனுக்கு வலது பக்கத்தில் வடக்கு நோக்கி அருள்கிறார் பெரிய கருப்பண்ண சுவாமி. அடுத்து, வெள்ளி அங்கியுடன் காட்சி தருகிறது பிரம்பு. இதை, முத்துக்கருப்பண்ண சுவாமியாக வழிபடுகின்றனர். முத்துக்கருப்பாயி, உகந்தநாயகி, காத்தவராயன், ஆரியமாலா, தொட்டிய சின்னான் ஆகியோரும் இங்கே அருள் பாலிக்கிறார்கள். சிறிய மாடத்தில் வீரபத்திரரும், எதிரே ஐயா சுவாமியும், தொட்டி யத்துக் கருப்பரும் காட்சி தருகின்றனர். ஆலயத்துக்கு எதிரே சிறிய கோயிலில் ராக்காச்சி அம்மனும், பேச்சியம்மனும் தரிசனம் தருகின்றனர்.

இந்த ஊரின் புகழ்பெற்ற ஸ்ரீகண்ணாத்தாள் கோயிலில் (தை- முதல் செவ்வாய் அன்று) நடை பெறும் செவ்வாய்ப் பொங்கல் விழாவில், கருப் பண்ண சுவாமிக்கும் முக்கியத்துவம் உண்டு. ஊர் முக்கியஸ்தர்கள், கருப்பண்ண சுவாமி கோயிலின் சாமியாடிகள் ஏழுபேரையும் மேளதாளத்துடன் கண்ணாத்தாள் கோயிலுக்கு அழைத்து வருவர்.அப்போது, கண்ணாத்தாளுக்கு இரண்டு, பைரவருக்கு ஒன்று என மூன்று கிடாக்களை பலியிடுவர். அடுத்து, பொங்கலிடுவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களது பெயர்களைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்வர். யார் பெயர் முதலில் வருகிறதோ, அவருக்குக் கோயிலில் இருந்தே பொங்கல் பானை தருவர். பொங்கல் பொங்கியதும், கிடாக்குட்டியை பலியிடுவர். அதன்பிறகு, மற்றவர்கள் பொங்கலிடுவர். கிடா வெட்டி முடித்த தும், சாமியாடிகள் ஏழுபேரும் பெரியகருப்பண்ண சுவாமி கோயிலுக்குத் திரும்பிவிடுவர்.

சிவராத்திரியன்று களறித் திருவிழா நடைபெறும். அன்றிரவு 11 மணிக்கு கண்ணாத்தாள் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து கரகம் எடுத்து வந்து, காமாட்சியம்மனிடம் வைத்து பூஜைகள் நடைபெறும். 3-ஆம் நாள், கருப்பண்ண சுவாமி பாரிவேட்டை தர்பாரில் இருப்பார். அன்றிரவு வேட்டையில் கிடைப்பதைக் கொண்டு, கருப்பண்ண சுவாமிக்குப் பலியிடுவர். பிறகு அங்கேயே சமைத்து, அதிகாலையில் சாப்பிடுவர். அத்துடன் விழா நிறைவுறும். தற்போது, வேட்டைக்குச் செல்வது நின்றுவிட்டது. மாறாக, ஆட்டுக்கிடாக்களை ஆலய வாசலில் பலியிடுகின்றனர். களறி விழாவின் 3 நாட்களும், சாமியாடிகள் கோயிலிலேயே தங்க வேண்டும் என்பது கருப்பண்ண சுவாமியின் கட்டளையாம்!

பங்காளிச் சண்டையில் பிரிந்திருப்பவர்கள், கருப்பண்ண சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டு ஒன்று சேரும் நிகழ்ச்சியும் நடைபெறும். வெள்ளிக் கிழமைகளில் காமாட்சியம்மனை வழிபட, தடைகள் நீங்கி திருமணம் நடந்தேறும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பில்லி- சூனியம், செய்வினை முதலான கோளாறுகள் நீங்க கருப்பரை நம்பினோர் கைவிடப்படார்!

- (நிறைவுற்றது)
படங்கள் எஸ். சாய் தர்மராஜ்