ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி


தொடர்கள்
ஸ்ரீரமண ஆனந்தம்
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

ந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துகொள்வதற்கு, ஒருவருக்கு இன்னொருவருடைய உதவி தேவைப்படுகிறது. அப்படி ஒரு விஷயத்தைத் தெரிவிக்க வந்தவருக்கு 'ஆச்சார்யன்' என்றும், 'குரு' என்றும் பெயர். வித்தையைக் கற்றுக்கொடுப்பவர் ஆச்சார்யர் என்றும், ஞானத்தை உணர்த்துபவர் குரு என்றும் சொல்லப்படுகிறார். இதற்குச் சொல்லிக்கொடுக்கின்ற நபரின் அண்மை தேவைப் படுவதால், பலருக்குத் தந்தையே ஆச்சார்யனாகவும், குருவாகவும் விளங்குகிறார்.

ஆனால், வேங்கடராமனுக்குத் தந்தை இல்லை. அவர் இழப்பினாலேயே குடும்பம் கலைந்து, வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்தது. பதினாறு வயது இளைஞனுக்கு மூத்த சகோதரனே வழிகாட்டியாக இருக்கவேண்டுமென்ற நிர்பந்தம் ஏற்பட்டது. தம்பியை நல்லவிதமாகப் படிக்க வைத்து, உத்தியோகத்தில் அமர்த்தும் பொறுப்பு தனக்கு இருக்கிறது என்று வேங்கடராமனின் அண்ணா நாகசாமிக்கு திடமாகத் தோன்றியது. எனவே, வேங்கடராமனின் நடவடிக்கைகள் அவரால் கவனிக்கப்பட்டன; அடிக்கடி சுட்டிக்காட்டிச் சீர்திருத்தப்பட்டன. இது வேங்கடராமனுக்கு இடைஞ்சலாக இருந்தது. வழிகாட்ட எவரும் இல்லை; ஆனால், கண்டிக்கத் தமையன் உண்டு என்கிற நிலை, யோசித்துப் பார்த்தால் மிகக் கடினமானது.

சாதாரண பாடப் புத்தக சந்தேகங்களை எவரிடத்தேனும் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், மரணம் பற்றிய கேள்வியையும், மரணம் பற்றிய விசாரம் தனக்குள் விளைவித்த அதிசயத்தையும் எங்கே போய், யாரிடம் பகிர்ந்துகொள்வது. அப்படிப் பகிர்ந்துகொண்டால், கேலி செய்யாமல் விடுவார்களா. அப்படிக் கேலி செய்து, அந்த கேலி தனக்கும் தொற்றிக்கொண்டால், தனக்குத் தெரிந்த ஓர் அற்புதத்தைத் தானே தன்னையறியாமல் இழிவுபடுத்தி விட்டால் என்ன ஆவது என்று வேங்கடராமன் பயந்தான்; எனவே, தனது அனுபவத்தை எவரிடமும் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

மனித மனம் என்பது, எப்போதும் வெளிப்புறம் வேடிக்கை பார்ப்பது; அப்படிப் பார்த்ததை இன்னும் பெரிதாக உள்ளே கற்பனை செய்துகொள்வது. மனிதருக்குள் உலக விவகாரங்கள் இப்படித்தான் சிக்கிக் கொண்டு விதம்விதமாக பூதம் காட்டுகின்றன. மனம் கடும் சிக்கலுக்கு ஆளாகிறது.

ஸ்ரீரமண மகரிஷி

வேங்கடராமனின் பார்வை வெளியில் போகாது உள்ளுக்குள்ளே தங்கிவிட்டது. அந்த அனுபவத்துக்குப் பிறகு, மரணம் பற்றிச் சிந்தித்து, எது இறக்கிறது என்ற கேள்வி கேட்டு, எது இறக்கவில்லையோ அதை தரிசனம் செய்த பிறகு, அதை நன்றாக உணர்ந்து அனுபவித்த பிறகு... மனம் வெளியே போய் எந்த விவகாரத்திலும் சிக்கிக்கொள்ளாமல் திரும்பத் திரும்ப எதைப் பார்த்தானோ, எதை உணர்ந்தானோ, எது உள்ளே அசையாது, எந்தவித குணமும் இல்லாது இருக்கிறதோ அதை வலுவாகப் பற்றிக் கொண்டது.

இதை வேங்கடராமனுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். வேங்கடராமனுக்குக் 'குரு' என்று யாருமில்லை. தெய்வத்தையும் கை கூப்பி, 'இது வேண்டும்' என்று அவன் கேட்கவில்லை.

வெறுமே 'தான் யார்' என்று விசாரித் தான். உண்மையாக விசாரித்தான். சத்தியமான கேள்வியைக் கேட்டான். மிக சத்தியமாகத் தனக்குள் என்ன நடக்கிறது என்பதை முழு முனைப்புடன் சிந்தாமல் சிதறாமல் பார்த்தான். இது மிகப்பெரிய கொடுப்பினை; பூர்வஜென்ம வாசனை; பேரறிவாளனின் பேரருள்.

