மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்! - 15

தசாவதார திருத்தலங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
தசாவதார திருத்தலங்கள்! ( தசாவதார திருத்தலங்கள்! )

தசாவதாரம் திருத்தலங்கள்


தொடர்கள்
தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதார திருத்தலங்கள்! - 15
தசாவதார திருத்தலங்கள்! - 15

கவான் ஸ்ரீமந் நாராயணனைச் சரணடைந்தோருக்கு ஒருபோதும் துன்பம் இல்லை.கஜேந்திர மோட்சம் நிகழ்ந்ததும், அதர்மம் நிரம்பிய கௌரவ சபையில் பாஞ்சாலி ரட்சிக்கப்பட்டதும் சரணாகதியால்தானே?!

புராணங்களும் ஞானநூல்கள் பலவும்... சரணாகதியின் ஐந்து அங்கங்கள் குறித்து விரிவாக விளக்குகின்றன.

1 எம்பெருமானின் உயர்வை உணர்ந்து ஓதுதல்; 2 பெருமாளை நினைக்கவும், அடையவும் தடையாக இருப்பவற்றைப் புறக்கணித்தல்; 3 பரம்பொருளே ரட்சிக்கவல்லவர் என்பதை உணர்தல்; 4 வைகுண்டபதியைத் தவிர, ஆபத்பாந்தவர் வேறு எவரும் இல்லை என்று பூரண நம்பிக்கை கொள்ளுதல். இந்த நான்கும் கைகூடி விட்டால், ஆயிரமாயிரம் பூஜைகள் செய்தாலும், நூற்றுக்கணக்கான வேள்விகள் புரிந்தாலும் அவை பகவானின் கருணைக் கடாட்சத்துக்கு நிகராகாது என்ற புரிதல் வந்து விடும். இதுவே, ஐந்தாவது அங்கம்!

இந்த ஐந்தும் சங்கமிக்கும்போது, 'உயிரும் உடலும் அவனுடையது' என்று நம்மையே சமர்ப்பிக்க உள்ளம் ஆவல் கொள்ளும்.

தேவர்களின் நிலையும் இதுதான்! 'அனைத்துக்கும் அவனே காரணம்; பெறு வதும் அவனே, கொடுப்பதும் அவனே! உயர்வு- தாழ்வு அனைத்தும் அவனையே சாரும்' என்று வைகுண்டநாதனை அவர்கள் சரணடைந்ததால், அமிர்தம் எனும் பரமானந்தத்தைத் தந்து அருள்புரிந்தது அந்தப் பரம்பொருள்.

தேவர்களுக்கு மட்டும்தானா?!

'என்னைச் சரணடைந்தோருக்கு என்றென்றும் சந்தோஷமே' என்பதை மெய்ப்பிக்கும் வகையில், கலியுக மக்களுக் கும் அருள... ஸ்ரீகூர்மம் தலத்தில் கோயில் கொண்டு காத்திருக்கிறார் ஸ்ரீகூர்மநாதன்.

தசாவதார திருத்தலங்கள்! - 15

ஸ்ரீகூர்மம்- அவதாரத்தின் பெயரிலேயே திகழும் அற்புதத் தலம். கருவறையில் ஆமை (ஸ்ரீகூர்ம) வடிவிலேயே இறைவன் அருள் பாலிக்கும் புண்ணிய க்ஷேத்திரம்!

ஆந்திர மாநிலம்- ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில்... வங்கக் கடற்கரையில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீகூர்மம். விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 130 கி.மீ. தூரம் (சென்னையில் இருந்து விசாகப் பட்டினம் சென்று, அங்கிருந்து பேருந்துகள் அல்லது மீண்டும் ரயில் மார்க்கமாகவே ஸ்ரீகாகுளத்தை அடையலாம். ஸ்ரீகூர்மம் அருகில் சோமேஸ்வரர் ஆலயம், முகலிங் கேஸ்வரர், பீமேஸ்வரர் ஆகிய சிவத் தலங்களும் அமைந்திருப்பதால் அவற்றையும் தரிசித்து வரலாம்).

