ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!


ஸ்தல வழிபாடு
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!

ரத்தில் இருந்த கிளிகள் தங்களுக்குள்ளே பேசிக் கொண்டதைக் கேட்ட பிருங்கி மகரிஷி, உற்சாகமானார். 'தென்னாடுடைய சிவனே, போற்றி!' என்று அந்த மலையைப் பார்த்துக் கைகூப்பி வணங்கினார். உடலும் உள்ளமும் சிலிர்க்க, நெடுஞ்சாண்கிடையாக அப்படியே விழுந்து நமஸ்கரித்தார்.

'இத்தனை நாளும் தவம் இருந்து, காத்திருந்தது வீண் போகவில்லை' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். 'பட்சிகள் பேசுவதைக் கூர்ந்து கேட்டு, அவற்றின் பாஷையைப் பழகிக்கொள்ளச் சொன்னாரே அகத்திய மாமுனி... அதன் அர்த்தம் இப்போதுதான் விளங்குகிறது' என்று எண்ணியபடி, அகத்தியர் புறப்பட்டுச் சென்ற தென்திசை நோக்கி வணங்கினார்.

சரி... அந்தக் கிளிகள், அப்படி என்னதான் பேசிக் கொண்டன?

இந்த உலகில் உள்ள அத்தனை மலர்களையும் சிருஷ்டித்தவள், சாகம்பரிதேவி. அவற்றில் எல்லா மலர்களும் ஏதேனும் ஒருவகையில் சிறப்பு வாய்ந்ததுதான் என்றாலும், ஒரு குறிப்பிட்ட மலருக்கு மட்டும் விசேஷ அம்சம் உண்டு. யுகங்கள் பல கடந்து, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட ஹோரையில், ஒரேயரு பூ மட்டுமே மலர்ந்து, மணம் பரப்புமாம்! அப்பேர்ப்பட்ட அந்த மலரைச் சூடிக்கொள்வதில், அப்படியரு ஆனந்தமாம் ஈசனுக்கு!

ஆலயம் தேடுவோம்!

அந்த வனத்தில் உள்ள சிறியதொரு மலையில், சுனை ஒன்று உள்ளது. அதில் அந்த மலர் பூக்கின்றபோது, அதனைச் சூடிக்கொள்ள சிவபெருமானே அங்கு வந்து செல்வாராம். ஒருகட்டத்தில், மலரிடம் மனதைப் பறி கொடுத்த சிவனார், அங்கேயே குடிகொண்டு அருள்பாலிக்கத் துவங்கினார்! அந்த மலரின் பெயர்... தேவ அர்க்யவல்லி.

ஆலயம் தேடுவோம்!

நூறு முறை அரசமரத்தையும், ஆயிரம் முறை ஆலமரத்தையும், ஒரு லட்சம் முறை வன்னிமரத்தையும் பூஜித்து வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ... அதைவிட அதிகப் பலன், ஒரேயரு தேவ அர்க்யவல்லி மலரைக் கண்ணாரக் கண்டு, அதனை இறைவன் சூடிக்கொண்டதையும் தரிசித்துவிட்டால் கிடைக்குமாம்; மோட்சம் கிடைக்கும்; திருக்கயிலாயத்தில் மகா வில்வத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்; தவிர, இப்பிறவி எடுத்த பயன் பூர்த்தியாகும்; அடுத்த பிறவி என்பதே கிடையாதாம்!

இந்த மலைக்குத் தன் மனைவி லோபாமுத்திரையுடன் வந்து இறைவனை தரிசித்த அகத்திய முனிவர், ''எந்தப் பிறவியிலோ செய்த பாவத்தால் பட்சிகளாகி, தேவ அர்க்யவல்லி பூவையும், அதனைச் சூடியிருக்கும் இறைவனையும் தரிசித்ததால் பலன் கிடைத்து, அவை திருக் கயிலாயத்தை அடையும் பேறு பெற்றன; அந்தப் பூ எப்போது மலரும் என்பதைப் பட்சிகள் முன் கூட்டியே அறிந்துகொள்ளும்; எனவே, பட்சிகளின் பாஷையைப் புரிந்து உணர்வாயாக'' என்று பிருங்கி முனிவருக்கு அறிவுறுத்தினார்.

