மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் நவ ஜோதிர்லிங்க தரிசனம் செய்யும் வகையில் சுற்றுலா ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கும்போது, "நவ ஜோதிர்லிங்க தரிசனச் சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து மார்ச் 3-ம் தேதி புறப்பட்டு திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக மார்ச் 5-ம் தேதி உஜ்ஜைனி சென்று சேரும். அங்கு பக்தர்கள் மகா காளேஸ்வரர் வழிபாடு செய்வர்.
பின்பு மார்ச் 6 அன்று நர்மதை நதியில் நீராடி ஓம்காரேஸ்வரர் தரிசனம் செய்யும் பக்தர்கள், மார்ச் 7 அன்று சோம்நாத் சோமநாத சுவாமியையும் மார்ச் 9 அன்று நாசிக் திரயம்கேஸ்வரரையும் தரிசித்து வழிபடுவர். பயணத்தில் தொடர்ந்து மார்ச் 10 அன்று பீம் சங்கர் பீம்சங்கர சுவாமியையும் மார்ச் 11 அன்று ஔரங்காபாத் குருஸ்ணேஸ்வரரையும் மார்ச் 12 அன்று ஔங்நாகநாதரையும் தரிசனம் செய்து வழிபடுவர்.

தொடர்ச்சியாக மார்ச் 13 அன்று பார்லி வைத்தியநாத சுவாமியையும் மார்ச் 14 அன்று ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமியும் தரிசனம் செய்து முடித்து மார்ச் 15 அன்று மதுரை வந்து சேர்வார்கள்.
ரயில் கட்டணம், உணவு, தங்குமிடம், உள்ளூர் பேருந்துக் கட்டணம் உட்பட நபர் ஒருவருக்கு ரூ 23,400 வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்துடன் குளிர்சாதன மூன்றடுக்குப் பெட்டியில் பயணம் செய்ய நபர் ஒருவருக்குக் கூடுதலாக ரூ 7100 கட்டணம் செலுத்த வேண்டும்.
இதேபோல் பிப்ரவரி 9-ம் தேதி சக்தி பீட சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு பிப்ரவரி 12 அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி, அலோபி தேவி தரிசனம், கங்கையில் புனித நீராடி விசாலாட்சி அம்மன் தரிசனம், கயாவில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜை செய்து மங்கள கௌரி தேவி தரிசனம், காமாக்யா தேவி தரிசனம், கொல்கத்தா காளி தரிசனம், காளிகாட், போளூர் மடம், தஷிணேஸ்வரர் தரிசனம், ஒடிசா கொனார்க் சூரிய கோயில், பூரி ஜெகந்நாதர் மற்றும் பிமலா தேவி தரிசனம் முடித்து பிப்ரவரி 21 அன்று ரயில் மதுரை வந்து சேரும். சக்தி பீட சுற்றுலா ரயிலுக்கான கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ 21,500 வசூலிக்கப்படும்.

இந்த சுற்றுலா ரயிலுக்கான பயண சீட்டு முன்பதிவு www.ularail.com என்ற இணையதளத்திலும், 7305858585 என்ற அலைபேசி எண் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்." என்று தெரிவித்தார்.