ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

வடகண்டம் ஸ்ரீகரவீரநாதர் கோயில்

வடகண்டம் ஸ்ரீகரவீரநாதர் கோயில்


ஸ்தல வழிபாடு
பிள்ளைகள் நோய்நொடியின்று வாழ...
வடகண்டம் ஸ்ரீகரவீரநாதர் கோயில்
வடகண்டம் ஸ்ரீகரவீரநாதர் கோயில்
வடகண்டம் ஸ்ரீகரவீரநாதர் கோயில்

கௌதம முனிவர் வழிபட்ட திருத்தலம், பிரம்மன் வணங்கிய லிங்கத் திருமேனி, தேவாரப் பாடல் பெற்ற ஆலயம் எனப் பல பெருமைகள் கொண்டது ஸ்ரீகரவீரநாதர் திருக்கோயில்.

கரவீரம் என்றால் செவ்வரளி என்று பொருள். ஒரு காலத்தில், செவ்வரளிக் காடாகத் திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. எனவே, இங்குள்ள ஸ்வாமிக்கு ஸ்ரீகரவீரநாதர் என்றும், பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர் ஆதலால், ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என்றும் பெயர். சுமார் ஆறரை அடி உயரத்துடன் திகழ்கிறது, ஸ்வாமியின் லிங்கத் திருமேனி. தேவியருடன் முருகப்பெருமானும் அழகே உருவாகத் தரிசனம் தருகிறார்.

குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஆலயம், திருவாரூர்- கும்பகோணம் சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள வடகண்டம் கிராமத்தில், வெட்டாற்றங்கரையில் அமைந்துள்ளது (கர வீரம் என ஆதிகாலத்தில் அழைக்கப்பட்டதாம்).

இந்தக் கோயிலில், அம்பாள் ஸ்ரீமின்னம்மையும் வரப் பிரசாதியாகத் திகழ்கிறாள். ஒருமுறை, வீதியுலா சென்ற ஈசன் எப்போது திரும்புவார் என்று அம்பாள் காத்திருந்தாளாம். அப்போது அவளிடம் கன்னிப்பெண்கள் சிலர், ''நீ கணவனுக்காகக் காத்திருக்கிறாய்; நாங்களோ கல்யாணம் நடைபெறாதா என்று காத்திருக்கிறோம்'' என ஏக்கத்துடன் சொன்னார்களாம். அவர்களது கவலை நீக்கி, கல்யாண வரம் தந்து அருளினாளாம் ஸ்ரீமின்னம்மை. ஸ்வாமிக்கு வலப்புறம் ஸ்ரீமின்னம்மையின் சந்நிதியும், எதிரில் சூரியபகவான் சந்நிதியும் அமைந்திருப்பது சிறப்பு என்கின்றனர் பக்தர்கள். அமாவாசை நாளில், அம்பாளின் திருப்பாதத்தில் ஜாதகத்தை வைத்து வேண்டிக்கொண்டால், விரைவில் திருமண வரம் கிடைக்குமாம்.

வடகண்டம் ஸ்ரீகரவீரநாதர் கோயில்
வடகண்டம் ஸ்ரீகரவீரநாதர் கோயில்

அதுமட்டுமா? குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு, சரியாகச் சாப்பிடாமலும் தூங்காமலும் அழுதுகொண்டே இருந்தால், இங்கு வந்து செவ்வரளிச் செடிக்கு மூன்று குடம் தண்ணீர் ஊற்றி, அம்பாளின் திருப்பாதத்தில் மூன்று மஞ்சள்கிழங்கு வைத்து வழிபடவேண்டும். பிறகு, இந்த மஞ்சளைத் தண்ணீரில் கரைத்து, அந்த நீரில் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் நோய் குணமாகும்; குழந்தைகள் நோய்நொடியின்றி வாழ்வர் என்பது ஐதீகம்.

இந்தத் தலத்து இறைவனைத் தரிசித்து வினைகளைக் களையும் பதிகம் பாடினாராம் திருஞானசம்பந்தர். நாமும் இந்தப் பதிகம் பாடி கரவீரநாதரை வழிபட, நம் வினைகள் யாவும் நீங்கும். மேலும், வடகண்டம் தலத்தைத் தரிசிக்க, அட்டவீரட்டான தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்குமாம். நீங்களும் ஒருமுறை, வடகண்டம் வந்து வழிபடுங்கள்; பிணியும் வினையும் நீங்கி உங்கள் பிள்ளைச் செல்வங்கள் வளமோடு வாழ்வர்!

- அ. சரண்யா, படங்கள் கே. குணசீலன்