ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தேவாரத் திருவுலா! - மதுரை

தேவாரத் திருவுலா! - மதுரை


ஸ்தல வழிபாடு
தேவாரத் திருவுலா! - மதுரை
தேவாரத் திருவுலா! - மதுரை
தேவாரத் திருவுலா! - மதுரை
தேவாரத் திருவுலா! - மதுரை

துரை அருள்மிகு மீனாட்சியம்மையைத் தரிசித்து முடித்து, சுவாமி சந்நிதியின் 2-ஆம் பிராகாரத்தை அடைகிறோம். இந்தப் பிராகாரம் தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய மூன்று பகுதிகளில் மட்டுமே அமைகிறது. கிழக்குப் பகுதியில் இதுவே விரிவாகி, பெரிய மண்டபமாகி விட்டது; கம்பத்தடி மண்டபம் என்று பெயர்.

இந்த மண்டபப் பகுதிக்கு நடுவில், சுவாமி கொடிக் கம்பமும் பலிபீடமும் உள்ளன. கொடிக் கம்பத்தடியில் உள்ள மண்டபம் என்பதால், கம்பத்தடி மண்டபம். இதில், நிறையத் தூண்கள்; ஒவ்வொன்றிலும் சிற்பங்கள். தூண்களுக்கு நடுவில், அதாவது கொடிமரத்துக்குக் கிழக்கில், நான்கு கால் மண்டபம்; அதில் அழகுற அமைந்திருக்கிறது நந்தி. இதன் விதானத்தில், அழகழகாகச் சுதைச் சிற்பங்கள்! கம்பத்தடி மண்டபத்தில் நின்று பார்வையைச் சுழல விடுகிறோம். வியப்பால் விரியும் கண்கள் குறுகவேயில்லை. தூண்களில், சிவனாரின் அதியற்புதமான சிலா வடிவங்கள்; மொத்தம் 25 வடிவங்கள். 19-ஆம் நூற்றாண்டில், கோயில் திருப்பணி நடைபெற்றபோது, அதில் பங்கேற்ற நகரத்தார் பெருமக்கள், தூண்களையும் சிவத்திருமேனிகளையும் அமைத்தனராம்.

ஈசனுக்கு ஐந்து திருமுகங்கள்; ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய முகங்கள்; ஒவ்வொன்றிலிருந்தும் ஐந்தைந்து வடிவங்கள் தோன்றியதாகச் சொல்வர். பிரதட்சிண முறையிலேயே, வடக்கில் உள்ள நான்கு தூண்களையும், தெற்கில் உள்ள நான்கு தூண்களையும் ஒவ்வொன்றாகச் சுற்றி வந்தால், ஏகபாதமூர்த்தி, ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், சக்கராதனர், ஜலந்தரவதமூர்த்தி, தட்சிணாமூர்த்தி, கஜ சம்ஹாரமூர்த்தி, சண்டேச அனுக்கிரக மூர்த்தி, பிட்சாடனர், வீரபத்திரர், கிராத அர்ச்சுனர், ரிஷபாந்திகர், சோமாஸ்கந்தர், சுகாசனர், கல்யாண சுந்தரேஸ்வரர், திரிபுராந்தகர், கால சம்ஹாரமூர்த்தி, பாசுபதமூர்த்தி, நடராஜர், காமதகன மூர்த்தி, சந்திரசேகரர், உமாமகேசர், லிங்கோத்பவர், ராவண அனுக்கிரகமூர்த்தி ஆகிய திருவடிவங்களைத் தரிசிக்கலாம். இதே தூண்களில் திருமால் வடிவங்கள், நரிகளைப் பரிகளாக்கிய வரலாறு, திரிபுரம் அழிக்கப் புறப்பட்ட சிவனாருக்குத் திருமால் அம்பாக நின்ற சம்பவம், குமார சம்பவம், பிட்டுக்கு மண் சுமந்த சம்பவம் போன்ற காட்சிகளும் உள்ளன.

தேவாரத் திருவுலா! - மதுரை

ராவண அனுக்கிரக மூர்த்தி வடிவம், கொள்ளை அழகு. திருக்கயிலை மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்கிற பத்துத்தலை ராவணனைக் கீழே அழுத்திவிடுகிறார் சிவனார். பரிதவிக்கும் அவனுக்காகப் பரிந்து, பின்னர் அருள்கிறார். இதற்குக் கீழேயே, கணேசருக்கும் அனுக்கிரகம். ஆனால், ராவண அனுக்கிரக மூர்த்தத்தின் சிவனாரே விநாயகருக்கும் அருள்கிறார். இரண்டு தனித்தனிச் சிற்பங்களை ஒருசேர அமைத்திருக்கும் சிற்ப நுணுக்கத்தைப் புகழ்வதா... இவற்றை அமைப்பதற்கு வழிசெய்தவர்களைப் புகழ்வதா?!