அதன்படி, பட்சிகளின் பரிபாஷையைக் கூர்ந்து கவனிக்கலானார் பிருங்கி முனிவர். அப்படித்தான் ஒருநாள், தேவ அர்க்யவல்லி பூக்கும் நாளையும், ஹோரையையும் முன் கூட்டியே உணர்ந்து, அந்த இரண்டு கிளிகளும் தங்களுக்குள் சேதி பரிமாறிக் கொண்டதை அறிந்து, ஆனந்தக் கூத்தாடினார்; இறைவனை எண்ணித் தவத்தில் ஆழ்ந்தார்.

குறிப்பிட்ட அந்த நாளில், அந்த ஹோரையில்... சுனையில் இருந்து சங்கு வடிவிலான அந்தப் புஷ்பம், மெள்ள மெள்ள மலர்ந்தது; அந்த வனம் முழுவதும் மணம் பரப்பி, ரம்மியத்தைக் கூட்டியது! கிளிகள் அமைதியாயின; தன் இறக்கைகளைச் சத்தமின்றி விரித்து, மலையில் உள்ள சுனை நோக்கிப் பறந்து வந்தன. பிருங்கி முனிவரும் மெள்ளக் கண் திறந்தார். அந்தச் சுனையில் அழகு மிளிர மிதந்துகொண்டிருந்த அந்தப் பூ, அப்படியே நகர்ந்து, அங்கே குடிகொண்டிருக்கும் லிங்கத் திருமேனியின் திருமுடியில் அமர்ந்துகொண்டது. அந்த நிமிடம்... பிருங்கி முனிவர் மற்றும் கிளிகளுக்கு திருக்காட்சி தந்தார் சிவனார். கிளிகள் திருக்கயிலாயம் நோக்கிப் பறந்தன; பிருங்கி முனிவரை ஆட்கொண்டார் ஈசன் என்கிறது ஸ்தல புராணம்.

ஆலயம் தேடுவோம்!

பாவங்கள் பல செய்து, அதன் விளைவால் இன்னலுறும் உயிர்கள், தங்களின் தவற்றை உணர்ந்து வருந்தி, இங்கே சிவனாரைச் சரணடைய... அந்த உயிர்களைத் திருத்தி அமைத்து, அருட்கடாட்சம் வழங்குகிறார்; மலையில் இருந்தபடி அருள் வதால், 'திருத்தியமலை' என இது அழைக்கப் படுகிறது. செய்த பாவங்களை உணர்ந்து, இங்கே வந்து வேண்டுவோர்க்கு இன்றைக்கும் அருள்கிறார் ஈசன்!

ஆலயம் தேடுவோம்!

எங்கே இருக்கிறது திருத்தியமலை?

திருச்சி மாவட்டத்தில் உள்ளது. சிறிய மலையின்மீது அழகாகக் கோயில் கொண் டிருக்கிறார் இறைவன். ஒரேயரு பூவைச் சூடிக்கொண்டு, உள்ளம் மகிழ்ந்தவர் அல்லவா சிவனார்?! எனவே, இங்கே குடிகொண்டிருக் கும் ஈசனுக்கு, ஸ்ரீஏகபுஷ்பப் பிரியநாதர் எனும் திருநாமம் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

ஒருமுறை, ராஜராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன் இந்தப் பகுதிக்கு வந்தபோது, இங்கேயுள்ள மலை, சுனை மற்றும் இறையருள் ஆகியவற்றை ஊர் மக்கள் தெரிவிக்க, உடனே இந்த மலைமீது கோயில் எழுப்பி, அடிக்கடி வந்து வணங்கிச் சென்றானாம். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீமாத்ரு கருணாம்பிகை. தமிழில், தாயினும் நல்லாள் எனும் திருநாமம். பக்தர்களுக்குக் கனிவும் கருணையும் கொண்டு, அருள்பாலிக்கும் அன்னை இவள்!

