ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

பேசும் அரங்கன்!

பேசும் அரங்கன்!


தொடர்கள்
பேசும் அரங்கன்!
பேசும் அரங்கன்!
பேசும் அரங்கன்!
பேசும் அரங்கன்!

ந்திரங்கள் மகத்துவமானவை; இவற்றைக் காதாரக் கேட்பதற்கான வசதிகள் இன்றைக்கு அதிகம். ஆனால், 'ஓம் நமோ நாராயணா' எனும் அஷ்டாட்சர மந்திர உபதேசத்தைப் பெற, ஸ்ரீராமானுஜர் பட்ட கஷ்டங்கள் அதிகம்.

ஸ்ரீரங்கஸ்ரீயின் பொறுப்புக்கு வந்த உடையவர் எனும் ராமானுஜர், பெரியநம்பிகளிடம் த்வய மந்திரம் மற்றும் விளக்கத்தைக் கற்றறிந்தார். பெரிய நம்பிகள், ''இன்னும் சில மந்திரங்களை, ஆளவந்தாரின் அந்தரங்கச் சீடரான திருக்கோட்டியூர் நம்பியிடம் கற்றுக்கொள்'' எனக் கூறினார். அதன்படி, ஸ்ரீரங்கத்தில் இருந்த ஸ்ரீராமானுஜர், நம்பிகளிடம் மந்திரோபதேசம் பெற, திருக்கோட்டியூருக்குச் சென்றார். ஆனால், ராமானுஜரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை நம்பிகள். கனத்த மனதுடன் திருவரங்கம் திரும்பிய ராமானுஜர், அரங்கனிடம் முறையிட்டார். உடனே அரங்கன், திருக்கோட்டியூர் நம்பிகளிடம், 'நம் ராமானுஜனுக்கு ரகசிய அர்த்தங்களை உபதேசியும்' என அர்ச்சகர் மூலமாகத் தெரிவித்தார். ஆனால் நம்பிகளோ, 'நா ஸம்வத்ஸரவாஸிநே ப்ரப்ரூயாத்' என்றார்.

அதாவது... 'சீடனானவன், ஓராண்டு காலமேனும் குருவுக்குப் பணிவிடை செய்திருக்கவேண்டும். தவிர, தவம் புரியாதவருக்கும், இறைவனிடமும் குருவிடமும் பக்தி இல்லாதவருக்கும் உபதேசிக்கக் கூடாது' என சாஸ்திரங்களைக் சுட்டிக்காட்டினாராம் நம்பிகள். இதற்கு அரங்கன், ''சரீரம், பொருள், அறிவு, வசிக்குமிடம், செயல்கள், குணங்கள், பிராணன் ஆகிய அனைத்தையும் ஆச்சார்யனுக்காகவே எவன் அளிக்கி றானோ, அவனே சிறந்த சிஷ்யன். இவையனைத்தும் கொண்ட உடையவருக்கு உபதேசிப்பதால் எந்த தோஷமும் இல்லை'' என அருளினார். அதையடுத்து, தனக்கு எதிரே பரிதவிப்புடன் நின்ற ராமானுஜரிடம், 'ஊருக்கு வாரும்' என்று சொல்லிச் சென்றார் நம்பிகள். அதன்படி, திருக்கோட்டியூர் சென்ற ராமானுஜரை, 'இன்றைக்குப் போய், பிறகு வா' எனப் பலமுறை திருப்பியனுப்பினார் நம்பிகள். இப்படித் திருவரங்கத்துக்கும் திருக்கோட்டி யூருக்குமாக சுமார் 18 முறை நடையாய் நடந்தார் ஸ்ரீராமானுஜர். 'மந்திரோபதேசம் பெறும் பாக்கியம் கிடைக்காதா?' என ஏங்கினார்.

