ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தி பெற்ற ஶ்ரீசுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மதுரை அழகர் கோயிலில் நடைபெறும் அனைத்து விசேஷங்களும் நாள் தவறாமல் இந்தத் திருத்தலத்திலும் நடைபெறும்! அவ்வகையில் நேற்று கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

அழகுறை அமைந்துள்ளது ஶ்ரீசுந்தரராஜ பெருமாள் திருக்கோயில். மூலவர் பரமஸ்வாமி, உற்ஸவர் ஶ்ரீசுந்தரராஜ பெருமாள். ஶ்ரீகல்யாண சவுந்தரவல்லித் தாயார் சந்நிதி, ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி, திருமாளிகைப் பிரகாரம், கருட மண்டபம், அணி வெட்டு மண்டபம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவற்றுடன், உயர்ந்த ராஜகோபுரம் கம்பீரமாகத் திகழ வடக்கு முகமாக அமைந்துள்ளது இந்த ஆலயம். வெளியில் காவல் தெய்வமாம் கருப்பண்ண சாமி திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, நவகிரகம், ஆழ்வார்கள், நடன கோபால நாயகி சுவாமி ஆகியோரையும் தனித்தனிச் சந்நிதிகளில் தரிசிக்கலாம். சித்திரைத் திருவிழா இக்கோயிலின் சிறப்பம்சம்.
மதுரையில் நடைபெறுவதுபோன்று, அதே அளவு கோலாகலத்துடன் மிகச் சிறப்பாக இந்தத் தலத்திலும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் காப்புக் கட்டு நிகழ்வுடன் திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக... மதுரைக்கு இணையாக பரமக்குடியிலும் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

நேற்று அதிகாலை 4 மணிக்கு பட்டாடை உடுத்தி கள்ளழகர் பூப்பல்லக்கில் பவனி வந்தார். இந்த பட்டு ஆடையை கள்ளழகர் அணிந்து வந்தால் நாடு செழிக்கும் என்பது ஐதீகம்! கோயிலிலிருந்து பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த கள்ளழகர், நிறைவில் வைகை ஆற்றில் இறங்கினார். அப்போது ’கோவிந்தா’, ’கோவிந்தா’ என பக்தர்கள் கோஷமிட்டது மெய்சிலிர்க்க வைத்தது!