எழிலார்ந்த கிராமத்தின் நடுநாயகமாகத் திகழ்கிறது கோயில். 'பரம்பொருளே சரணம்... பரந்தாமா சரணம்' என கூர்மநாதரின் பாதாரவிந்தங்களில் சரணடையும் உள்ளத் துடிப்புடன் உள்ளே நுழைகிறோம்.

நீர் ததும்பக் காட்சி தருகிறது ஸ்வேத புஷ்கரணி. கோடி புண்ணியம் தரும் அற்புத தீர்த்தம் இது. ஆலயக் கட்டுமானம், மத்திய காலச் சிற்பக் கலையுடன் திகழ்கிறது. அழகிய மண்டபங்களையும், தூண் சிற்பங்களையும் ரசித்தபடி வலம் வரும் போதே நமக்குள் ஒரு கேள்வி...

ஸ்ரீகூர்மநாதனுக்கு இப்படியோர் அழகான கோயிலைக் கட்டும் பேறு எவருக்குக் கிடைத்திருக்கும்? இதற்கு, கோயிலின் கல்வெட்டு சாசனங்களில் பதில் கிடைக்கிறது.

முற்காலத்தில் இந்தப் பகுதி... வைதரணி நதிக்கும் வராக நதிக்கும் இடையே பரந்துவிரிந்திருந்த கலிங்க தேசத்துக்கு உட்பட்டிருந்ததாம். இந்தப் பகுதியை ஆட்சி செய்த கீழைக் கங்க அரசர்கள் பலரும் சிவ வழிபாட்டில் திளைத்திருந்தனர் என்றும் அவர்களில் ஒருவன் இந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்தான் என்றும் கல்வெட்டு சாசனங்கள் தெரிவிக்கின்றன (வியப்பான விஷயம்தான்). ஆமாம்! கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோயில், அனந்தவர்மன் என்ற கங்க அரசனால் திருப்பணி செய்யப்பட்டதாம். மேலும், கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள் குறித்தும் நிறைய சாசனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் கங்க அரசர்கள் பலரது வரலாற்றையும் அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள்.

மன்னர்கள் மட்டுமின்றி, மகான்களாலும் சிறப்பிக்கப் பட்ட ஆலயம் இது. மத்வாச்சார்யரின் சீடராகிய ஸ்ரீநரஹரி தீர்த்தர், இங்கு சிறிது காலம் தங்கியிருந்து ஆன்மிகப் பணியாற்றியிருக்கிறாராம். நம் உடையவர் ஸ்ரீராமானுஜரைப்போல கலிங்க தேசத்தில் பக்திப் பணியாற்றியவர் இவர். அடடா... ஸ்ரீராமானுஜர் என்றதும்தான் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

ஆமாம்... இந்தக் கோயிலில், ஸ்ரீராமானுஜரும் அருட் பணியாற்றியிருக்கிறார் என்று செவிவழித் தகவல்கள் உண்டு. ஸ்ரீஜெகந்நாதப் பெருமாளை தரிசிக்க பூரிக்குச் சென்ற ஸ்ரீராமானுஜர், அங்கு சிலகாலம் தங்கியிருந்தாராம். அங்குள்ளவர்கள், தங்கள் மனதுக்குத் தோன்றியதுபோல் வழிபாடுகள் நடத்திக்கொண்டிருந்தனராம். ஸ்ரீராமானுஜர், வழிபாடுகளை நெறிப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டாராம்.

நம்பிக்கை அடிப்படையிலான அந்த வழிபாடுகள் அப்படியே தொடரட்டும் என்று திருவுளம் கொண்ட, பூரி ஜகந்நாதர், கருடாழ்வாரை ஏவி, ஸ்ரீராமானுஜரை ஸ்ரீகூர்மம் தலத்தில் சேர்ப்பித்ததாகச் சொல்வர்.

இடைப்பட்ட காலத்தில் சைவத் தலமாக விளங்கிய இந்தக் கோயிலில் மீண்டும் வைணவத்தை ஸ்தாபித்ததும் ஸ்ரீராமானுஜரே என்றும், இங்கிருந்தே அவர் சிம்மாசலத்துக்குச் சென்றார் என்றும் கூட ஒரு கருத்து உண்டு. ஆனால், இந்தத் தகவல்களுக்குச் சரித்திரபூர்வமான ஆதாரங்கள் இல்லை!

ஆலயம் பற்றிய சுவாரஸ்யமான பல தகவல்கள் மனதை நிறைக்க... ஸ்ரீகூர்ம நாதரை தரிசிக்க விரைகிறோம்.

பிராகாரத்தில்... சீதா, லட்சுமணருடன் ஸ்ரீராமன் தரிசனம் தரும் பெரிய ஸ்தூபம் ஒன்று உள்ளது. தொடர்ந்து ஸ்ரீகருட சந்நிதி, கொடிமரம். ஸ்வாமியின் சந்நிதிக்கு இடப்புறம் ஸ்ரீலட்சுமிதேவி தரிசனம்!

அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி அருள்கிறாள் ஸ்ரீகூர்மநாயகி! நமது வேண்டுதலை செவிமடுத்துத் தன் நாயக னிடம் நமக்காகப் பரிந்துரைக்கும் ஸ்ரீலட்சுமி பிராட்டி!

'தாயே... வஞ்சம் இல்லா நெஞ்சமும், துன்பம் இல்லா வாழ்வும் தா..!' என வணங்கி நிமிர்ந்தால்... ஆயிரம் இதழ் கொண்ட தாமரையாய் மலர்ந்திருக்கும் அந்த தேவியின் திருமுகத்தில்... 'இப்போதே தந்தோம்' என்பதுபோல் இதழோரப் புன்னகை! அற்புத தரிசனம்!

தசாவதார திருத்தலங்கள்! - 15

ஸ்வாமி சந்நிதி! திருமுகமும், முதுகு ஓடுமாக... ஆமை வடிவிலேயே காட்சி தருகிறார் ஸ்ரீகூர்மநாதர். தரிசித்த நொடியிலேயே பாவம் தீர்க்கும் திருமூர்த்தத்தை, அலை கடலில் ஆமையாக அவதரித்து அமிர்தம் தந்தருளிய அற்புத இறையுருவை மெய்சிலிர்க்கத் தரிசிக்கிறோம்.

கடினமான காரியங்களில் இறங்குமுன் இவரை மனதில் தியானித்து வழிபட்டுத் துவங்க... அந்தக் காரியம் எளிதில் நிறைவேறும் என்பது நம்பிக்கை! ஸ்வாமியின் அருகிலேயே உற்ஸவர் ஸ்ரீராமன், சீதாதேவி, அனுமன் மற்றும் லட்சுமணனுடன் அருள்பாலிக்கிறார். வணங்கி வழிபடுகிறோம்.

வைகாசி மாதம் ஸ்ரீகூர்ம ஜயந்தி, அதே மாதம் பௌர்ணமி தினத்தில் திருக்கல்யாணம், கார்த்திகையில்- சக்ரநாத உத்ஸவம், ஆண்டாள் திருக்கல்யாணம் என்று விழாக்கோலம் காணுமாம் இந்தத் திருக்கோயில்.

அழகுச் சிற்பங்களையும் தெய்வச் சந்நிதிகளையும் தரிசித்த திருப்தியும், ஸ்ரீகூர்மநாதரை வழிபட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சியும் மனதை நிறைக்க...

செருமிக வாளெயிற்ற அரவொன்று சுற்றி
திசை மண்ணும் விண்ணுமுடனே
வெருவர வெள்ளை வெள்ளமுழுதும் குழம்ப
விமையோர்கள் நின்று கடைய
பருவரை யன்று நின்று முதுகிற்
பரந்து சுழலக் கிடந்துதுயிலும்
அருவரை யன்ன தன்மை யடல்
ஆமையான திருமால் நமக்கோரரணே

- என்ற திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தை அடியற்றி, ஸ்ரீகூர்மநாதரை உள்ளத்தால் வணங்கி, இந்தத் தலத்தில் இருந்து விடைபெறுகிறோம்.

அடுத்து, ஸ்ரீகூர்மநாயகன் அருள்புரியும் மற்றொரு தலமான கூர்ந்தான்விளை எனும் தென்தமிழ்நாட்டுத் திருத்தலம் நமக்காகக் காத்திருக்கிறது!

- அவதாரம் தொடரும்...
படம் எம்.என். ஸ்ரீநிவாஸன்