ஒருநாள், திருக்கோட்டியூர் நம்பியின் சீடர் ஒருவர், அரங்கனை தரிசிக்க வந்தார். அவரிடம், 'பூந்துழாய் முடியார்க்குத் தகவல்ல; பொன்னாழிக்கையார்க்குத் தகவல்ல' எனச் சொன்னார் ராமானுஜர். அதாவது, ''திருத்துழாயையும் (துளசி) பூவையும் தலையில் தரித்திருக்கும் சங்கு- சக்கரதாரியான உங்கள் பெருமாளுக்கு இது நியாயமா?'' என வருந்தினார். இதைக் கேட்டு கலங்கிய அந்தச் சீடர், தன் குருநாதரிடம் சென்று, உடையவரின் ஏக்கத்தைத் தெரிவித்தார். இதன்பிறகே, உடையவருக்கு உபதேசிக்கலாம் எனும் முடிவுக்கு வந்தார் நம்பிகள். தன் சீடரை அனுப்பி, 'தண்டும் பவித்திரமும் கொண்டு தனியருவராக வரச் சொல்' எனத் தெரிவித்தார். அதையடுத்து, தன் சீடர்களான முதலியாண்டான் மற்றும் கூரத்தாழ்வானுடன் திருக்கோட்டியூருக்குச் சென்று நம்பிகளை வணங்கினார் உடையவர். ''உன்னை மட்டும்தானே வரச்சொன்னேன்?!'' என நம்பிகள் கேட்க, ''ஆம். நான் மட்டுமே வந்தேன். இவர்கள், தண்டும் பவித்திரமுமாகத் திகழ்பவர்கள்'' என்றார் உடையவர்.

பிறகு, ''மந்திரம் மற்றும் அதன் அர்த்தத்தை எவருக்கும் உபதேசிக்கக்கூடாது'' என்று உடையவரிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு, நலம் தரும் ஸ்ரீநாராயண மந்திரத்தை- அஷ்டாட்சரத்தை, உபதேசித்தார் நம்பிகள். உடையவரின் மனம் நிறைந்தது!

மறுநாள்... திருக்கோட்டியூர் ஆலய கோபுரத்தில் நின்றபடி, ஸ்ரீநாராயண மந்திரத்தை உரக்க உபதேசித்தார் உடையவர்.இதையறிந்த திருக்கோட்டியூர் நம்பிகள் அதிர்ந்தார்; ராமா னுஜரை அழைத்து, ''சத்தியம் செய்துவிட்டு, குருவின் கட்ட ளையை மீறிவிட்டாயே!'' என கடுகடுத்தார்.

உடையவரோ நிதானமாக, ''ஆமாம். ஆச்சார்யரின் கட்டளையை மீறிய அடியேனுக்கு நரகம் உறுதி. ஆனால், இதனால் நான் ஒருவன் மட்டுமே நரகத்துக்குச் செல்வேன். நாராயண மந்திரத்தைக் கேட்ட மக்கள் அனைவரும் பரமபதத்தை அடைவார்களே! அதனால்தான் உபதேசித்தேன்'' எனத் தெரிவித்து, நம்பிகளை நமஸ்கரித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்த நம்பிகள், ''எம்பெருமானாரே... வாரும்!'' என ராமானுஜரை அருகில் அழைத்து, தம்மோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார். பிறகு அங்கிருந்த வைணவர்களிடம், ''இதுவரை திருமந்திரப் பொருள் பரம ரகசியமாக இருந்தது. இன்று முதல், இது 'எம்பெருமானார் தரிசனம்' என்றே அழைக்கப்படட்டும்'' என அருளினார். அதுவரை பிடிகொடுக்காமல் இருந்த திருக்கோட்டியூர் நம்பிகள், இந்தச் சம்பவத்துக்கு பிறகு ராமானுஜரை விடவே இல்லை. தாம் அறிந்த அனைத்தையும் அவருக்கு போதித்து அருளினார்.

பேசும் அரங்கன்!

ஆளவந்தார், தன் சீடர்களான பெரியநம்பி, திருக் கோட்டியூர் நம்பி, திருமலையாண்டான் நம்பி, திருவரங்கப் பெருமாளரையர் ஆகியோருக்கு ரகஸ்யார்த்தங்கள் சிலவற்றை தனித்தனியே உபதேசித்துள்ளார். ராமானுஜரின் அவதாரத்தை அறிந்து, தன் சீடர்களிடம் மந்திரார்த்த பொக்கிஷத்தை உபதேசித்து இதுபோல் அருளியிருந்தார் ஆளவந்தார். அவரின் சீடர்களும் அதனை சிரமேற்கொண்டு செய்யக் காத்திருந்தனர். ஆளவந்தாரிடம் நேரில் உபதேசம் பெறாததன் குறைகள் நீங்க... ஆளவந்தாரின் சீடர்கள், உடையவருக்கு ஆச்சார்யர்கள் ஆனார்கள்; முழு மனதுடன் உபதேசித்தனர்.

