ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

பரம்பொருளின் மாமனார்!

பரம்பொருளின் மாமனார்!


சிறப்பு கட்டுரை
பெரியாழ்வார் பெருமை!
பரம்பொருளின் மாமனார்!

விஷ்ணுசித்தருக்குப் பெருமாள்தான் உலகமே! தன் பேச்சு, செயல், சிந்தனை எல்லாவற்றிலும் பெருமாளைப் பற்றியபடியே வாழ்ந்து வந்தார். தனக்கென எதுவும் வேண்டிக்கொள்ளாமல், சர்வமும் பரம்பொருளே என இறைபக்தியில் திளைத்திருந்தார் விஷ்ணுசித்தர்.

'இப்படியரு மகன் பிறக்க, எந்த ஜன்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ...' எனத் தந்தையார் முகுந்த பட்டரும், தாயார் பத்மாவதியும் பூரித்தனர்.

குரோதன வருடம், ஆனி மாத ஞாயிற்றுக்கிழமையில், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த விஷ்ணுசித்தர், இளம் வயது முதற்கொண்டே, பெருமாளின்மீது அளவற்ற பக்தியுடன் வளர்ந்தார். வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

ஏழாம் நூற்றாண்டு... மதுரையை அப்போது ஆட்சி செய்த வல்லாரதேவ மன்னனின் திருச்சபையில் ஒரு சர்ச்சை... அப்போது, ''நாராயணனே சகலமும்! அவரே பரம்பொருள்'' என்று வேத விளக்கங்களையும், சாஸ்திர நுணுக்கங்களையும் சொல்லி அசத்தி, அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார் விஷ்ணுசித்தர். இவரது விளக்கத்தைக் கேட்டு நெகிழ்ந்த மன்னன், இவருக்குப் பணமுடிப்பு வழங்கிக் கௌரவித்தான்.

அதுமட்டுமா?! விஷ்ணுசித்தரை மரியாதை செய்யும் விதமாக, அவரை யானையின்மீது அமரவைத்து, மதுரை வீதிகளில் வீதியுலா வரச் செய்தான். இந்த தருணத்தில் கருட வாகனராக அவருக்குக் காட்சி தந்தார் திருமால். மெய்சிலிர்த்த விஷ்ணுசித்தர், திருப்பல்லாண்டு பாடி, பெருமாளைப் போற்றினார்.

தானும் தன் மனைவி மக்களும் நன்றாக வாழவேண்டும் என எண்ணாமல், இறைவன் நீடூழி வாழவேண்டும் என திருப்பல்லாண்டு பாடி மகிழ்ந்த விஷ்ணுசித்தருக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது... பெரியாழ்வார். ஆழ்வார்களில் பெரியவர் இவர் என்பதால், பெரியாழ்வார் எனும் திருநாமம் வந்ததாம்!

பரம்பொருளின் மாமனார்!

மன்னன் தந்த பணமுடிப்பைக் கொண்டு, வீட்டாருக்கு ஏதேனும் செய்து மகிழ்ந்தாரா?

அதுதான் இல்லை. தன் மனத்திலும் இந்த உலகிலும் நிறைந்திருக்கும் ஸ்ரீமந் நாராயணனின் ஆலயத்துக்குக் கோபுரம் எழுப்பி அழகுபார்த்தார். அதுவும் எப்படி? 196 அடி உயரத்தில், 11 கலசங்களைத் தாங்கியபடி 11 நிலைகள் கொண்டு, உயர்ந்து நிற்கும் கோபுரத்தை இன்றைக்கும் காணலாம். அந்தத் திருத்தலம், ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலம்!

பரம்பொருளின் மாமனார்!

ஸ்ரீவில்லிபுத்தூரானுக்கு மாலையணிவித்து அழகு பார்ப்பதற்காகவே நந்தவனம் அமைத்தார் பெரியாழ்வார். அதில் மல்லிகை, செண்பகம், செங்கழுநீர், இருவாச்சி, மந்தாரை, மனோரஞ்சிதம் என 64 வகையான மலர்களைப் பறித்து, அவற்றைத் தன் கையாலேயே தொடுத்து, மாலையாக்கி, பெருமாளுக்குச் சூட்டி, பூமாலையாலும் பாமாலையாலும் பக்தி மணம் பரப்பிவந்தார் பெரியாழ்வார்.

'இப்படியரு உத்தமமான பக்தியுடன் வாழ்பவருக்கு மகளாகப் பிறக்கவேண்டும்' என ஆசைப்பட்டாள் ஸ்ரீமகாலட்சுமித் தாயார். ஆம்! இறைவியே, பெரியாழ்வாருக்கு மகளாகப் பிறக்க ஆவல் கொண்டாள் எனில், இவரின் விஷ்ணு பக்தி எத்தகைய மேன்மை உடையது என்பதை உணரலாம்!

திருமகள் தன் எண்ணத்தை நிறைவேற்ற நாள் குறித்தாள். அதன்படி நள வருடம், ஆடி மாதத்தின் பூர நட்சத்திரத்தில், செவ்வாய்க்கிழமை அன்று வழக்கம்போல் பெருமாளுக்குச் சூட்டுவதற்காகப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்தார் பெரியாழ்வார். 'என்னடா இது... இன்றைக்கு நந்தவனத்தை அதிக நறுமணம் சூழ்ந்திருப்பது போல் தெரிகிறதே...' என எண்ணிக்கொண்டே துளசிச் செடிக்கு அருகில் வந்தார். அங்கே... நூறுகோடித் தாமரைப் பூவின் அழகில், ஐந்து வயதுச் சிறுமியாக திருக்காட்சி தந்தாள் ஸ்ரீமகாலட்சுமி!

