வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ள தலம்; திருநீலகண்ட யாழ்ப்பாணர் அவதரித்த பூமி; திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற ஆலயம்; வேதத்தின் பொருளை, உமையவளுக்கு சிவனார் அருளிய திருத்தலம்... என ராஜேந்திரபட்டினம் ஆலயத்துக்குதான் எத்தனை எத்தனைப் பெருமைகள்?!
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் வழியில், சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ராஜேந்திரபட்டினம். இந்த ஊரில்தான், ஸ்ரீநீலகண்டேஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார் ஈசன். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீநீலமலர்க்கண்ணியம்மை. பஞ்ச புலியூர் திருத்தலங்களில் இதுவும் ஒன்று. வியாக்ரபாதர் வழிபட்ட ஆலயங்களை புலியூர் தலங்கள் எனப் போற்றுவர். முன்னொரு காலத்தில் இந்த இடம், வெள்ளெருக்கம்பூக்கள் நிறைந்த வனமாக இருந்ததாம். இங்கே, வியாக்ரபாதர் முனிவர் தவம் செய்து இறைவனை வழிபட்டதால், எருக்கத்தம்புலியூர் என்றானதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.
அதுமட்டுமா? ராஜராஜசோழ மன்னனுக்கு புத்திர பாக்கியத்தையும் அவனுடைய மைந்தன் ராஜேந்திர சோழனுக்கு திருமண வரத்தையும் தந்தருளிய தலம் எனப் போற்றுகின்றனர். இந்த ஆலயத்தின் சாந்நித்தியத்தை உணர்ந்த ராஜேந்திர சோழன், இந்தக் கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்து, ஊரையும் செழிக்கச் செய்தானாம். இதில் குளிர்ந்து போன ஊர்மக்கள், அவனது பெயரையே ஊருக்குச் சூட்டி மகிழ்ந்தனராம்!
|