திருஞானசம்பந்தருக்கு அம்பாளிடமிருந்து கிடைத்த முலைப்பால் பிரசாதம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

உண்மையைப் பற்றி நிற்க, உள்ளே வெண்மை பரந்து பெருகும். எல்லா நிறத்துக்கும் ஒரு குணம் உண்டு. வெண்மைக்குக் குணமில்லை. எந்தக் குணமுமில்லாது வெறுமே நிற்கிறபோது, வெண்மை முழுவதுமாக ஆக்ரமித்துக்கொள்ளும்.

திருஞானசம்பந்தருக்குக் குளத்தில் மூழ்கிய தகப்பனைக் காணோம் என்றதும் உள்ளுக்குள்ளே ஏற்பட்ட அதிர்ச்சி, இந்த உண்மையை, வெண்மையைக் கொடுத்திருக்கக் கூடும்.

ஸ்ரீரமண மகரிஷி

தான் யார், தான் இறந்த பிறகு என்ன என்று ஒரு சிறிய அறைக்குள் மல்லாந்து படுத்த வேங்கடராமனுக்குள், உண்மையின் காரணமாக இந்த வெண்மை இறங்கிற்று. எப்போதோ நட்ட விதை முளைத்து மரமாய்க் கிளை பரப்பி, 'நட்டது நான்தான்' என்பது மறந்து போயிருக்கும் போது, மடியிலே விழுந்த கனி.

உள்ளுக்குள் ஒருவர் பார்த்தால் வெளி விவகாரங்களில் ஈடுபட முடியாதா. முடியும். உண்ணவும், உடுக்கவும், உறங்கவும் முடியும். ஆனால், இவை அனைத்தும் வேறு விதம். உண்ணும் உணவைக் கண் பார்த்து, மூக்கு முகர்ந்து, நாவில் ஜலம் ஊறி, வயிறு பசித்து உண்பது என்பது வெளித்தோற்றம். என்ன உண்ணுகிறோம் என்ற பிடிப்பின்றி ஓர் உணவை உட்கொள்வது என்பது ஒரு விதம்.

மனம் மனதைப் பற்றிக்கொள்ள, மற்றவை மறந்து போகும். மானத்தை மறைக்க ஏதோ உடுத்திக் கொள்ளுமே தவிர, அது அலங்காரம் காட்டாது. 'என்ன அழகு' என்று தன்னைப் பார்த்து வியக்காது; மற்றவர் முன் அலட்டாது.

அந்த உறக்கம் வேறு வகையானது. உடம்பு தூங்கினாலும் உள்ளம் விழித்திருக்கும். தன்னையே பார்த்திருக்கும். தூங்கும்போது தன் நிலை என்ன என்று இன்னும் தீவிரமாகத் தேடிக் கண்டுபிடிக்கும்; அனுபவிக்கும். அப்படிச் செய்வதால் வெளி நடவடிக்கை என்னவாகும். மனம் மெள்ள மெள்ளத் தளர்ந்துபோகும். மற்றவரை விட்டு விலகி நிற்கும். எந்த விஷயங்களிலும் ஆர்வம் காட்டாமல், அலட்சியம் செய்யாமல் ஒரு மிதமான போக்கையே கைக்கொள்ளும்.

வேங்கடராமன் எப்போதும் தனிமையை நாடினான். விளையாடுகின்ற ஆசை விலகியது. அந்த விளையாட்டில் வெறித்தனமாகப் போராடி ஜெயிக்கவேண்டுமென்ற மும்முரம் முற்றிலும் ஒழிந்தது. எல்லா முனைப்புகளும் உள்முகமாயின. அவன் ஏகாந்தமாக இருக்க விரும்பினான். ஆனால், உலகம் விடுமா. உலகம் விவகாரங்கள் மிக்கது.

''படி! பாடப் புத்தகங்களை எடுத்துப் படி. அதுக்குத்தானே பிறந்திருக்கே!'' - அண்ணா கடுமையாகக் கோபித்துக் கொள்வார். 'அப்படியா' என்ற கேள்வி வேங்கடராமனுக்குள் எழுந்தது. 'இதற்குத்தானா பிறந்திருக்கிறோம்!' என்ற ஆச்சரியம் பெரிதாகியது.

வேறு வழியில்லாமல் மற்றவர்களுக்காகப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொள்வான். மனம் புத்தகத்தில் லயிக்காது; புத்தகத்தின் விஷயங்களை உள்வாங்காது. அது, உள்ளுக்குள்ளே தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும்.

''தெருமுனைக் குழாய்க்குப் போய் இரண்டு தவலை தண்ணீர் எடுத்துண்டு வாடா!'' - சித்தி அழைப்பாள்.

முன்பு, வேங்கடராமன் இதற்காகச் சலித்துக் கொண்டது உண்டு; கோபித்துக்கொண்டது உண்டு. 'என்னை மட்டும் வேலை வாங்கறியே' என்று சித்தியைக் கடிந்துகொண்டது உண்டு. ஆனால், இப்போது அப்படியில்லை.

