பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்துள்ளது. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நடைபெறும் தைப்பூசத் திருவிழா என்பதால் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜனவரி 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் வள்ளி தெய்வானை சமேதராக முத்துக்குமாரசுவாமி எழுந்தருள்வார். வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளல் நடைபெற்று நான்கு ரத வீதிகளில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு முன் பொற்சுண்ணம் இடித்தல், வாத்யபூஜை உள்ளிட்ட சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்குப் பால், பன்னீர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி எழுந்தருளிய வெள்ளித் தேர் நான்கு ரத வீதிகளில் உலா வந்தது.

இன்று மாலை தேரடியில் தேரோட்டம் நடைபெறவுள்ளது. சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. நிறைவு நிகழ்ச்சியாக பிப்ரவரி 7-ம் தேதி தெப்பத் தேர் உலா நடக்கவுள்ளது.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பக்தர்கள் இல்லாமல் எளிமையாகத் தேரோட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்து கலந்து கொண்டுள்ளதால் பழநி விழாக்கோலம் பூண்டுள்ளது.