இத்தனை மகிமைகள் இருந்தும் பன்னெடுங்காலமாக, ஆலயத்தில் திருப்பணிகள் செய்யவில்லையே என்பது தான் ஊர்மக்களின் வேதனை. அற்புதமான ஆலயம், அழகு மிளிரக் காட்சி தராமலிருப்பதுதான் வருத்தத்துக்கு உரிய விஷயம். சில வருடங்களுக்கு முன்பு திருப்பணி துவங்கினாலும், போதிய நிதியின்மையால், பணிகள் நிறைவுறாமல் இருக்கின்றன.

திருத்தியமலையில் அருளும் ஸ்ரீஏகபுஷ்பப் பிரிய நாதரையும், ஸ்ரீதாயினும்நல்லாளையும் வணங்கி வழிபடுங்கள்; உங்கள் வாழ்க்கையையே திருத்தி வளப்படுத்துவார் இறைவன்!

வியாபாரம் சிறக்கும்...
சத்ரு பயம் நீங்கும்!

லயத்தில், ஸ்ரீதெய்வானையுடன் அழகு ததும்பும் கோலத்தில் காட்சி தருகிறார் முருகப்பெருமான். வியாபாரத்தில் நஷ்டம், எதிரிகளால் தொல்லை, மனதில் குழப்பம் எனத் தவிப்பவர்கள் சத்ரு சம்ஹார யாகம் செய்து, முருகப்பெருமானை தரிசித்தால், தொழிலில் விருத்தி ஏற்படும்; வியாபாரத்தில் லாபம் உயரும்; எதிரிகளின் தொல்லை நீங்கப்பெறுவர்; மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்!

ஷன்ம நட்சத்திரத்தில் வணங்கினால்..!

பாவங்கள் அனைத்தையும் நீக்கி, நம்மைத் திருத்தி அமைத்து, நலமுடன் வாழ வைக்கும் தலம் இது! 'தற்கொலை பண்ணிக்கிட்டுச் செத்துடலாம்போல இருக்கு' என்று சொல்வதுகூட ஒருவகையில் பாவம்தானாம்! இப்படிப் பேசுகிற அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளானவர்கள், மனதில் நிம்மதியின்றித் தவிப்பவர்கள் பௌர்ணமி மற்றும் ஜன்ம நட்சத்திர நாளில் இங்கு வந்து, திரிசதி அர்ச்சனை செய்து சிவனாரைப் பிரார்த்திக்க... நலம் பெறுவர் என்பது ஐதீகம்! திருமண தோஷம் உள்ள பெண்கள், ஆலயத் துக்கு வந்து கோலமிட்டு வழிபட, விரைவில் மண மாலை நிச்சயம்!

வில்வமும் துளசியும்!

லிங்கத் திருமேனியராக, சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஏகபுஷ்பநாதருக்கு, திங்கட்கிழமைதோறும் லிங்கத்துக்கு வில்வமும் ஆவுடையாருக்கு துளசியும் கொண்டு அர்ச்சனை செய்வது வழக்கம். இந்த நாளில், வில்வமும் துளசியும் கொண்டு சிவனாரை வழிபட... நினைத்த காரியம் நிறைவேறும்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவர் என்பது நம்பிக்கை!

எங்கே இருக்கிறது?

திருச்சி மாவட்டத்தில் உள்ளது திருத்தியமலை. திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவு. திருமண தோஷம், எம பயம் நீக்குவதுடன், நீண்ட ஆயுளை வழங்கும் திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி செல்வதற்கு நிறையப் பேருந்துகள் உள்ளன. ஆனால், திருத்தியமலை வழியாக முசிறி செல்லும் பஸ்கள், மணிக்கு ஒருமுறை இயங்குகின்றன. இந்தப் பேருந்துகளில் ஏறினால், திருத்தியமலையை அடையலாம்.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 8 முதல் 12 மணி வரை;
மாலை 5 முதல் 7 மணி வரை.

- வி. ராம்ஜி, படங்கள் கே. குணசீலன்