திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் உள்ள ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குருபகவானை வழிபடுவார்கள். இந்நிலையில்தான் நேற்று ஏப்ரல் 14-ம் தேதி அதிகாலை இக்கோயிலில் குருப்பெயச்ர்ச்சி விழா வெகுவிமர்சையாகவும் பக்திப் பரவசத்துடனும் நடைப்பெற்றது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் அமைந்துள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயில், இந்திய அளவில் புகழ்பெற்றதாகும். சோழ வள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக இது விளங்குகிறது.
மேலும் இக்கோயிலானது... மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது. பாற்கடலைக் கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்தில் இருந்து காத்தமையால் இறைவனுக்கு 'ஆபத்சகாயேஸ்வரர்' என்ற திருநாமம் ஏற்பட்டதாக, புராணங்கள் பறைசாற்றுகின்றன.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்த கோயிலானது, நவகிரகங்களில் ஒன்றான குருபகவானுக்குரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய குருப்பெயர்ச்சியின் போது, இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த ஆண்டு குருபகவான் ஏப்ரல் 14-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை கும்பராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். குருபகவானின் அனுக்கிரகத்தைப் பெற, ஏராளமான மக்கள் இக்கோயிலுக்கு வருகை புரிந்து, சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு குருபகவானை தரிசித்தார்கள்.
இவ்விழாவை முன்னிட்டு முதல்நாள் மாலை இக்கோயிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து 108 கலசாபிஷேக யாக பூஜைகளும், குருபகவானுக்கு 108 கலச அபிஷேகமும் நடந்தது. குருபகவானுக்கு மகா அபிஷேகம் நடைப்பெற்று, தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. குருபகவான் பெயர்ச்சியடைந்த அதிகாலை 4.16 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் சந்நிதிகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
குருப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முதல் 10-ந் தேதி வரை இக்கோயிலில் முதல்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது. குருப்பெயர்ச்சி நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை ஏப்ரல் 18-ம் தேதியில் இருந்து 22 -ம் தேதி வரை நடைபெறவுள்ளது.