தேவாரத் திருவுலா! - மதுரை

அதுமட்டுமா? இன்னும் நான்கு தூண்களும் அவற்றின் சிற்பங்களும் மதுரையில் வெகு பிரபலம். கம்பத்தடி மண்டபத்தின் கிழக்குப் பகுதியில், (கோபுரத்தை நோக்கிச் செல்லும் வழி) இவை உள்ளன. வடக்கில் இரண்டு தூண்கள்; அவற் றில், எட்டுக் கரங்களுடன் அசுரனை வதம் செய்கிற அக்னி வீரபத்திரர், பத்துக் கரங்களுடன் கோபாவேச ஜடாதாரியான அகோர வீரபத்திரர். தெற்கில் இரண்டு தூண்கள்; அவற்றில், ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும் காளிதேவியும். இவை, விஜயநகர காலத்தில் அமைக்கப்பட்டனவாம். ஊர்த்துவ தாண்டவச் சிற்பத்தில் காரைக்கால் அம்மையும், குடமுழாவை மீட்டுகிற நந்திதேவரும் காணப்படுகின்றனர். இவற்றில், நமது கருத்தையும் கண்களையும் கவருகிற இன்னுமொரு சிற்பமும் உண்டு. அது...

பேறுகாலத்தில் பெண்ணொருத்தி துணையின்றித் தவித்தாள்; உதவிக்கு வரவேண்டிய தாய், குறுக்கே ஓடிய வெள்ளத்தால் வரமுடியவில்லை; மகள் துடிக்க, அவளுடைய வேண்டுகோளுக் காக, அவளுடைய தாய் வடிவில் இறைவனே வந்து பிரசவம் பார்த்தார். இப்படியரு சம்பவம் காவிரிக்கரையில் நடைபெற்ற தால், திருச்சி மலைக்கோட்டைச் சிவனார் தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார் இல்லையா? குழந்தை பெறுகிற பெண்ணும், அவளுக்கு அருகில் அவளுடைய தாயின் வடிவில் இறைவனும் காணப்படுகின்றனர். இந்தச் சிற்பத்தை வலம் வந்து வணங்கினால், பேறுற்ற பெண்களுக்குச் சுகப் பிரசவம் நிகழும். அடுத்து, வடக்குப் பகுதியில் நவக்கிரகச் சந்நிதி. கம்பத்தடி மண்டபத்திலிருந்து சுவாமி சந்நிதியின் உள்பிராகாரத்தை அடைய முற்படுகிறோம். இங்கே, சந்நிதி கோபுரம் என்று அழைக்கப்படுகிற மூன்று நிலை கோபுரம். வாசல் பகுதியில் அதிகார நந்தி, சாமுண்டி, ஆட்கொண்டார்- உய்யக்கொண்டார் எனும் துவார பாலகர்கள் ஆகியோரைக் காணலாம்.

பக்கத்துத் தூண்களில், ஒரு பக்கம்... ஐந்து முக சதாசிவ மூர்த்தம்; இன்னொரு பக்கம், பஞ்சமுக சக்தி. ஆதிசக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி என ஐந்துநிலையில் அருள்கிறாள் சக்திதேவி. அதற்கேற்ப, ஈசனும் ஐந்து முகங்கள் கொள்கிறார். சிவ சக்தி ஐக்கியமாக இருவரும் கயிலையில் இருப்பது போன்ற கோலத்தில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

தேவாரத் திருவுலா! - மதுரை

அடுத்து, உள் பிராகாரம். உஷா, பிரத்யுஷா ஆகிய தேவிமாருடன் சூரியன்; தெற்குச் சுற்றில் அறுபத்து மூவர், சந்தான ஆச்சார்யர்கள், கலைமகள், சப்த கன்னிகைகள். தென்மேற்கு மூலையில் உற்ஸவர் சந்நிதி. தொடர்ந்து, ஸ்ரீமுத்துக்குமாரர் சந்நிதி. அடுத்து ஸ்ரீமேதாதட்சிணாமூர்த்தி. வடமேற்கு மூலையில் ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில். வடக்குச் சுற்றில், சித்தர் கோயில். சிவபெருமானே சித்தர் வடிவம் கொண்டதாகத் திருவிளையாடல் கதைகள் காட்டுகின்றன. எனவே, இந்தச் சித்தர், சிவனாரே என்பது ஐதீகம்.