பரம்பொருளின் மாமனார்!

பரவசமும் பதற்றமும் ஒன்றுசேர, ''யாரம்மா நீ?'' என்று பெரியாழ்வார் கேட்க, அவள் நிதானமாக, ''என்னுடைய தாயார் துளசி; தந்தையார் தாங்கள்தான்!'' என்றாள். இந்த பதிலால் குழம்பித் தவித்த பெரியாழ்வார், அவளை அனந்தசயனத்தில் அருள்பாலிக்கும் வடபத்திரசாயி சந்நிதிக்கு அழைத்துச் சென்று, ''இந்தக் குழந்தை யாரென்று தெரியவில்லையே! நான் என்ன செய்வேன்?'' என்று பெருமாளிடம் கதறினார். அப்போது, 'இன்று முதல் இவள் உன்னுடைய குழந்தை. இவளுக்குக் கோதை எனத் திருநாமம் சூட்டி, வளர்த்து வா!' என அசரீரி கேட்டது. இதில் நெக்குருகிப்போன பெரியாழ்வார், குழந்தையை அள்ளி எடுத்து, உச்சிமுகர்ந்து, கோதை எனத் திருநாமம் சூட்டி, சீராட்டி வளர்த்து வந்தார்.

தந்தையைப் போலவே மகள் கோதையும் பெருமாளின் மீது மாறாத பக்தி கொண்டிருந்தாள்; ஒருகட்டத்தில்... பரம்பொருளையே தன்னுடைய மணாளனாக மனதுள் வரித்துக்கொண்டாள். பெருமாளுக்கு அணிவிக்கவேண்டிய மாலையை தான் சூடிக்கொண்டு, 'சூடிக் கொடுத்த சுடர்க் கொடி' என்றும் பெயர் பெற்று, ஆண்டாள் எனும் திருநாமத்துடன் ஆலயங்களில் தனிச்சந்நிதியில் இன்றளவும் காட்சி தருகிறாள் என்பது தெரியும்தானே நமக்கு!

பரம்பொருளின் மாமனார்!

ஆக, இறைவியை தன் மகளாகப் பேணி வளர்க்கும் பாக்கியம் பெற்றவர் பெரியாழ்வார். இதனால்தான் இவர், 'அந்தண குலத்தின் திலகம்' எனப் போற்றப்படுகிறார். 473 பாசுரங்களை உளம் மகிழப் பாடி, இறைவன் திருவடியை அடைந்தார், பெரியாழ்வார்!

இவரின் பாசுரங்கள், 'பெரியாழ்வார் திருமொழி' எனப்படுகின்றன. நாலாயிர திவ்விய பிரபந்தத்தின் துவக்கப் பகுதியிலேயே இவரது பாசுரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தவிர, இவர் பாடிய திருப்பல்லாண்டு, திருமாலின் காப்புச் செய்யுளாக, முதல் பாடலாக அமைக்கப் பட்டுள்ளதும் சிறப்பு!

இங்கே... ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில், கணவர் ஸ்ரீரங்கமன்னாருடனும், தந்தையார் ஸ்ரீபெரியாழ்வாருடனும் சேர்ந்து அருள்பாலிக்கிறாள் ஸ்ரீஆண்டாள். விரத நாட்கள் தவிர, மற்ற நாட்களிலெல்லாம் எம்பெருமான் மாப்பிள்ளைக் கோலத்தில் திருக்காட்சி தந்தருளும் ஒப்பற்ற திருத்தலம் இது. பின்னே... மாமனாரின் ஊராயிற்றே?!

பெரியாழ்வாரின் அவதார ஸ்தலமான ஸ்ரீவில்லி புத்தூரில், ஆண்டாள் கோயிலில், வருடந்தோறும் பெரியாழ்வார் ஜயந்தி விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வருகிற வைகாசி 30-ஆம் தேதி (ஜூன் 13-ஆம் தேதி), கொடியேற்றத்துடன் துவங்கும் பெரியாழ்வார் ஜயந்தி விழா, 11 நாள் விழாவாகக் கோலாகலமாக நடைபெறுகிறது. விழா நாட்களில், தினமும் மாலைவேளையில், பல்வேறு வாகனங்களிலும் பெரியாழ்வார் திருவீதியுலா வரும் அழகே அழகு! ஆனி மாதம் 22-ஆம் தேதி, ஜயந்தித் திருநாளன்று தேர்த்திருவிழா. அன்றைய நாளில், 61 வகை மூலிகைகளால் (சர்வரோக நிவாரணி மூலிகை என்பர்) 21 வகை அபிஷேகங்கள் நடைபெறும்.

அத்துடன், பெரியாழ்வாரின் வம்சாவளியான (224-ஆம் தலைமுறை) வேதபிரான் பட்டரால் ஸ்ரீவில்லிபுத்தூரின் வரலாறு மற்றும் பெரியாழ்வாரின் பாசுரங்கள் ஆகியன பாடப்படுமாம்!

- இ. கார்த்திகேயன்
படங்கள் என்.ஜி. மணிகண்டன்