ஸ்ரீரமண மகரிஷி

தவலையைத் தூக்கிக்கொண்டு நிதானமாகத் தெருக்கோடிக்குப் போய், தண்ணீரை நிரப்பித் தோளில் வைத்துக்கொண்டு, வீட்டுக்கு வந்து, பெரிய அண்டாவில் ஊற்றி, மறுபடியும் போய் இன்னொரு தவலை சுமந்து... இப்படி இரண்டு, மூன்று தவலைகள் தண்ணீர் எடுத்து வந்து அண்டாவை நிரப்பி, தவலையையும் நிரப்பிக் கீழே வைத்துவிட்டு, மறுபடியும் புத்தகத்தோடு உட்காருவான்.

பகல் முழுவதும் அலைந்ததால் உண்டான அயர்ச்சி மேலிட, உடம்பைத் தரையில் கிடத்துவான். மனம், கிடத்தப்பட்ட உடம்பை வேடிக்கை பார்க்கும். அது உறங்காமல் உள்ளுக்குள்ளே எப்போதும் விழித்துக்கொண்டு இருக்கும். உடம்பு நன்றாக ஓய்வெடுத்தது. உள்ளம் அமைதியாக, எந்த உணர்வுமற்று, விழிப்பு நிலையில் இருந்தது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது.

பள்ளிக்குப் போகும்போது, ஆகாயத்தின் பிரமாண்டம் மனதைக் கவரும். எல்லாப் புராணங்களும் 'கடவுள் ஆகாயத்தில் தோன்றினார்' என்றுதானே சொல்கின்றன! இப்போது வரமாட்டாரா, வந்து எதிரே நிற்கமாட்டாரா, 'ரிஷபாரூடராக...' என்று பெரிய புராணம் அடிக்கடி சொல்கிறதே.. அப்படி, ரிஷபத்தின் மீது அம்மையோடு வந்து நின்று, 'வேங்கடராமா' என்று கூப்பிடமாட்டாரா, 'என்ன' என்று நாம் அவரிடம் ஓடமாட்டோமா என்று உள்ளே மனம் ஏங்கும்.

கோயிலுக்குள் போய் சந்நிதியில் நிற்கும்போது... வெறுமே விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டு அடுத்த சந்நிதிக்குப் போகவேண்டும் என்கிற மனதின் பரபரப்பு அடங்கிப் போயிற்று. கோயில் என்பது வேகமாகவோ வேடிக்கையாகவோ சுற்றுகிற இடமில்லை. சரியான மனநிலையில், சரியான இடத்தில் இருந்து, சரியானபடி தரிசனம் செய்தால், உள்ளுக்குள் இறை ஈடுபாடு கூர்மையாகும். பிரதிமை நடராஜரோ, அம்பாளோ யாராக இருந்தாலும், அந்தப் பிரதிமையின் மேன்மை, அது சொல்லும் விஷயம் நெஞ்சுக்குள் 'குபுக்'கென்று பற்றிக் கொள்ளும். கால் தூக்கி ஆடுகின்ற களி நடனம் என்னவென்று தெரியும். எல்லையில்லா ஆனந்தத்தை ஒரு சிற்பி இப்படித்தான் வடிக்கமுடியும் என்பது புரியும்.

மனம் மனதோடு பேசுவதுகூட ஒரு கூடல்தான்; மூச்சு உள்ளே புகுந்து வெளியே வருவதும் ஒரு கூடல்தான்; பார்வை ஒன்றின்மீது பட்டு ஒரு விஷயம் புரிவதும் கூடல்தான்; இரண்டு பேர் பேசுவதும் கூடல்தான்; வணக்கம் சொன்னாலும் கூடல்தான். வெயிலிலிருந்து மர நிழலில் ஒதுங்குவது, குளிரிலிருந்து வெப்பத்துக்குப் போவது எல்லாமே கூடல்தான். இதை எப்படிச் சொல்ல; எந்த வார்த்தையில் விவரிக்க!

ஆவுடையாரும் லிங்கமும் ஓர் அடையாளம்தான்; உலகம் முழுவதும் கூடிக்கூடி இடையறாது ஒன்றோடு ஒன்று கலந்துகொண்டிருக்கிற விஷயம் என்பதைச் சொல்லத்தான் இந்தப் பிரதிமை.

இந்த நினைப்பு உள்ளுக்குள்ளே தோன்ற, மனம் பரிதவித்து எழும். 'வா! வந்து என்னுள் புகுந்துகொள். என்னை ஆட்சி செய். என்னை மயக்கித் தனியே பித்தனாக விடாதே! என்னை முழுவதுமாகத் தின்று தீர்த்துவிடு' என்று கதறும். கண்ணீர் பெருகும். கைகூப்பி விம்மி விம்மி அழும்.

எதிரே, மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள சந்நிதிகளில்... வேங்கடராமன், உள்ளேயிருந்த 'தான்' என்ற இடத்திலிருந்து 'கடவுள்' என்ற இடம் நோக்கிக் கதறினான். அது அவலமான அழுகையில்லை; ஆனந்தக் கண்ணீருமில்லை. அது தானற்றுக் கிடக்கும்போது ஏற்படுகின்ற நிகழ்ச்சி; தானே எல்லாமுமானபோது ஏற்பட்ட பரவசம்.

- தரிசிப்போம்...