இந்தச் சுற்றில், மூடப்பட்ட கிணறு; அருகில், கல்லால் ஆன வன்னி மரமும், லிங்கமும்! இந்தக் கதை, திருப்புறம்பயம் எனும் தலத்துடன் தொடர்பு கொண் டது. மகளை மணமுடித்துக் கொடுக்கத் தீர்மானித்திருந்த தந்தை இறந்துபோனார். தனியாக நின்ற மகளை, மதுரையில் இருந்து வந்த மருமகனார் (அவளை மணக்க வேண்டியவர்) அழைத்துக்கொண்டு புறப்பட்டார். வழியில்... திருப்புறம்பயத்தில் இருவரும் தங்கினர். விதிவசத்தால் பாம்பு தீண்ட, மருமகன் இறந்தான். அப்போது, அங்கே வந்த திருஞானசம்பந்தரின் அருளால், மீண்டும் உயிர்பெற்று எழுந்தான். அவர்களை அங்கேயே திருமணம் செய்யச் சொன்னார் சம்பந்தர். திருமணத் துக்குச் சாட்சி யார் எனக் கேட்க, அங்கிருந்த வன்னியும் கிணறும் சிவனுமே சாட்சி என்றார். மணம் செய்த பிறகு தம்பதி மதுரைக்கு வந்தனர். மூத்த மனைவியுடன் இவளையும் குடிவைத்தான் அவன்.

காலப்போக்கில், ஏதோவொரு சண்டை. 'உனக்கு நடந்த திருமணத்துக்கு யார் சாட்சி?' என்று மூத்தாள் இளையாளைக் கடுமையாகப் பேச, துடித்துப்போன இளையவள், திருப்புறம்பய லிங்கத் திருமேனியை அழைத்தாள். அங்கிருந்து வன்னியும், லிங்கமும், கிணறும் சாட்சி சொல்ல மதுரையம்பதிக்கு வந்தன. திருவிளையாடல் புராணம் மற்றும் ஞானசம்பந்த பெருமான் வரலாற்றில் காணப்படும் இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்ட கிணறுதான் இங்கே நாம் காண்பது! இந்தக் கிணறு, திருமலை நாயக்கர் மகால் வரை செல்லும் சுரங்கப்பாதை என்றும் சொல்வர்.

அடுத்து, ஆதிக் கடம்ப மரம். ஆதியில் கடம்பவனமாக இருந்ததாம், மதுரை. அதை நினைவுபடுத்தும் விதமாக, உலர்ந்த, பழைய கடம்ப மரம் இங்கே பாதுகாக்கப்பட் டுள்ளது. மரத்தைச் சுற்றி வந்து, தொட்டு வணங்குகின்றனர் பக்தர்கள். அடுத்து, வடக்குச் சுற்றில் தொடர்ந்தால், கனக சபை. சிவகாமி அம்மை அருகில் இருக்க, ஆடிக் கொண்டிருக்கும் செப்புப் படிம நடராஜர். இதையடுத்து, திருமகளின் சந்நிதி. இன்னும் சற்று நகர, ரத்தின சபை. இங்கேயும் சிவகாமியம்மையுடன் காட்சி தருகிறார் ஸ்ரீநடராஜர். இவரும் செப்புப் படிமம்!

தேவாரத் திருவுலா! - மதுரை

உள்பிராகார வலம் முடிந்ததும் முதலில், ஆறுகால் மண்டபமான முக மண்டபம். குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டு, பின்னர் நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது இது! இங்குதான், 17-ஆம் நூற்றாண்டில், பரஞ்ஜோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் அரங்கேற்றப் பட்டது. மகா மண்டபம் செல்லும் வழியில், திருமலை நாயக்கர் அளித்த துவார பாலகச் சிலைகள். மகாமண்டபத்தில், அறுபத்து மூவரின் செப்புத் திருமேனிகள். சுவர்களில், திருவிளையாடல் புராணச் சிற்பங்கள்! அடுத்து, உள்ளே நுழைந்தால்... வெள்ளி அம்பலம்; ரஜத சபை. பத்துக் கரங் களுடன், நடனக் கோலத்தில் ஸ்ரீநடராஜர் அருகில் உமாதேவியார்.

ஆனாலும்... இதென்ன? ஏதோ வித்தியாசம்! ஆம், வழக்கமாக இடது காலைத் தூக்கி ஆடுபவர், இங்கே வலது காலைத் தூக்கி... ஆஹா, இவர்தான் கால் மாற்றி ஆடிய கருணை வள்ளலா?!

- (இன்னும் வரும்)
படங்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி