ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

புனித பூமியில் மனித தெய்வங்கள்

புனித பூமியில் மனித தெய்வங்கள்


தொடர்கள்
உலகம் போற்றும் ஊனக்கண் உத்தமர்
புனித பூமியில் மனித தெய்வங்கள்
புனித பூமியில் மனித தெய்வங்கள்
புனித பூமியில் மனித தெய்வங்கள்

சுவாமி விவேகானந்தர்மீது, செல்வந்தர் ஒருவர் அளவற்ற மதிப்பு கொண்டிருந்தார். ஒருநாள், அவரின் வேண்டுகோளை ஏற்று, அவரது வீட்டுக்கு உணவருந்தச் சென்றார் விவேகானந்தர். விருந்து முடிந்ததும், நடனக் கச்சேரி! அதைக் கேட்டு திடுக்கிட்டார் விவேகானந்தர்.

துறவிகள், இதுபோன்ற களியாட்டங்களில் பங்கு பெறுவதும், நடனப்பெண்ணைப் பார்ப்பதும் சரியல்லவே என்று தயங்கினார். ஆனாலும், தர்ம சிந்தனைமிக்க செல்வந்தரின் மனம் புண்படக்கூடாது என எண்ணி, நடன நிகழ்ச்சியைக் காணச் சம்மதித்தார்.

வாத்தியங்கள் முழங்கின; இனிய குரலில் பாடியபடி நடனமாடினாள் நாட்டியப் பெண். அவளது பாடலில் ஆழமான கருத்து பொதிந்திருந்தது. 'கருமான் ஒருவனிடம் இரும்புத் தகடு ஒன்று இருந்தது. இரண்டு வெவ்வேறு பொருட்கள் செய்வதற்காக, அந்த இரும்புத் தகட்டை இரண்டு துண்டுகளாக்கினான் அவன். அவற்றில் ஒன்று கூரிய கத்தியாக மாறி, கசாப்புக் கடையில் உயிரைக் கொல்லும் தொழிலில் ஈடுபட்டது. மற்றொன்று, கோயில் கொடிமரம் ஒன்றின் அடிப்பட்டையாக மாறியது. மக்கள் அனைவரும் கொடிமரத்தில் இருந்த பகுதியைத் தொட்டு வணங்கினர். இரும்பு ஒன்றுதான். ஆனால், அதன் இரு வேறு பகுதிகள் விதிவசத்தாலும், அவை இருக்கின்ற சூழலாலும் வேறு நிலைகளை அடைந்தன. இதில், இரும்பின் குற்றம் ஏதேனும் உண்டா?' - அந்தப் பாடலின் கருத்து இதுதான்.

இசை, நடனப் பெண்ணின் குரலில் இருந்த குழைவு மற்றும் நடனம் ஆகியவற்றைக் கடந்து, பாடலினுள் பொதிந்துகிடந்த கருத்தைக் கேட்டதும், விவேகானந்தரின் இதயம் இளகியது. 'உண்மைதான்! அடிப்படையில் அனைவரும் புனிதமானவர்களே! பிழைப்புக்காகப் பொது மேடையில் ஆடும் பெண், குடும்பப் பெண்ணைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தவள் இல்லை. வாழ்க்கையின் நிர்பந்தங்களும் சூழலுமே உயர்வு- தாழ்வு போன்ற போலி எண்ணங்களை உருவாக்குகின்றன. கருத்துள்ள கவிதை இது!' என உருகினார் விவேகானந்தர்.

இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்கள்; அனைத்திலும் வாழ்க்கையைச் சொல்லும் அரிய கருத்துக்கள்; பக்தியையும் நல்லறிவையும் மக்களிடையே பரப்புவதை லட்சியமாகக் கொண்ட அத்தகைய பாடல்களை எழுதியவர்... சூர்தாஸ்.

மதுராவுக்கு அருகில் உள்ள ப்ரஜ் பூமியில், வறுமை சூழ்ந்த அந்தணக் குடும்பத்தில், கி.பி. 1478-ஆம் வருடம் பிறந்தார் சூர்தாஸ். பிறவியிலேயே அவருக்குப் பார்வை இல்லை. பார்வையற்ற அந்தக் குழந்தையைக் குடும்பத்தார் பேணி வளர்க்கவில்லை என்பது இன்னொரு சோகம். பிஞ்சுப் பிராயம் முதலே, அவரது ஊனக்கண்களைக் குறித்துப் பரிகசித்து, அவரை உதாசீனப்படுத் துவதே அவர்களின் வழக்கமாகிப் போனது.

புனித பூமியில் மனித தெய்வங்கள்

சூர்தாஸூக்கு இளம் வயதிலேயே வாழ்வின் சுகங்கள்மீது பற்றற்றுப் போக, அந்த வேதனையான அனுபவங்களே காரணமாக இருந்தன. அதுமட்டுமா?! அவரது சிந்தனை முழுவதும் இறைவனின் பக்கம் திரும்பியது.

அப்போது சூர்தாஸூக்கு ஆறு வயது. ஒருநாள், வீட்டு வாசலில் நின்றிருந்த போது, எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்து, செவிகளில் விழுந்த இனிமையான பாடல், அவரை என்னவோ செய்தது. மெள்ள மெள்ளப் பாடலின் சத்தம், மிக அருகில் கேட்டது. பக்திப் பாடலைப் பாடியபடி, சிலர் தெருவில் நடந்து செல்வதை உணர்ந் தார் சூர்தாஸ். அந்தப் பாடல் தந்த கிறக் கத்தில், ஒரு கணம்கூட யோசிக்காமல், சத்தம் வந்த திசையைக்கொண்டே அவர் களைப் பின்தொடர்ந்தார். அந்த நிமிடம் முதல், பரந்த உலகையே இருப்பிடமாகக்கொண்டு வாழத் துவங்கினார்.

கண்ணனின் மேல் ஆழ்ந்த பக்தி அவருக்கு. கூடவே, இனிய குரலும், எளிய சொற்களால் கவிதைகள் புனைந்து, பாடும் திறனும் கைகோத்தன. அவரது பாடல்களில் ஆழ்ந்த பக்தியும், வாழ்க்கைத் தத்துவமும் இடம்பெற்றன. பாடிக்கொண்டே, கால்போன போக்கில் பயணப்பட்டார். கிடைத்ததைச் சாப் பிட்டார்; நினைத்த இடத்தில் படுத்துறங்கினார். இப்படி, இளம் வயதிலேயே துறவு வாழ்க்கைக்குள் மூழ்கலானார். சூர் தாஸின் பாடல்களைக் கேட்டு, மக்கள் மெய்சிலிர்த்தனர்!

தனது 18-வது வயதில், யமுனை நதிக்கரையில் கௌகாட் எனும் இடத்தில், வல்லபாச்சார்யர் என்ற மகானைச் சந்தித்து, வணங்கிப் பணிந்தார் சூர்தாஸ். இவரது முகத்தில் இருந்த தேஜஸ், பேச்சில் இருந்த ஆன்மிக முதிர்ச்சி ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட வல்லபாச்சார்யர், இவரைத் தம் சீடராக்கிக் கொண்டார். புராணங்கள், பாகவதம், அத்வைதம் ஆகியவற்றை சூர்தாஸூக்குப் போதித்தார்.

புனித பூமியில் மனித தெய்வங்கள்

குருவின் போதனையால் சூர்தாஸரின் மனம் மேலும் பக்குவப்பட்டது. கிருஷ்ண பக்தி எனும் இணையற்ற சக்தி, அவரின் மனக் கண்களைத் திறந்தது; அவருள் ஞானதீபம் தகதகவென எரியத் துவங்கியது.

ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு- வளர்ப்பு, ஆயர்பாடியில் அவர் செய்த லீலைகள், கோபிகைகளுடன் நடத்திய ராசக் கிரீடை ஆகியவை குறித்த தேனினும் இனிய பாடல்கள், அவரின் நாவில் இருந்து பிரவாகமென வெளிவந்தன. ராதாகிருஷ்ணனின் தெய்விகக் காத லின் அழகில் தன்னையே பறிகொடுத்த சூர்தாஸ், அவற்றை மெய்யுருகும் பாடல்களாக்கித் தந்தார். கேட்டவர்கள் கிருஷ்ண பக்தியில் திளைத்தனர்.

'சூர்சாகர்' என்ற பெயரில், அவர் பாடிய ஒரு லட்சம் கவிதைகளில், சுமார் 8,000 பாடல்கள் மட்டுமே நமக் குக் கிடைத்துள்ளன. இந்தக் கவிதை களில் வெளிப்படும் பக்தி மற்றும் இலக்கியச் சுவை, கல் மனதையும் கரைக்க வல்லது! தவிர, 'சூர் சாராவளி', 'சாகித்ய லஹரி' ஆகிய பக்தி இலக் கியங்களையும் படைத்தார் சூர்தாஸ். அவரது புகழ் தேசமெங்கும் பரவியது. பகவான் கிருஷ்ணரின் உயிர்த் தோழ ரான அக்ரூரர் என்பவரின் அவதாரமே சூர்தாஸ் எனப் போற்றினர் மக்கள்.

இவரின் பெருமைகளை அறிந்த மொகலாய மன்னர் அக்பர் மற்றும் இசைமேதை தான்சேன் ஆகியோர், சூர்தாஸை நேரில் அழைத்து, இவருடைய பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தனர். 'அயினி அக்பரி', 'முன்ஷியாத் இ அபுல் பாஸல்' ஆகிய மொகலாயர்களின் நூல்களில், சூர்தாஸின் வாழ்க்கைக் குறிப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அதேபோல், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிபில், சூர்தாஸின் கவிதைகள் பலவும் இடம் பெற்றுள்ளன.

கிருஷ்ண பக்தியில் தன்னை அர்ப் பணித்து, அவரது புகழ் பாடுவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த சூர்தாஸ், 1581-ஆம் வருடம், கண்ணனின் திருவடியை அடைந்தார்.

இசை, கவிதை, பக்தி ஆகிய மூன்றும் உள்ளவரைக்கும், சூர்தாஸின் புகழும் நிலைத்திருக்கும்!

- (தரிசிப்போம்)