ஸ்ரீரங்கத்தில் அத்யயன உத்ஸவத்தின்போது, அரையர்களின் கைங்கர்யம் அதிகம் உண்டு. அப்போது அளவுக்கு அதிகமான வேலைப்பளுவால், அவர்கள் களைப்படைவது வழக்கம். ஒருமுறை அத்யயன உத்ஸவத்தின்போது, திருவரங்கப் பெருமாளரையரிடம், 'சரமோ உபாயம்' எனும் ஆளவந்தாரின் விளக்கம் குறித்து அறிய விரும்பிய உடையவர், அரையருக்குப் பணிவிடை செய்யத் துவங்கினார். அவருக்குத் தொண்டை வறண்டுவிடாமல் இருக்க, பால் காய்ச்சி, அத்துடன் விசேஷ திரவியங்களைக் கலந்து அடிக்கடி வழங்கினார். அதுமட்டுமா? ஆடிய களைப்பில் இருக்கும் அரையருக்கு மஞ்சளும், சீகைக்காயும், இதர மூலிகைகளுமாகச் சேர்த்து, எண்ணெய்க்காப்பிட்டு நீராட்டினார்.

ஒருநாள், திருவரங்கப் பெருமாளரையரின் திருமுகம் சற்றே பொலிவிழந்து இருப்பதை கவனித்தார் உடையவர். மஞ்சளும் மூலிகைகளும் கலந்த கலவையை விட்டுவிட்டு, வேறொரு பக்குவத்துடன் தயார் செய்து தந்தார். இதில் நெகிழ்ந்த திருவரங்கப் பெருமாளரையர், சரம புருஷார்த்தத்தைச் (ஸ்ரீமந் நாராயணன் குறித்து) சொல்ல முன்வந்தார்.

இந்த இடத்தில்... 'யதியானவர், அதுவும் ஸ்ரீரங்கஸ்ரீக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றவர் பணிவிடை செய்யலாமா?' எனும் கேள்வி எழலாம்.

'தீமனங்கெடுத்தும் மருவித் தொழும் மனமே தந்தும்,
அறியாதனவறிவித்த ஆசார்யனே உபாயோபேயம்'

மனதில் தீயவை வராமல் தடுப்பது, ஸ்ரீமந் நாராயணனைத் தொழுவது, மந்திரங்களை அறிவது, பரம்பொருளின் திருவடியை அடைவதற்கு வழிவகை செய்வது... என அனைத்துக்கும் ஆச்சார்யனின் திருவடிகளே காரணம்!

குருரேவ பரம ப்ரஹ்ம குருரேவ பரம் தனம்
குருரேவ பரகாமோ குருரேவ பராயணம்
குருரேவ பராவித்யா குருரேவ பரா கதி
யஸ்மாத் தது தேஷ்டாஸெள தஸ்மாத் குருதரோ குரு

குருவே பிரம்மம்; தனம்; காமம்; பொக்கிஷம்; கல்வி; ப்ராவகம். பரம்பொருள் குறித்து உபதேசிப்பதால், குருவானவர் பரம்பொருளைவிட உயர்ந்தவர்.

ஆளவந்தாரை ஆச்சார்யனாக வரித்துக்கொண்ட ஸ்ரீராமானுஜர், அவருடைய சீடர்களைத் தன் ஆச்சார்யர்களாகப் பெற்றார்; அவர்களுக்குக் கைங்கர்யம் செய்ததில் தவறேதும் இல்லை.

இன்னொரு விஷயம்... 'தாம் ஜீயர். தன்னிடம் அனைவரும் உபதேசம் பெறவேண்டும். தாம் எவரிடமும் எதுவும் கற்கத் தேவையில்லை; எவருக்கும் கைங்கர்யம் செய்யும் அவசியமும் கிடையாது' என்கிற கர்வமோ அலட்டலோ எதுவுமின்றி, எளிமையாக வாழ்ந்தவர் ஸ்ரீராமானுஜர். அவர் தேடியதும், அனைவருக்கும் அவர் வழங்கியதும் இறை எண்ணங்களை மட்டுமே! எதை வெளிப்படுத்த வேண்டுமோ, அதனை வெளியிட்டார்; எதைக் காக்க வேண்டுமோ, அவற்றை ரகசியமாகப் பேணிக் காத்தார்.

'சிஷ்யனாகிலும் ஆச்சார்யனாகிலும் பணிவும் தவிப்பும் தேவை' என்பதற்கேற்ப, ராமானுஜருக்கு முன்னேயுள்ள ஆச்சார்யர்கள், இவருக்கு குருவானார்கள்; அடுத்து வந்தவர்கள், சிஷ்யர்களாகும் பேறு பெற்றனர்!

- (அரங்கன் பேசுவார்)